நம் குரல்

அவள் ஒரு பெருங்கானகம்



மரங்கள் கிளைத்த பெருவெளியை வானமாகக் கொண்ட
அவள் ஒரு பெருங்கானகம்
தேனீக்கள் மொய்க்கும் இரைச்சலில் அடைந்தொழுகும்
மதுக்கலயத்தின் மலைமுகடுகள்

அடங்காக் காதலின் பேரருவி அலையென வந்து வீழ
மண்பரப்பில் படர்ந்து கிடக்கும் பசியகொடி
உடலின் படம் திமிர்ந்தெழும் சீரிய பாம்பின் பொலிவு
ஓயாமல் எழுதிக் கலையும் ஒளிக்கோலம்

அவள் தவிப்புகள் வேரேன பாய்ச்சல் எடுத்து
பூமியின் நீரோட்டம் அறியும்
பச்சிலைகள் பட்டாம்பூச்சிச்சிறகுகளுடன்
படபடக்கும்
ஒரு பேரருவியின் கருணையைச் சேலை இழுத்து வந்து
நிலம் சேர்க்கும் கடல் தேடிப் போகும்

நீவிர் பெண்ணென்று அழைக்கும் அவளுடைய
அத்தனை சொற்களும் பலிக்கும் மாமழையென
அணையாத நெருப்புடைய எந்த ஒற்றைச் சொல்லும்
உம்மைச் சபித்துச் சாம்பலாக்கும்

ஏனெனில் அவளிடம் மட்டுமே
கனியின் விதை பிளந்து
உள்ளே உறங்கும் மரத்தை விழித்தெழச்செய்யும்
பருவங்கள் அடர்ந்த யோனியென்று ஒன்று உண்டு

அணையாத நெருப்புடைய எந்த ஒற்றைச் சொல்லும்
உம்மைச் சபித்துச் சாம்பலாக்கும்
ஏனெனில் அவளிடமே யோனியென்று ஒன்று உண்டு



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: