நம் குரல்

'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன் வைத்து! - 3


மகள்களைப் பெற்ற அப்பாக்களாலேனும் இதன் கொடூரத்தை உணரமுடியுமா?





இந்தியா என்பது, தமிழகத்தைத் தவிர்த்தது இல்லை.
தமிழகத்தில், பொதுவெளியில், சமூகவலைத்தளங்களில், பெண்களை, 'மூதேவி', 'தேவடியாள்', 'வாழாவெட்டி', 'வைப்பாட்டி' என்ற அடைமொழி கொடுத்து அழைப்போர் கூட கல்வி பெற்ற அரும்பெரும் ஆண்மகன்கள் தான்.
அவர்களுக்குப் பின் விசிறிகள் வரிசையாய், கூட்டங்கள் பெரிதாய். இங்கே, பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுப்போர் கூட, அப்படியான ஆண் ஆளுமைகளை வரவேற்றுப்பாராட்டிப் பொது அரங்கில் உயர்த்துவது நிறைய விடயங்களை உறுதி செய்கிறது.
1. ஓர் ஆண் சமூகத்தில் சிறந்த படைப்பாளியாக இருக்க, பெரியாரைப் போல சுயமரியாதையுடன் இருக்கவேண்டியதில்லை.
2. குறைந்தபட்ச, சமூக நாகரீகமும் தன்மான உணர்வும் விழிப்புணர்வும் அவசியமில்லை. ஊடகங்களில் அங்கீகாரம் பெற, அவையெல்லாம் அவசியமே இல்லை. காட்டுமிராண்டிச்சிந்தனைகள் போதுமானவை.
3. இந்து மதம் வலியுறுத்தும் அடிமைத்தனத்தை நாங்கள் எங்கள் மனைவி, மக்களிடம் வலியுறுத்துவது போலவே, பிற பெண்களிடமும் அச்சுறுத்துவோம் என்று பொதுப்படையாக, எழுத்திலும் சினிமாவிலும் தொடர்ந்து முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.


ஆனால், தொடரும் கடந்த கால நிகழ்வுகளின் பின்னால் எல்லாம் எனக்கு மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் இவையே:
இப்படி, பொதுச்சமூகத்தின் பார்வையால் 'தான் பெற்ற மகள்' வன்புணர்வுக்கு ஆளாக நேரும் போது, பெற்ற தந்தையான இவர்களின் உணர்வு எப்படியாக இருக்கும்?
இன்று ஆண்களிடம் இவர்கள் நியாயப்படுத்தும் வன்முறையைத் தன் மகள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும்போது ஏற்படும் வலியைப் பார்த்துத் துடித்துப்போகாமல், இவர்கள் மீதே பெட்ரோலை ஊற்றி எரிப்பார்களா?
மகன்களைப் பெற்றோரை விட, மகள்களைப் பெற்றோர்களால் இச்சமூகமாற்றத்திற்காக ஒரு கணமேனும் சிந்திக்காமல் இருக்கமுடியுமா?
மகள்களைப் பெற்ற அப்பாக்களாலேனும் 'பாலியல் வல்லுறவின்' கொடூரத்தை நியாயப்படுத்தாமல் இருக்கமுடியுமா? அந்தத் துன்பியலைப் புறக்கணிக்கமுடியுமா?
இவர்களாலேனும், சமூகத்தில் இந்த வன்முறை எப்படி உற்பத்தியாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியுமா?


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: