நம் குரல்

டென்மார்க் பயணம் 6 - அருங்காட்சியகங்கள்!


அயல்நாடுகளுக்கு மாநிலங்களுக்கோ செல்லும் போது, அந்த இடத்தின் நிலக்காட்சி பீடிக்க, முதலில் செல்லவேண்டியது அதன் அருங்காட்சியகங்கள் தான். அந்த இடத்தின் உயிர்நாடியை அறிந்தது போலாகிவிடுகிறது. டென்மார்க்கின் தேசிய அருங்காட்சியகம், ஒரு சர்வதேசஅருங்காட்சியகமாகத்தான் இருக்கிறது. டென்மார்க்கின் காலனியாதிக்கத்தில் இருந்தபொழுது பெற்றவையோ, பயணியாக டென்மார்க்கிலிருந்து வேறு நாடுகள் சென்று வந்தோர் சேகரித்து வைத்திருந்ததோ என ஒட்டுமொத்தமான சேகரிப்பும் தெளிவான விவரணைகளுடன் இருக்கிறது.


இங்கே, மெட்ரோ எனப்படும் தரைகீழ் ரெயில் மிகவும் சிக்கலான பயணமுறைகளை உடையது என்று எல்லோரும் எச்சரித்திருந்தாரகள். இருந்தாலும், வரைபடம் கொஞ்சம் புரிபட்டுவிட்டதால் செல்வது எளிதாகிவிட்டது. Kongens Nytrov என்னும் பகுதியில் நிறைய அருங்காட்சியங்கள் ஒன்றுக்கொன்று அருகிலேயே இருக்கின்றன. சிறிய அருங்காட்சியகம் என்றாலும், டென்மார்க் தேசிய அருங்காட்சியகம் பார்த்துவரவே எனக்கு ஐந்து மணி நேரம் பிடித்தது. குறிப்பாக, எஸ்கிமோக்கள் பகுதி எனை வெகுவாகக் கவர்ந்தது. பனிப்பிரதேச வேட்டை, வாழ்க்கை முறை சார்ந்த அவர்கள் பயன்படுத்திய எல்லாமும் ஒன்றுவிடாமல் சேகரித்துக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். நம்முடையதைப் போன்ற வெப்பப்பிரதேசங்களிலிருந்து செல்பவர்களுக்கு முற்றிலும் வியப்பாக இருக்கும். திமிங்கல எண்ணெயும் இறைச்சியும் அவர்கள் வாழ்வின் மிகமுக்கியமான வாழ்வாதாரமாகும். ஐஸ்கட்டிகளுக்கு இடையே அவர்கள் வேட்டைக்குச் செல்ல, வடிவைத்து வைத்திருக்கும் ஒவ்வொரு ஆயுதமும் கலைப்பொருளைப் போல இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் சமையலறைப்பொருட்கள் எல்லாம் மரத்தில் செய்யப்பட்டவையாகவும், ஆயுதங்கள் எல்லாம் நீரில் வேட்டையாடிய பிராணிகளின் எலும்புகளில் செய்யப்பட்டவையாக, அணிந்திருக்கும் உடைகள் எல்லாம் குளிரைத்தாங்கும்படியான பிராணிகளின் தோலினால் ஆனவையாக இருக்கின்றன. எஸ்கிமோக்கள் பற்றிய அருங்காட்சியகங்களில் இது தான் மிகவும் சிறந்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், இதே அருங்காட்சியகத்தில் இருக்கும் மற்ற பிரிவுகள் எல்லாம் ஓரளவுக்கே அக்கறையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு அருங்காட்சியகமும், மனிதன் இந்தப்பூமியில்இயற்கையின் பேராற்றலை எதிர்கொள்வதற்கு, தகவமைத்துக்கொள்வதற்கு ஏதுவாக வழிமுறைகளைக் கண்டறிந்ததின் எச்சங்களும் சின்னங்களும் தாம். பரந்த இந்தப் பூமியில் வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்குமாய் மனிதர்கள் போர், காலம், மனம், மரணம், இன்பம் என ஒவ்வோர் அனுபவம் வழியாகவும் கடந்து வந்த சென்ற நூற்றாண்டுகளின் சுவடுகள் கற்பனை எழுச்சியைக் கொடுப்பவை. என்றாலும், நவீனக்கலைவடிவத்திற்கான, லூசியான அருங்காட்சியகம் முற்றிலும் நவீனவடிவில், கடலோரம் நிறுவப்பட்டுள்ளது. கோபன்கேஹனிலிருந்து ஒரு மணி நேரம் பயணித்துச் செல்லவேண்டும். ஐரோப்பிய நவீன ஓவியர்களையும் சிற்பக்கலைஞர்களையும் முதன்மைப்படுத்தியிருந்தனர். கவிஞர்களுடனான லூசியான குறித்த உரையாடலில், ஒரு கவிஞர் கேட்டது: அது நவீனக்கலைஞர்களுக்கான கலைஅருங்காட்சியகம் எனில் ஏன் இத்தனை நாடுகளிலிருந்து கலைஞர்களை முன் வைக்கவில்லை என்று ஒரு நீளப்பட்டியலை முன்வைத்தார்.
எல்லா நாடுகளும் இந்த விடயத்தில் இப்படித்தான் போல!


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: