நம் குரல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கைதை திரைத்துறையினர் கண்டிக்கிறார்கள் என்றால்…



இவர்கள் இந்திய நீதிமுறையை அவமதிக்கிறார்கள் என்று அர்த்தம்.

இவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று அர்த்தம்.

இந்த எதிர்ப்பே, இந்திய இறையாண்மைக்கு முற்றிலும் எதிரானது. தாய்த்திருநாட்டின் குடியாட்சியையும் அதன் மீதான இறையாண்மையும் இழிவுபடுத்துகிறார்கள் என்று அர்த்தம்.

திரைத்துறையினர், தங்கள் சுயமரியாதையைப் பணயம் வைக்கிறார்கள் என்று பொருள்.

என்றேனும், ஜெயலலிதா அவர்கள் வெளியே வந்து திரைத்துறைக்கான அங்கீகாரங்களை செய்யக்கூடும் என்ற அபத்தமான நம்பிக்கைகள் உடையவர்கள் என்றும் அர்த்தம்.

காலங்காலமாக, இந்தியாவில் உணவின்றி வாழ்வாதாரங்களின்றி வாடும், வறுமையினால் இறந்து மடியும் மக்களைப் பற்றி எங்களுக்கு 'எந்த அக்கறையும் இல்லை' என்ற உண்மையை வெளிப்படையாக முன்வைக்கிறார்கள் என்றும் அர்த்தம்.

அவர் பெண் என்றும் அவர் மேல் பரிவுகாட்டவேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள் என்றால், இந்த நாட்டில் உயிர்களுக்கு ஏற்றத்தாழ்வான விலையைப் பரிந்துரைக்கும் மனு தர்மத்தின் பாரபட்சத்தை, அநீதியை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

இந்தியாவின் நிலங்களைப் பகிர்ந்து கொடுக்கும் போராட்டங்கள் எவ்வளவு வலி நிறைந்தவை, அதன் பின்னால் எத்தனை இலட்சம் தலித் மக்கள், பழங்குடி மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், இன்றும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் அறியாதவர்கள் என்று அர்த்தம்.

சினிமா எங்களுக்கு வெறும் வியாபாரம் தான்; அதற்காக நாங்கள் இந்த நாட்டின் இறையாண்மையையும் விற்போம் என்று மேடைகளில் முழங்கப்போகிறார்கள் என்றும் பொருள்.

மனசாட்சி உள்ளவர்கள், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள கொடுமைகளையும் ஆய்ந்து பார்த்து, அதன் பொருட்டான நீதியின் பக்கமே, தர்மத்தின் பக்கமே நிற்பார்கள்.

இவ்வளவும் ஒரு நாள் நடக்கக்கூடும் என்று எதிர்பார்த்திருப்பின், முன்பே இவர்கள் யாரும் ஏன் ஜெயலலிதா அவர்களுக்கு 'இடித்துரைக்கும்' நல்ல நண்பராக இருக்கவில்லை.

நீதியின் தராசு ஒரு பொழுதும் அநியாயத்தின் பக்கம் தலைசாய்க்காதிருக்கட்டும், நண்பர்களே!


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: