நம் குரல்

திரைவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு சினிமா என்ன செய்யவேண்டும்?



நண்பனுடனான வழக்கமான சண்டை. ஒவ்வொரு சினிமாவின் திரைக்கதையையும் கதாப்பாத்திரச் சித்திரிப்பையும் அக்குவேறாக ஆணி வேறாகப் பிரித்துச் சலிக்கும் முயற்சி. சமீபத்தில் வெளிவந்த ஒவ்வொரு தமிழ்ப்படமும் எங்கள் நாவில் உருண்டோடிப் பற்களால் அரைபட்டுக்கொண்டிருந்தன. நடுத்தர சினிமா என்று ஒரு வகை சினிமா உருவாகிக்கொண்டிருக்கும் போக்கை இன்றைய தமிழ்ச்சினிமா உலகம் நியாயப்படுத்துவதை அவன் அறிந்திருந்தாலும் அது ஒரு சரியான போக்கா என்ற எண்ணம் அவனைக் குழப்பிக்கொண்டிருந்தது. இயக்குநராகும் இலட்சியம் கொண்ட அந்த நண்பன் தினமும் சினிமாவின் ஏதோ ஒரு திசையிலிருந்து தனது உரையாடலை ஆரம்பிப்பான். பல நூறு கிளைகளாகப் பிரிந்து எங்கள் உரையாடல் கிளைத்துக் கொண்டே போய் நாங்கள் ஆசுவாசம் அடையும் பொழுது எங்களின் பொதுவான குணம் என்பது சினிமாவின் மீதான ஈர்ப்பாகவும் அக்கறையாகவும் இருந்ததைக் கண்டுகொண்டோம்.


ஒரு சினிமா என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டடைந்தால் நல்லசினிமா, கெட்ட சினிமா, நடுத்தர சினிமா, கலை சினிமா, வியாபார சினிமா என்ற வகைகளைப் பற்றிய ஒரு தெளிவுக்கு வரலாம் என்ற எங்கள் முயற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது. பொதுவாக எனக்கு நடுத்தர சினிமா என்று ஒரு வகை இருக்க முடியாது என்ற அபிப்பராயம் உண்டு. ஓர் இயக்குநர் தனது சினிமாவை வியாபார வகையோடு இணைத்துப் பேசினால் கூட அவரை நம்பலாம். ஏனெனில் அவர் சினிமா என்பதை பொருளாதார ஊடாட்டம் ஆதிக்கம் பெற்ற தளம் என்பதை அறிந்திருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அல்லது தான் ஓர் ஒப்புயர்வற்ற இயக்குநர் என்று கூறிக்கொண்டே மசாலாவைத் தராத நேர்மையாளர் என்ற அற்ப சந்தோசமேனும் பிறக்கிறது. ஆனால் நடுத்தர சினிமாவைத் தருகிறேன் என்று சொல்லும் இயக்குநர் தனது அரைவேக்காட்டு நம்பிக்கைகளை வாழ்க்கையின் நெறிகள் என்று காட்சிப்படுத்துவதுடன் மக்களின் மனதைச் சலவை செய்யும் தந்திரத்தையும் தன் வசம் வைத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


நடுத்தர சினிமா என்பது ஒருவர் அக்கலைவடிவத்தின் முழுப்பரிமாணத்தையும் அறியாமல் பிதற்றுவது. அல்லது அதன் முழு வடிவத்தையும் கற்பனைசெய்ய நேரும்போது உண்டாகும் பீதி. அந்த வடிவத்தின் முழுமையை நோக்கி உய்து பெறுவதற்கான எழுச்சியற்ற மடித்தனம். இத்தகைய சினிமா மனிதனுக்குத் தந்தது தட்டையான படிமங்களும் சில மணி நேர புல்லரிப்புகளும். உலகுக்குத் தந்தது இன்னும் கொஞ்சம் குப்பைகள். நினைவுகளின் கழிவை மீண்டும் மீண்டும் செரிக்கச் சொல்லும் நோய்த்தன்மை. பெரும்பாலான இயக்குநர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் ஆணாதிக்க ஊடகமாக சினிமா இயங்கும் கட்டத்தில் எல்லா இயக்குநர்களும் பெரியவர்களாக வளர்ந்துவிட்ட பதின்பருவத்து ஆண்களின் விடலைத்தனமும் சித்தாந்தங்களும் உடையவர்களாய் இருக்கின்றனர். அத்தகைய காட்சிகளே இன்று நமது அன்றாட நினைவைப் பீடித்து இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.


சினிமா மனித மூளையில் ஏற்கெனவே பதிவாகியிருக்கும் நினைவலையை அழித்து பிறிதொரு நினைவைப் பதிக்கிறது. ஆகவே ஒரு சினிமா என்பது மனித மனத்தின் நினைவை அழிக்கும் முயற்சியைச் செவ்வனே செய்யவேண்டும். அவன் மனவெளியில் செருகிக்கொண்ட முள்ளைப் பக்குவமாக எடுத்து வெளியே எறியவேண்டும். அவன் பிரக்ஞைக்கு எட்டாமலேயே இந்தச் செயலைச் செய்யக்கூடியதில் சக்தி வாய்ந்த கலைகளில் முதன்மையானதாக சினிமா உருக்கொண்டிருக்கிறது. இக்காலக்கட்டத்தில் நினைவுகளால் தொடர்வரலாறுகளால் அரசியல் பிழைகளால் சென்றகால மனிதனின் மனக்குரூரங்களால் முதிர்ச்சியற்ற இலக்கியப் பீடிப்புகளால் மனிதமனம் பீடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவுகளையெல்லாம் அழித்து அதன் இருளையெல்லாம் கிழிக்கும் ஒரு முயற்சியை சினிமா செய்யவேண்டும். ஏனெனில் நேரடியாக மனித உள்ளுணர்வின் பிரதேசத்திற்குள் நுழைந்து இரசவாதங்களைப் புரியும் சக்தி திரைச்சித்திரங்களால் தாம் இந்த நூற்றாண்டில் பெருவாரியாகச் சாத்தியமாகியுள்ளது.


குட்டி ரேவதி

தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் - 2

எனது முந்தைய பதிவின் தொடக்கமாய் கவிஞன் பிரமிளின் கீழ்க்கண்ட கவிதையைக் கண்டெடுத்தேன். படித்துப் பாருங்களேன்..

பாரதிக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்

“வெள்ளம் போல்

கவிப் பெருக்கும்

கலைப் பெருக்கும்

மேவுமாயின்

பள்ளத்தே

விழுந்திருக்கும்

மனிதர் எல்லாம்

விழி பெற்று

பதவி கொள்வாரே

என்ற பாரதியாரே

உமக்கு

நன்றாய் வேண்டும்!

வெள்ளம் போல்

சினிமாக் கவிபெருகி

ரோதனைச் சுழலாகி

அமைதி வெளிபடர்ந்த

கழனி நிலப்பரப்பை

காடு மேடுகளை

கம்பி வைத்து எட்டி....

மெளனக் குகையினுள்

தனிமைக் கருணை

சிதற

இயல்புணர்வில்

விஷநீர் ஏறி உள்ளம்

பேயாகி அலற...

உமக்கு வேண்டும்!

கபந்தனின்

இடையறாப்பசி

இடையறாச் சினிமா

வாந்தி வித்தையாய் மாறி

செலுலாயிட் கலை

சுருள் சுருளாய் கக்கி

கொட்டகை நிரம்பி

விழி வழிய..

உமக்கு

இது வேண்டும்

இன்னமும் வேண்டுமா?

வாரா வாரம்

கிளு கிளுத்துத் தொடர்கிறது

செக்ஸ் மேனி

சோழ ராணி.

இன்று

பள்ளத்தே

விழுந்திருக்கும்

மனிதர் எல்லாம்

பாதாளமே

பதவி என்றும்

மாலைக் குருட்டுக் கண்

மேலும் இருள,

விரல் நுனித் தடவலே

விளக்கு என்றும்

தலைகீழாய் குழி தோண்டி

தம்மைப் புதைத்தபடி

மலையேறுகிறோம் என்று

மார் தட்டுகின்றார்கள்.

கருணை முகில் கலைந்து

எட்டாத உச்சியில்

ஒதுங்கிக் கொண்டிருக்கிறது

உச்சி இரவின்

மதியம் தகித்து

மண்மாரி பெய்கிறது

புலன் காணாப்

புயல் வெளி

கத்தாழை நிழல் தேடி

பதுங்குகிறது...

திருப்தியா?

-பிரமிள் (மகத்துவ இலை, விமர்சனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து..)

தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள்

19th Step திரைப்படத்திற்காகத் திரைக்கதை ஆக்கத்தில் ஈடுபடும் வாய்ப்பும் அனுபவமும் முதன்முதலாகக் கிடைத்த போதுதான் திரைத்துறைக்கான எனது ஆர்வத்தை வெளிப்படுத்த முடிந்தது. 1995 முதலே சர்வதேசத் திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு உலகத்திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்டிருந்த எனக்கு திரைப்படத்தில் கதை சொல்லல் திரைக்கதைக் கட்டமைப்பு குறித்த வேறுபட்ட பார்வைகளும் உருவாகிக்கொண்டே இருந்தன. சென்ற நூற்றாண்டில் மனிதனை மிகவும் அசரச்செய்த ஊடக வடிவம் சினிமாகவே இருந்திருக்கிறது. ஒரு பிரமாண்ட படமாக உருவெடுக்க இருந்த 19th Step சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் என் பணிகள் உதவி இயக்குநராகவும், திரைக்கதை ஆக்கத்தில் உதவியாளராகவும் பாடல் எழுதுபவராகவும் இருந்தன. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இரு பாடல்களும் பதிவு செய்யப்பட்டன. அப்பட வேலையின் போது எனக்கேற்பட்ட அனுபவங்கள் என்னை இன்று அத்துறையில் தொடர்ந்து ஈடுபடத்தூண்டியிருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்கள் குறித்த எனது விமர்சனப் பார்வைகள் கடுமையானவையாகவும் அவற்றைப் பற்றி பல சமயங்களில் விமர்சிப்பதே அபத்தம் என்றும் விலகியிருந்திருக்கிறேன். சினிமா என்பதன் பரிமாணமே தெரியாதவர்களும் திரைப்படங்களைப் பார்க்கவும் அணுகவும் ஊக்கமற்றவர்களுமே கதை வசனம் எழுதுபவர்களாக மாறியிருப்பது கூட இன்றைய தமிழ் சினிமாவின் பெருஞ்சோகம். வெற்றி பெற்ற திரை இயக்குநர்களாக மதிக்கப்படும் அமீர், பாலா போன்றவர்களின் சமூக அவதானிப்பில் இருக்கும் பொத்தல்களையும் திரையில் உணராமல் இருக்க முடியவில்லை. சீமான் போன்றவர்களின் படங்களில் ஒரே காட்சியில் வலமிருந்து இடம்வரை இடம்பெறும் தேவர், பெரியார், சேகுவேரா, அம்பேத்கர் படங்களையும் ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடின்றி இருப்பதையும் எண்ணி நொந்து கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. ஆயிரம் ஆயிரம் உதவி இயக்குநர்கள் மண்டியிருக்கும் கோடம்பாக்கத்தில் வெற்றி பெற்ற இயக்குநர்கள் கொண்டிருக்கும் சமூக அளவீடும் அக்கறையுமோ மிகவும் மேம்போக்கானவை, மேலோட்டமானவை. ஒரு காலத்தில் இவர்களும் உதவி இயக்குநர்களாய் கோலிவுட்டை வலம்வந்தவர்கள் தாம் என்றாலும் இயக்குநர்கள் ஆவதற்காகவே வந்தவர்கள். திரைப்படங்களை ஆக்குவதற்கு வந்தவர்கள் அல்ல.

அதாவது, சமூகத்தை ஊன்றிக் கவனித்தலும் உள்ளார்ந்த சமூக ஓட்டங்களைப் படம் பிடித்தலுமே திரைப்படம் என்பதின் பயன்பாடாக இருக்கமுடியும். கலைவெளிப்பாடாக இருக்கமுடியும். பாலா, சசி, அமீர் போன்றவர்களின் வெற்றிப்படங்களைப் பார்த்த பின்பு கலைப்படங்கள், வணிக ரீதியான படங்கள் என்ற எனது வகைப்பாட்டிற்கான வரையறைகள் குறித்த நீண்ட நாள் தேடல் முடிவுக்கு வந்தது. தங்களின் மனோவெளியில் சமூகவாசிப்பைத் தொடர்ந்து நிகழ்த்தாதவர்களால் திரைப்படங்களை கலை ஊடகமாகக் கையாள முடிவதில்லை. அதனால் ஏற்பட்ட கோழைத்தனமே தான் ஒரு கமெர்ஷியல் படம் எடுக்க விரும்புவதாகப் பறைசாற்றிக்கொள்வது. இவை இரண்டுமே வேறுவேறு படவகைகள் இல்லை. தங்கள் மூளையைக் கசக்காமல் மற்றவர்களின் பாக்கெட்டுகளைக் கசக்கி பணம் பிடுங்கும் வேலையை இன்றைய தமிழ்சினிமா தொழிற்சாலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. அதாவது, சமூக அக்கறையுடன் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணும் இவர்கள் எவரும் சமூகத்தின் ஆழம் வரை தங்கள் புரிதல் எட்டுவதை அனுமதிப்பதில்லை. தங்கள் மூளை வளர்ச்சியைத் தாங்களே கத்தரித்துக்கொள்வார்கள் போல. இத்தகைய சமூகப்புரிதலுக்கான உழைப்பை தொடர்ந்த ஒரு பயிற்சியாக இவர்கள் மேற்கொள்ளாத நிலையில் இவர்களின் திரைப்படங்களும் என்ன தான் வெற்றிப் படங்களாயிருந்தாலும் சமூகச்சாரம் அற்ற படங்களாகவும் கலைப் படைப்பாகாதப் படங்களாகவும் இருக்கின்றன. சமூகத்தின் போக்கை ஆழமாக வாசிப்பவர்களின் பிரக்ஞை எப்போதும் தொட்டனைத்தூறும் மணற்கேணியாக இருந்து தாகமாற்றக் கூடியதாக இருக்கும். ஊனமுற்றவர்கள் மீதும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் அக்கறையுடனிருக்கிறேன் பார்! என்று வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து நிற்காது அல்லது, குடும்பம் மதம் சாதி அரசு போன்ற நிறுவனங்களின் அதிகார அடக்குமுறையையே திரைப்படங்கள் வழியாகச் வழிமொழியும் கைக்கூலி வேலையையும் செய்யாது. ஆனால், இவர்கள் சமூக அக்கறையுடைய படங்களை இயக்கப்போவதாக செயற்கையான கதைகளையும் கதை மாந்தர்களையும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான கருத்துகளையும் சித்தரிக்கின்றனர். அவை மக்களின் பொதுப்புத்திகளுக்கு நல்ல மேய்ச்சல் வெளியாகின்றன. தியேட்டர் அரங்கங்களுடன் தமது வெளிச்சத்தை முடித்துக் கொள்கின்றன. அடிப்படையில் இயக்குநர்களின் மனநிலையில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்பது இப்போதைக்கேனும் தங்கள் பொதுப்புத்தியை கழற்றி வைத்து விடுவதே என்று தோன்றுகிறது.


குட்டி ரேவதி

திரைக்கதையும் கதைசொல்லலும்




பூமியின் மீது பல்லாயிரம் வருடங்களாகக் கதை சொல்லுதல் என்பது ஒரு கலையாக இருந்தாலும் வாழ்க்கையின் நவீனத்துக்கு ஏற்றாற்போன்றும் அப்பொழுது பீடித்திருக்கும் அரசியலுக்கு ஏற்பவும் சொல்லப்படும் ஊடகத்திற்கு ஏற்பவும் கதை சொல்லப்படும் முறை மாறிக் கொண்டே இருக்கிறது. இலக்கியத்தின் உச்சபட்ச தகுதியான கதை சொல்லும் திறன் என்பது குகை ஓவியம் போன்ற கலை வடிவங்களை எப்பொழுதோ பற்றிக் கொண்டன என்றாலும், என்னை சுவாரசியப் படுத்துவதென்பது திரைப்படத்தில் ஒரு கதை, சொல்லப்படும் முறையாலும் நுட்பத்தாலும் பெரிய அளவில் வேறுபடுவதால் தான் இன்றைய உலகையே திரைப்படம் என்னும் காட்சி ஊடகம் வெகுஜனத்தை ஆட்டுவிக்கிறது. காலந்தோறும் வளர்ச்சியுறும் நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை தன்னுள் வாங்கிக் கொண்டு திரைப்படம் என்பது கதை சொல்லலை இன்னும் இன்னும் சுவாரசியப்படுத்துகிறது. அத்துடன் சொல்லப்படுவது ஒரே கதையென்றாலும் வேறு வேறு நுட்பமான அதன் வெளிகளையும் காட்சிப்படுத்துகிறது. அல்லது மிகுதியான கற்பனை வெளிகளுக்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.


மேற்சொன்ன அத்துணை விஷயங்களையும் கீஸ்லோவ்ஸ்கியின் மூன்று நிறங்கள் -சிவப்பு என்ற திரைப்படத்தைப் பார்க்கும் போது நுகரலாம். அதை எப்படியும் பத்து தடவைக்கு மேலாக ஒரு பாடத்தைப் படிப்பது போலவே நுணுக்கமாய் கவனித்திருக்கிறேன். கதையில் மூன்று வித்தியாசமான கதைப்பின்னல்கள் ஒன்றின் மீது ஒன்றாய் படரும்படி, ஒன்றோடொன்று பொருந்தும் படி, ஒன்றுக்குள் மற்றொன்று அடங்கி விடும்படியான திரைக்கதை. படத்தின் முழுக்கதையையும் இந்தப் பத்திக்குள் சொல்வது மிகக் கடினம். ஒரு முறை பார்த்துவிட்டால் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு தளத்திலிருந்து கதைப் பின்னல்களை விவரித்துப் பேசுவது என்பது எளிதாக இருக்கும். அதனினும், மனித சிந்தனைக்கு கதைசொல்லல் முறையை தெளிவாக்கும் பயிற்சியாகவும் இருக்கும். படத்தில் இடம்பெறும் மூன்று முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று நேரடியாகப் படத்தில் இடம்பெறுவதில்லை. தொலைபேசி வழியாகக் கேட்கப்படும் குரலாகவே பதிவாகிறது. என்றாலும் மூன்று கதாபாத்திரங்களும் ஒன்றின் சாயலை மற்றொன்று ஏற்கும் படியாக சொல்லப்பட்டிருப்பது திரைக்கதை வடிவத்திற்கேயான சிறப்பியல்பு எனலாம். எந்தக் காட்சியில் அந்தக் கதாபாத்திரங்கள் மற்ற கதாபாத்திரத்தின் சாயலை ஏற்கின்றது, அல்லது இழக்கின்றது என்பதை படத்தைத் துல்லியமாகப் பார்ப்பவர் கண்டுபிடித்துவிட முடியும்.


அதே மாதிரி ஒரே சமயத்தில் படத்தின் முதிய கதாபாத்திரமும், இடம் பெறும் இளம் கதாபாத்திரமும் ஒரே கதாபாத்திரத்தின் முதிய, இளம் கதாபாத்திரங்களாக எண்ணத் தோன்றும் படியான திரைக்கதையாகவும் இருக்கிறது. ஒரு நேர்க்கோட்டுக் கதை மரபிலிருந்து திடச் சிக்கலான கதை சொல்லலையும் அதன் வழி அரசியலையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கீஸ்லோவ்ஸ்கி. அத்திரைப் படத்தில் கதை மேற்கொள்ளும் மனித உளவியல், உறவுகள், அன்பு பற்றிய அணுகுமுறைகளைப் பற்றி திரைக்கதைக்கு நிகரான அளவுக்கு செறிவாக விவாதிப்பதற்கும் விஷயங்கள் இருப்பினும் என்னை மிகக் கவர்ந்தது அத்திரைப்படத்தில் ஆளப்பட்டுள்ள கதை சொல்லல் உத்தி தான். இம்மாதிரியான கதை சொல்லல் முறையால் மனவெளி விரிவடைவதோடு மனிதனின் ஆழ்மனச்சிக்கலை ஒத்த பின்னலான அமைப்பையே கொண்ட இக்கதை, அம்மனச்சிக்கலை அவிழ்க்கவும் செய்கின்றது.


நேர்க்கோட்டுக் கதையிலிருந்து கதையின் கட்டமைப்பை மாற்றியமைக்க உள்ளார்ந்த பயிற்சியும் வாழ்வியலை அயராது விசாரிக்கும் பார்வையும் அவசியப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களின் குறைபாடுகள் என்பது எனக்கு இவையாகவே தோன்றுகின்றன. கதையை அணுகும் முறைகளால் பல சமயங்களில் வெற்றி கொள்ளும் திரைப்படங்களே கூட சமூக்கத்தை அரைகுறையாக உள்வாங்கிக் கொண்ட பார்வையால் பார்வையாளர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தமிழ் மொழியில் கதை சொல்லும் மரபு, இத்தகைய தட்டையானதாய் இருந்ததில்லை. சிலப்பதிகாரம் தனது காவியத் தன்மையில் இன்றும் வெற்றி கொள்வதற்கு காரணம் அதன் சித்திரக் கட்டமைப்பே. மேலும் பூடகமாகச் சொல்லல், ஒன்றைச் சொல்லி தொடர்புடையதைச் சொல்லாதிருத்தல், பார்வையாளரின் அனுமானங்களுக்கும் கற்பனைகளுக்கும் பெரும்பாலான உரையாடல்களை விட்டு விடுதல், அவர்களின் கற்பனை வெளியை கதை நகருந்தோறும் வளமாக்கிக் கொண்டே கதையை நகர்த்தல், வார்த்தைகளைக் குறைத்த பாணிகளையும் சைகைகளையும் குறிப்புகளையும் கொண்டிருத்தல் போன்ற நுட்பங்களைக் கொண்டு இயங்கும் கதை மரபு நமது.


இன்றும் நாட்டுப்புறக் கதை சொல்லிகள் இந்த நுட்பங்களை இழக்காமல் இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் கதையின் மையக் கதாபாத்திரங்கள் ஒரே சமயத்தில் பல கதாபாத்திரங்களாக மாறுவது என்பது கதை கேட்பவனை நுட்பமான உளவியல் வெளிக்குள் அழைத்துச் செல்வதற்கான உத்தியே. மனித உடலின் இயற்பியல் எல்லையை இயன்ற வரை விரிப்பதும் மானுடத்தின் அசாத்திய சாத்தியங்களைப் பற்றிய அக்கறையோடு இயங்குவதும் நாட்டுப்புறக் கதைகளின் சிறப்பியல்புகள். இக்கதைகள் உருவாக்கித் தரும் வெளியிலேயே அம்மனிதர்கள் தொடர்ந்து அன்றாடம் இயங்குவதும், வாழ்வதும்கூட உண்டு, கதையிலிருந்து வெளியே வர விருப்பமின்றி!



குட்டி ரேவதி