நம் குரல்
கவிதை ஒரு மோகனமான கனவு
எனது ஐந்தாவது கவிதைத் தொகுப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். பூனையைப் போல அலையும் வெளிச்சம், முலைகள், தனிமையின் ஆயிரம் இறக்கைகள், உடலின் கதவு ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின் வரும் இத்தொகுப்பு என்னை அதிகமும் வேலைவாங்குவதாக உணர்கிறேன். முதல் மூன்று தொகுப்புகளும் மூன்றாவது பதிப்பையும் நான்காவது தொகுப்பு இரண்டாவது பதிப்பையும் அடைந்துள்ளன. முதல் இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்கும் வெளியீட்டு விழாவை வைத்த நான் அதற்குள்ளாகவே தமிழக நவீன இலக்கியத் தளத்தில் நிகழும் வெளியீட்டு விழாக்களின் அரசியலையும் அதிலும் குறிப்பாக கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கான இடமின்மையையும் உணர்ந்திருந்தேன். அச்சுக்குப் பின் நேராக தொகுப்புகள் கடைகளுக்குச் சென்று விடும். அங்கிருந்து ஒவ்வொன்றாக வெளியேறும். எழுதித் தொகுப்பதுடன் சரி அதற்குப் பின் அந்நூலின் வியாபாரத் தளங்களில் என் அக்கறையைக் கிஞ்சித்தும் செலவிட்டதில்லை.
ஆனால் கவிதைகளைத் தொகுத்து நூலாக்குவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான வேலை. அதற்கான முழுப்பயிற்சியையும் எனது முந்தைய பதிப்பாளரும் நண்பருமான வேணுகோபால் அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதாவது என் மனோவெளி அது இயங்கும் தளத்தின் எல்லையை எட்டும் வரை என் கவிதைகளைத் தொகுப்பாய் ஆக்கும் எண்ணம் எனக்கு எழுவதே இல்லை. அத்தகைய எண்ணம் உருவாகும் வரையிலும் நான் தீவிரமாய்க் காத்திருக்கிறேன். பின்பு, அந்தக் காலகட்டக் கவிதைகளை மட்டுமே எடுத்து வேணுகோபால் அவர்களுடன் அமர்ந்து வரிசைப்படுத்துவேன். அவற்றினிடையே கோர்வையையும் அர்த்தப்பாட்டையும் நாவலின் உள்ளே ஓடும் சரடைப் போலவே மையமான கருத்து மற்றும் சந்த லயத்தைக் கண்டு அதன் படி அடுக்கிமுடிப்பேன். முன் பின்னாக கவிதைகளின் கால மைல்கள் மாறி விழும். இன்னும் தயவு தாட்சண்யமின்றி அந்த சிறப்பான லயத்தில் பொருந்தாத அர்த்தம் தொனிக்காத கவிதைகளைத் தூக்கி எறிந்து விடுவேன். அது வரை அத்தொகுப்பிற்கு இருவருமே தலைப்புகளை நியமித்திருக்க மாட்டோம். பின்பு அத்தொகுப்பின் மையமான கவிதையின் தலைப்பையோ அல்லது சாராம்சத்தின் சாணை தீட்டப்பட்ட சொற்கோர்வையையோ தொகுப்பின் தலைப்பாய்ச் சூடுவேன். இதில் எங்கள் இரண்டு பேருக்கும் வெகுநாளைய வாக்குவாதமும் கருத்துவேறுபாடும் முரண்பாடுகளும் ஓடிப்பின் ஓரிடத்தில் அதன் சுழலுக்குள் இருவரும் சிக்கித் தலைப்பை ஆமோதிப்போம்.
தொகுப்பு தயாரானதும் அதன் தலைப்பிற்குப் பொருத்தமான அட்டை வடிவமைப்பை என் நண்பர் சீனிவாசன் செய்து தருவார். தலைப்பின் கருப்பொருளுக்கான அக அழகியலின் புற வெளிப்பாட்டைச் சென்றடைவதற்கான உத்தி இது. இதற்குள்ளாக அந்தக் குறிப்பிட்ட தொகுப்பு என்பது என்னுள் ஒரு முழுவடிவினை எய்தி நீந்தத்தொடங்கி இருக்கும். அதன் மொழிஅசைவுகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டு நழுவிச்செல்லும் நாட்களின் மீதான மோகனத்துடன் அத்தொகுப்புப் பணிகள் நிறைவை எய்தும். ஆனால் இந்தத் தொகுப்பை ஆக்கும் பணியை நான் தனியே செய்யவேண்டியிருக்கிறது. கவிதைகளின் அந்தரங்க உலகத்தில் நான் மட்டிலுமே மீண்டும் மீண்டும் மூர்க்கமாய்ப் பயணிக்க வேண்டியிருக்கிறது. என்னிலிருந்து உருவானவை என்றாலும் என் மனோவெளியின் கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் நான் மிகுந்த எச்சரிக்கையான உணர்வுகளுடன் நுழைய வேண்டியிருக்கிறது. மாயாஜாலக் கதைகளில் வரும் குகைக்கதவுகள் மூடப்படும் வரையிலுமே குகைகளின் ரகசியங்களை அறிந்திடும் அவகாசத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் போன்ற சம்பவங்களைப் போல கவிதையைத் தொகுப்பதும் ஆகிவிடுகிறது எனக்கு.
குட்டி ரேவதி
குறிப்பு: கவிதை ஒரு மோகனமான கனவு என்பது புதுமைப்பித்தனின் வரி.
தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் - 2
எனது முந்தைய பதிவின் தொடக்கமாய் கவிஞன் பிரமிளின் கீழ்க்கண்ட கவிதையைக் கண்டெடுத்தேன். படித்துப் பாருங்களேன்..
பாரதிக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்
“வெள்ளம் போல்
கவிப் பெருக்கும்
கலைப் பெருக்கும்
மேவுமாயின்
பள்ளத்தே
விழுந்திருக்கும்
மனிதர் எல்லாம்
விழி பெற்று
பதவி கொள்வாரே”
என்ற பாரதியாரே
உமக்கு
நன்றாய் வேண்டும்!
வெள்ளம் போல்
சினிமாக் கவிபெருகி
ரோதனைச் சுழலாகி
அமைதி வெளிபடர்ந்த
கழனி நிலப்பரப்பை
காடு மேடுகளை
கம்பி வைத்து எட்டி....
மெளனக் குகையினுள்
தனிமைக் கருணை
சிதற
இயல்புணர்வில்
விஷநீர் ஏறி உள்ளம்
பேயாகி அலற...
உமக்கு வேண்டும்!
கபந்தனின்
இடையறாப்பசி
இடையறாச் சினிமா
வாந்தி வித்தையாய் மாறி
செலுலாயிட் கலை
சுருள் சுருளாய் கக்கி
கொட்டகை நிரம்பி
விழி வழிய..
உமக்கு
இது வேண்டும்
இன்னமும் வேண்டுமா?
வாரா வாரம்
கிளு கிளுத்துத் தொடர்கிறது
செக்ஸ் மேனி
சோழ ராணி.
இன்று
பள்ளத்தே
விழுந்திருக்கும்
மனிதர் எல்லாம்
பாதாளமே
பதவி என்றும்
மாலைக் குருட்டுக் கண்
மேலும் இருள,
விரல் நுனித் தடவலே
விளக்கு என்றும்
தலைகீழாய் குழி தோண்டி
தம்மைப் புதைத்தபடி
மலையேறுகிறோம் என்று
மார் தட்டுகின்றார்கள்.
கருணை முகில் கலைந்து
எட்டாத உச்சியில்
ஒதுங்கிக் கொண்டிருக்கிறது
உச்சி இரவின்
மதியம் தகித்து
மண்மாரி பெய்கிறது
புலன் காணாப்
புயல் வெளி
கத்தாழை நிழல் தேடி
பதுங்குகிறது...
திருப்தியா?
-பிரமிள் (மகத்துவ இலை, விமர்சனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து..)
தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள்
19th Step திரைப்படத்திற்காகத் திரைக்கதை ஆக்கத்தில் ஈடுபடும் வாய்ப்பும் அனுபவமும் முதன்முதலாகக் கிடைத்த போதுதான் திரைத்துறைக்கான எனது ஆர்வத்தை வெளிப்படுத்த முடிந்தது. 1995 முதலே சர்வதேசத் திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு உலகத்திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்டிருந்த எனக்கு திரைப்படத்தில் கதை சொல்லல் திரைக்கதைக் கட்டமைப்பு குறித்த வேறுபட்ட பார்வைகளும் உருவாகிக்கொண்டே இருந்தன. சென்ற நூற்றாண்டில் மனிதனை மிகவும் அசரச்செய்த ஊடக வடிவம் சினிமாகவே இருந்திருக்கிறது. ஒரு பிரமாண்ட படமாக உருவெடுக்க இருந்த 19th Step சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் என் பணிகள் உதவி இயக்குநராகவும், திரைக்கதை ஆக்கத்தில் உதவியாளராகவும் பாடல் எழுதுபவராகவும் இருந்தன. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இரு பாடல்களும் பதிவு செய்யப்பட்டன. அப்பட வேலையின் போது எனக்கேற்பட்ட அனுபவங்கள் என்னை இன்று அத்துறையில் தொடர்ந்து ஈடுபடத்தூண்டியிருக்கிறது.
தமிழ்த் திரைப்படங்கள் குறித்த எனது விமர்சனப் பார்வைகள் கடுமையானவையாகவும் அவற்றைப் பற்றி பல சமயங்களில் விமர்சிப்பதே அபத்தம் என்றும் விலகியிருந்திருக்கிறேன். சினிமா என்பதன் பரிமாணமே தெரியாதவர்களும் திரைப்படங்களைப் பார்க்கவும் அணுகவும் ஊக்கமற்றவர்களுமே கதை வசனம் எழுதுபவர்களாக மாறியிருப்பது கூட இன்றைய தமிழ் சினிமாவின் பெருஞ்சோகம். வெற்றி பெற்ற திரை இயக்குநர்களாக மதிக்கப்படும் அமீர், பாலா போன்றவர்களின் சமூக அவதானிப்பில் இருக்கும் பொத்தல்களையும் திரையில் உணராமல் இருக்க முடியவில்லை. சீமான் போன்றவர்களின் படங்களில் ஒரே காட்சியில் வலமிருந்து இடம்வரை இடம்பெறும் தேவர், பெரியார், சேகுவேரா, அம்பேத்கர் படங்களையும் ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடின்றி இருப்பதையும் எண்ணி நொந்து கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. ஆயிரம் ஆயிரம் உதவி இயக்குநர்கள் மண்டியிருக்கும் கோடம்பாக்கத்தில் வெற்றி பெற்ற இயக்குநர்கள் கொண்டிருக்கும் சமூக அளவீடும் அக்கறையுமோ மிகவும் மேம்போக்கானவை, மேலோட்டமானவை. ஒரு காலத்தில் இவர்களும் உதவி இயக்குநர்களாய் கோலிவுட்டை வலம்வந்தவர்கள் தாம் என்றாலும் இயக்குநர்கள் ஆவதற்காகவே வந்தவர்கள். திரைப்படங்களை ஆக்குவதற்கு வந்தவர்கள் அல்ல.
அதாவது, சமூகத்தை ஊன்றிக் கவனித்தலும் உள்ளார்ந்த சமூக ஓட்டங்களைப் படம் பிடித்தலுமே திரைப்படம் என்பதின் பயன்பாடாக இருக்கமுடியும். கலைவெளிப்பாடாக இருக்கமுடியும். பாலா, சசி, அமீர் போன்றவர்களின் வெற்றிப்படங்களைப் பார்த்த பின்பு கலைப்படங்கள், வணிக ரீதியான படங்கள் என்ற எனது வகைப்பாட்டிற்கான வரையறைகள் குறித்த நீண்ட நாள் தேடல் முடிவுக்கு வந்தது. தங்களின் மனோவெளியில் சமூகவாசிப்பைத் தொடர்ந்து நிகழ்த்தாதவர்களால் திரைப்படங்களை கலை ஊடகமாகக் கையாள முடிவதில்லை. அதனால் ஏற்பட்ட கோழைத்தனமே தான் ஒரு கமெர்ஷியல் படம் எடுக்க விரும்புவதாகப் பறைசாற்றிக்கொள்வது. இவை இரண்டுமே வேறுவேறு படவகைகள் இல்லை. தங்கள் மூளையைக் கசக்காமல் மற்றவர்களின் பாக்கெட்டுகளைக் கசக்கி பணம் பிடுங்கும் வேலையை இன்றைய தமிழ்சினிமா தொழிற்சாலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. அதாவது, சமூக அக்கறையுடன் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணும் இவர்கள் எவரும் சமூகத்தின் ஆழம் வரை தங்கள் புரிதல் எட்டுவதை அனுமதிப்பதில்லை. தங்கள் மூளை வளர்ச்சியைத் தாங்களே கத்தரித்துக்கொள்வார்கள் போல. இத்தகைய சமூகப்புரிதலுக்கான உழைப்பை தொடர்ந்த ஒரு பயிற்சியாக இவர்கள் மேற்கொள்ளாத நிலையில் இவர்களின் திரைப்படங்களும் என்ன தான் வெற்றிப் படங்களாயிருந்தாலும் சமூகச்சாரம் அற்ற படங்களாகவும் கலைப் படைப்பாகாதப் படங்களாகவும் இருக்கின்றன. சமூகத்தின் போக்கை ஆழமாக வாசிப்பவர்களின் பிரக்ஞை எப்போதும் தொட்டனைத்தூறும் மணற்கேணியாக இருந்து தாகமாற்றக் கூடியதாக இருக்கும். ஊனமுற்றவர்கள் மீதும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் அக்கறையுடனிருக்கிறேன் பார்! என்று வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து நிற்காது அல்லது, குடும்பம் மதம் சாதி அரசு போன்ற நிறுவனங்களின் அதிகார அடக்குமுறையையே திரைப்படங்கள் வழியாகச் வழிமொழியும் கைக்கூலி வேலையையும் செய்யாது. ஆனால், இவர்கள் சமூக அக்கறையுடைய படங்களை இயக்கப்போவதாக செயற்கையான கதைகளையும் கதை மாந்தர்களையும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான கருத்துகளையும் சித்தரிக்கின்றனர். அவை மக்களின் பொதுப்புத்திகளுக்கு நல்ல மேய்ச்சல் வெளியாகின்றன. தியேட்டர் அரங்கங்களுடன் தமது வெளிச்சத்தை முடித்துக் கொள்கின்றன. அடிப்படையில் இயக்குநர்களின் மனநிலையில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்பது இப்போதைக்கேனும் தங்கள் பொதுப்புத்தியை கழற்றி வைத்து விடுவதே என்று தோன்றுகிறது.
வெப்பம்
வெயிலின் தடங்கள் அறைகளாகிச் சுவரறைந்த வீட்டில் இரு வேறு உடல்களாகித் தளும்பினோம். கட்டிலின் கீழ் மெல்லிய அழுத்தம் முனகுவதைச் சுவர்களால் காது பொத்திக் கொண்ட அறைகள். மீனாகி இயங்கினாய். எலும்புகளின் செங்கல்களால் தசைகளைப் பிணைத்தாய். நொறுங்கி அவை இடம்பெயர்ந்து கூவி இறக்கைகளை வீசி வெளியேறின ஜன்னல் வழியே. அறைகளை உடலென்று ஆக்கிய மாளிகை அது. தூண்களைப் பற்றி உத்திரமேறும் பார்வைகளின் தோட்டம். குருவிகள் கூடடைந்த கண்களும் நீருக்குள் பாசிகள் அலையும் குளமும் உனது. பசும்புல்வெளி மூர்ச்சையடைந்து களைத்திருந்த உனது முன்னுடல் எனக்குத் தீரமாகியது. நெஞ்சில் வளர்த்து வந்த என் தாலாட்டுப் பாடல்கள் அங்கே உன்னெஞ்சோடு முனகி அடங்கின. ஊடுருவிய மேகங்களை கோடையின் வெப்பம் உடலாகி இயங்கிய அறைகளின் தோல்மடிப்புகளைச் சுட்டது. சுட்டுக் கொண்டே இருந்தது. மெல்லிய கீறல் வழியாக வழிந்த உனது அருவியின் உக்கிரமோ உச்சி வரை மூழ்கடித்தது. உடலின் சமுத்திரம் தீராத அலைகளால் ஆர்ப்பரிப்பது என்று நீ முன்னமே சொல்லியிருந்ததால் கண்களைக் கலங்களாக்கி என் திசையைச் சேர்ந்தேன்.
குட்டி ரேவதி
நன்றி: உள்ளுறை
எனது உடல் இரைச்சலுடைய நகரம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலில் இருந்து ஒரு நேர்காணல், சென்னையுடனான எனது தொடர்பு பற்றியும் உறவு பற்றியும். சில சமயங்களில் இம்மாதிரியான நேர்காணல்கள் சுவாரசியமான பகிர்தல்களைக் கொண்டிருக்கும். ஆனால் அது மிகவும் எதிர்பாராதது. எல்லா சமயங்களிலும் அப்படியே அமையும் என்றும் சொல்வதிற்கில்லை. நேர்காணல் செய்பவர்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்களோ அதைப் பொருத்து விரிவாயும் நுட்பாயும் பதிவாகும். மேற்குறிப்பிட்ட நேர்காணல் அம்மாதிரியானதாக இல்லாமல் போனது.
என்றாலும் சென்னையுடனான என் உறவு கடந்த பத்து வருடங்களை மட்டுமே கொண்டது. நமது உடல் வேகமான மாற்றங்களுடன் வளர்ச்சியடையும் பருவத்துடன் தொடர்புடைய ஊர்களும் நகரங்களும் வீடுகளும் கட்டடங்களும் தாம் நமது புனைவுகளிலும் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அவ்வாறு என் கவிதைப் பக்கங்களையும் ஆளுமையையும் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது சென்னை. தன்னுடலை ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்கப் புத்தாய்வு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதைப் போலவே தான் வாழும் நகரத்தையும். எந்தக் கணத்தில் உடலும் நகரமும் வேறு வேறாகக் கிளைக்கின்றன என்பதைக் கண்டறியாத ஒருமை உணர்வை அடைந்துவிடுகின்றன. பல சமயங்களில் இந்நகரத்தைப் பற்றி எழுதப் போய் அது என் உடலின் வெளியாகவும் உடலின் பண்பை எழுதப் போய் அது நகரமாகவும் முடிந்திருக்கிறது. அதாவது, எனது உடல் இரைச்சலுடைய ஒரு நகரம் என்றும் கடலுக்குள் எந்நேரமும் இறங்கக் காத்திருக்கும் நகரம் என்றும் இவை அர்த்தம் பெற்றிருக்கின்றன என் கவிதைகளில். உடலரசியலுக்கான கேள்விகளை நாள்தோறும் கிளறிக் கொண்டேயிருக்கும் தன்மைகளைக் கொண்டது, சென்னை. ஆணின் உடலும் பெண்ணின் உடலும் அவற்றின் தனித்தன்மைகளை இழந்து தட்டையாகும் தருணங்கள் நிறைய நிறைய. உடையில், உடல் மொழியில், இயக்க ஆற்றலில், இருப்பை நிறுவுவதற்கான போராட்டத்தில், படைப்பாக்க வெளிகளை நிர்மாணிப்பதில், அரசியல் மொழிதலில்... என ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே விதமான சவால்களை தட்டுகளில் பரிமாறுகிறது இந்நகரம்.
சென்னையில் ஒரு பெண் பலவகையான உறவுகளைக் கொண்டிருந்தாலும் தனியே வாழ இயலும். தனியே தன் ஆளுமையை வளர்த்தெடுத்துக் கொள்ள இயலும். விருப்பமில்லையென்றால் நகரத்தின் இரைச்சல்களுக்குள்ளும் இடிபாடுகளுக்குள்ளும் சென்று பதுங்கிக் கொள்ள இயலும். நாள் முழுக்க எந்த வேலையும் செய்யாமல் சென்னையெங்கும் சுற்றி வந்து இளைப்பாற இயலும். ஒரு கவிதைத் தொகுப்பு முழுவதையும் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் இயங்கும் சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் அமர்ந்து எழுத முடியும். பகலெல்லாம் தூங்கி இரவு முழுதும் பணியாற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்ற முடியும். எல்லா துயரங்களையும் கடலிடம் சென்று முறையிட முடியும். கோடையின் ஒவ்வொரு நாளையும் கடற்காற்றால் விசிறிவிட முடியும். ஆனால் இது மட்டுமே சென்னை அன்று. வட சென்னையை சென்னை என்னும் ஊர்ப்பெயர் தன் தோள்களில் சுமந்து வருவதே இல்லை. ஆனால் தென் சென்னையையும் மத்திய சென்னையையும் ஒளிரச்செய்வது வடசென்னை வாசிகளின் உழைப்பும் உற்பத்தி முறைகளும் தாம்.
சென்னையில் எவ்வளவு நாட்கள் பழகிய நண்பர்கள் என்றாலும் ஒவ்வொரு முறை அணுகும் போதும் அறிமுகமாகாத அந்நிய மனிதரைப் போலவே தோன்றுவர். விதையுடன் ஒட்டாத தோலாக மனிதர்கள் திரியும் நகரம் என்றும் சென்னையை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். சென்னையின் அரசியல் நகைச்சுவைக் காட்சிகள் நேரடியாக நம்மை வந்து தாக்குவதும் கூட சோகமானது. நடுநிசிகளில் இரயிலில் பயணிக்கும் பெண்கள் சாமான்யமானவர்கள் அல்ல என்று தோன்றினாலும் இதுவே தினப்படி வாழ்க்கை. இரவில் மேம்பாலங்களின் ஓரங்களில் அயர்ந்து உறங்கும் அழுக்கு மனிதர்களின் கற்பனையில் சென்னை என்பது என்னவாக இருக்கும் என்பதை அவர்களின் கற்பனைக்கே விட்டுவிடலாம்.
விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியிலிருந்து பெண்களுக்கான காலாண்டிதழ் ஒன்று, ‘பிடாரி’ எனும் பெயரில் வெளிவருகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் கு.உமாதேவியின் கவிதை இது:
உள்ளூர் அகதிகள்
கஷ்டத்த குத்தாத்தான் புளுவரன்னு அர்த்தம்
காத்தால ஊட்டாண்ட டக்குன்னு வந்துடு
கச்சிதமாக செவ்வியல் பேசும் தொண்டை நாடு
பறைமார்கள் துரைமார்களோடும்
துரைமார்கள் பார்ப்பனர்களோடும்
இனக்கலப்பு செய்த
குட்டி நாடு
மதராஸ் பட்டிணம்
பறையர் பட்டிணமென்றும்
மதராஸ் பட்டிணம்
பட்டம் சூடி திகழ்ந்தது
அது எங்கள் கந்தசாமி பாட்டன்
வெள்ளையர்களுக்கு
கறிசமைத்துக் கொடுத்த காலம்
- குட்டி ரேவதி