நம் குரல்

நூல்களை வாசித்தல்!



நூல்களை வாசித்தல் என்பது தான் மனிதப் பழக்கங்களிலேயே மிகவும் சிறந்த பழக்கமாகத் தோன்றுகிறது.
நூல்களுக்கு சம்பந்தமே இல்லாத, எந்த வேலையைச் செய்பவராக இருந்தாலும், நூல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பது அவசியம்.

இந்த இணைய யுகத்தில், எல்லா அரசியல், சமூகப்பிரச்சனைகளும் அவற்றின் விபரீதங்களும் விளைவுகளும் அடுத்தடுத்த கணங்களிலேயே நம் முன் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன.
இதை அடிப்படையாகப் புரிந்து கொள்ள, சகமனிதர்களைவிட, நூல்களாலேயே உதவமுடியும். அதிலும், தத்தம் ஆளுமை, சமூகச்சூழல், நெருக்கடி, நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்து நூல்களைத் தேடி வாசிக்கும்பொழுது, நமக்குள் இருக்கும் தனிமனிதர் ஒரு சமூகமனிதராக மாறுவதை உணரமுடியும்.
நூல்களை எழுதுதல், விற்றல், உருவாக்குதல், காட்சிப்பொருளாக வைத்தல் எல்லாவற்றையும் விட வாசித்தல் உயர்ந்தது, முக்கியமானது.
ஒவ்வொருவரும் நூல் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்வதுடன், தம் வீட்டினரும் நூல் வாசிப்பதை உறுதிசெய்யவேண்டியது, ஆவன செய்யவேண்டியது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.
மனிதச்சிந்தனையின் எழுச்சி தான் காலந்தோறும் நூல்களாக உருவம் பெறுகிறது. சென்ற நூற்றாண்டுகளின் நூல்களும் சிந்தனைகளும் அது தொடர்பான திறமைகளும் இல்லையென்றால், மனிதக்கூட்டம் இன்றைய பல சாதனைகளையும் பண்புநலன்களையும் தக்கவைத்திருக்கமுடியாது!


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: