நம் குரல்

பாடகர் ஜேசுதாசு அவர்களின் கருத்துக்குக் கண்டனம்!


பெண்கள் கவனம் குலைக்காத உடை உடுத்தவேண்டும் என்று சொல்லும் ஆண்கள்,
முதலில் தங்கள் கருத்துக்குலையாமல் இருந்தால் நன்று.


பெரிய பொறுப்புகளில் வசிக்கும் ஆண்களும், இந்தியாவின் கலைத்துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்களுமே இப்படி சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லும் பொழுது, அவர்களின் ஆளுமையை இது குறைக்கிறது.

மேலும், பெண்கள் உடை உடுத்துவது, இந்தியாவின் பாலியல் வன்முறை, ஆண்களின் கவனம் குலைவது இவை எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விடயங்கள் என்று வன்முறையின் பலதருணங்களில் அழுத்தம் கொடுத்து சொல்லியாயிற்று.

வளர்ந்தாலும், இன்னும் வயது வராத விடலை ஆண்களின் பிரச்சனையாகவே இது இருக்கிறது.

உலகெங்கிலும், பெண்கள் நவநாகரீக உடை உடுத்துதலும், அதை எளிதாகக் கடந்து செல்லும் ஆண்களையும் காணும் பொழுது, அந்த ஆண்களின் மீது இயல்பாகவே மரியாதை தோன்றுகிறது.

சினிமா, ஃபேஷன் தொழிற்சாலை முழுதும் இயக்கப்பட்டுத்தான் இத்தகைய உடையும், நாகரிகமும் பரப்பப்படுகிறது. உண்மையில், இந்தத் தொழில்முறையைக் கட்டுப்படுத்த இயலாத அளவிற்குப் பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது.

இதன் நிர்வாக சவால்களையும் படைப்புச்சவாலையும் மேற்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் ஆண்களே. அணிபவர்கள் மட்டுமே பெண்கள்.

உண்மையில், பெண்கள் இப்படி உடை உடுத்துவது தங்களைத் துன்புறுத்துகிறது என்று ஆண்கள் நம்புகிறார்கள் எனில், தங்களுக்கு இணையான ஆண்களைத் தான் எதிர்க்கவேண்டும். இதுவே, தர்க்கப்பூர்வமானது.

பெண்களின் உடையைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பதென்றால் வாழும் காலம் முழுதும் அதையே ஒரு தொழிலாகச் செய்து கொண்டிருக்கலாம், ஆண்கள்.

அல்லது, இவ்வாறு உடையுடுத்தும் பெண்களை ரசிக்கும் ரசனையையேனும் வளர்த்துக்கொள்ளலாம்.

அல்லது, தெருக்களில் மேல் உடை உடுத்தாமல் அலையும் ஆண்களையும் இறுக்கமாக உடை உடுத்தும் ஆண்களையெல்லாம் உடலை மறைக்கச்சொல்லலாம்.

பெண்கள் ஒருபொழுதும் அதைச் செய்வதில்லை. ஏனெனில், ஆண்கள் போல் பெண்கள் ஆண்கள் மீது வெறுப்பு கொள்வதில்லை. பெண்கள், ஆண்களை எல்லா வகையிலும் ரசிக்கும் ரசனை மிக்கவர்கள்.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: