நம் குரல்

டென்மார்க் பயணம் 7 - பெண்ணியமும் ஆணியமும்


இத்துடன் ஐந்து நிகழ்வுகள் கலந்து கொண்டேன். எல்லாமும் பெண்ணிய விவாதங்கள். பெண்ணிய விவாதம் என்றால் ஆண் வெறுப்பு விவாதங்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டாம். எல்லா விவாதங்களிலும் முக்கியமான கேள்வி, 'ஏன் இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகமாக இருக்கின்றன?' என்பதே. பரவலாக, பெரும்பான்மையோருக்கு, டெல்லி நிர்பயா நிகழ்வு தெரிந்திருக்கிறது. என்றாலும், நான் பல இடங்களிலும் தொடர்ந்து விளக்கவேண்டியிருந்தது.

என்னுடைய விளக்கங்களின் மையப்புள்ளிகள் இவையே:
இந்தியாவின் பெண்ணியம் மேலைநாட்டுப்பெண்ணியம் போல, பெண்களை மட்டுமே உள்ளடக்குவதாக இருக்கமுடியாது.
மேலும் எமது ஆண்களை வெறுக்கும் பெண்ணியம் இல்லை . ஏனெனில், ஆண்களிலும் கடுமையான ஏற்றத்தாழ்வை, சாதி வழியாகச்செயல்படுத்தும் நாடு எங்களுடையது.
பாலியல் வன்முறை, ஆதிக்க சாதியினரால் அல்லது மேல்தர வர்க்கத்தினரால் செயல்படுத்தப்படும்போது, பெரும்பாலும் அது பொது அரங்கில் குற்றமாக, விவாதமாவதில்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எந்த ஓர் ஆண் செய்யும் தவறும் ஊதிப்பெரிதாக்கப்பட்டு, தண்டனையும் நீதியும் பெறுவதில் மூர்க்கம் காட்டப்படுகிறது.
அவ்வாறே, பெண்களிலும் சமூக ஏற்றத்தாழ்வு இருக்கும் பட்சத்தில், இந்தியப்பெண்ணியம் என்பது, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்த பெண்ணின் உரிமைகளுக்கு முதன்மைக்குரல் கொடுப்பதாக இருக்கவேண்டும்.

*
நான் சென்னை திரும்பும் விமானத்திற்கு நடுஇரவு, இரண்டு மணிக்கு, நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கிளம்பி விமான நிலையம் சென்றால் தான் இயலும். இங்கே என் தோழியின் தந்தை, எனக்கு முழு விவரத்தையும் வரைபடம் போட்டு, எங்கே பேருந்தில் ஏறவேண்டும், எங்கே மெட்ரோவில் ஏறவேண்டும் என்று விளக்கினார்.
வழக்கமான பழக்கத்தில் கேட்டுவைத்தேன். 'இரவு இரண்டு மணிக்குப்போவது பாதுகாப்பானதா?' என்று. 'கண்டிப்பாக, நீங்கள் எங்கள் நாட்டில் எங்குவேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தனியாகச் செல்லலாம்' என்றார். அவர் ஏற்கெனவே ஒரு முறை இந்தியாவிற்கு வந்து வேலை நிமித்தம் சிலமாதங்கள் சென்னையில் தங்கிச்சென்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
பழக்கத்தில், தனிச்சாலைகளில் நடந்துசெல்கையிலோ, முன்னிரவுகளில் இருப்பிடம் திரும்பும்போதோ, பின்னால் அவ்வப்பொழுது சூழலையே உறுத்துப்பார்த்துக்கொள்கிறேன். ஆனால், இது வரை எந்தப்பெண்ணையும் கண்களில் கூடக் கிண்டல் தொனிக்கும் ஓர் ஆணை இது வரை நான் பார்க்கவில்லை. எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானலும் முன்சென்று விவரம் கேட்கலாம். பொறுப்பெடுத்துக்கொண்டு நமக்கு உதவுகிறார்கள்.
*
இந்தியாவில், பெண்கள் மீதான கேலி பார்வை என்பதற்கு சாதி தான் காரணம். ஆதிக்க சாதியிலிருந்து வந்தவர்களால், நான் அறிந்தவரை, அவர்களால் பெண்களைக் கேலிசெய்யாமல் இருக்கமுடிந்ததில்லை. பொதுப்பரப்பில், பெண்களை எள்ளல் செய்யாமல் இருக்கவும் முடிவதில்லஇ. அவர்கள், பெண்கள் என்னவோ தங்களுக்குத் திறமை இல்லாதது போலவும், எதையும் சாதித்துக்கொள்ள ஆண்களிடம் தம் பாலியலை விற்கவேண்டியது போலவும் பேசுவது சாதியத்தில் ஊறிஎழும்பியது. பழங்குடி சமூகத்தில் இருக்கும் ஆணிடமோ, சாதியின் அழுத்தத்தில் உள்ள ஓர் ஆணிடமோ தவறான பார்வையை நான் கண்டதில்லை. பெண் என்றால் யார் என்று ஒவ்வோர் சமூகத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக ஊட்டப்பட்டிருக்கிறது.
இந்தியாவில், பெண்கள் மட்டுமல்ல, அதிகாரத்தில் மெலிந்த ஆண்களும் எல்லா விதமான பாதுகாப்பான உணர்வுகளுடனும் நள்ளிரவில் செல்லும் காலத்தைப் பார்க்க, ஆவல் எழுகிறது!

குட்டி ரேவதி

* * *

கருத்துகள் இல்லை: