நம் குரல்

அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப்பூக்கள்







அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்




என் அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்
வேலியின் முட்கம்பிகளுக்கு இடையே 
அதன் கிளைகள் சிக்கிக் கொண்டிருக்கவில்லை
அரைப்பாவாடை முழுக்க செம்பருத்திப் பூக்களை 
நீர் ஓவியங்களாய் வரைந்திருக்கிறேன்
உடல் வளர வளர அரைப்பாவாடையில் பூக்களும் 
அதிகமாக முகிழ்க்கின்றன
என்னுடல் ஆணாய் இருப்பதும்
நீங்கள் என்னை பெட்டை என்று அழைப்பதும்
பூக்களற்ற உடையாக்குகின்றன என் அரைப்பாவாடையை
நீங்கள் இருந்து விட்டுப் போங்கள்
ஆண் உடலில் அறையப்பட்டதால் ஆணாகவும்
பெண் உடலில் புகுத்தப்பட்டதால் பெண்ணாகவும்
என் அரைப்பாவாடை முழுக்க செம்பருத்திப் பூக்கள்
சுழன்றாடுகையில் பாவாடை காற்றில் மிதக்க
செம்பருத்திப் பூக்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கின்றன.
ரகசியங்கள் சருகுகளாய் சரசரக்கின்றன
உடலின் எல்லைகளை பெயர்களால் வரையாதீர்கள்
அல்லது குறிகளால் குறிக்காதீர்கள்
உடல் முழுக்க போதையுடன் இச்சையுடன் எழுந்து 
பறக்கிறது செம்பருத்திப் பூக்கள் பூத்த அரைப்பாவாடை
அவ்வுலகத்தின் மையமாகிச் சுழல்கிறேன் நான்







மாயக்குதிரை



நண்பனுக்கு உடல் என்பது காட்சிப்பொருள்
தொடரும் ஒரு புதிர், தங்கைக்கு
அம்மாவுக்கு அது நிரந்தரப் புனிதம், கடவுளின் அழுக்கு
அப்பாவுக்கு பாதுகாத்து சேமிக்க வேண்டிய நாணயம்
ஊர்க்குளத்தில் உடலைக் கொத்தும் மீன்களிடம்
சிக்கிக் கொண்டபோது திறந்து கொண்டது என் உடல்
உறுப்பை அவை திருடிச் சென்று தாமரையின் இலைகளில்
உருட்டி உருட்டி விளையாடின வைரக்குமிழ் என்றன
பாட்டி சொல்லியிருக்கிறாள் உடல் அவளுக்கு அணிகலன்
புலிக்கு அதன் உடலே கானகம்
என்னுடைய மழலைக்கு அது ஓர் அணையாத சூரியன்
காதலனுக்கு தாமரைகள் பூக்கும் தடாகம்
எனக்கோ என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
எந்த உறுப்பிலும் என் சுயம் இறுக்கிப் பூட்டப்படாமல்
நிதம் தோன்றும் உணர்வுப் புரவியேறி விடுதலை காணும்
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பறந்து போன உறுப்புகளை பறந்து கொணர
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பெண்ணுமில்லை ஆணுமில்லை பெண்ணிலுமில்லை
ஆணிலுமில்லை நான் வளர்க்கும் மாயக்குதிரை






உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?


ஒவ்வொரு நாளும் அவன் 
ஒரு பெண்ணாக மாறிக்கொண்டே இருந்தான்
பெண்ணின் அடையாளங்களை முதலில்
புற உடலில் வரைந்து கொண்டான்
உடலின் வரைபடத்தில் நீர் ஓவியத்தைப்போல
காமத்தின் எழுச்சிகளும் வரையப்பட்டிருந்தன
கண்குழியில் ஆழக்கடலின் ரகசியங்களை
பொதிந்து கொண்டான்
உணர்ச்சியின் நீரோட்டங்களை
ஆறாகப் பெருக விட்டான் உடல் சமவெளியில்
விறைத்த குறியை அதன் ஆண்மைய முட்களை
அறுத்தெறிந்து சமனப்படுத்திக் கொண்டான்
இப்பொழுதிருந்து அவனை அவள் என்றே
அழைக்கலாம் என்று அறிவித்துக் கொண்டாள்

நம்பிக்கையின் தாரகைகள் முளைத்து
உடல் ஒரு வானமாக எழுந்தது
அதன் உயரத்திற்கு சிறகுகள் விரித்து
பறந்து கொண்டேயிருக்கும் அனுபவத்தைப்
பேசி பேசியே தன் குஞ்சுகளையும் வளர்க்கிறாள்
இப்பொழுதும் அவள் என்னைக் கண்டால் கேட்பது
என்னிடம் போல் உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?




குட்டி ரேவதி



இக்கவிதைகள், 'ஸ்மைலி' என்கிற லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு....


மடக்குக் கத்தி







இலக்கியவாதிகள் எப்பொழுதும் மற்றவர்கள் குறித்த அவதூறுகளையும் தன்னுடைய புத்திசாலித்தனத்தையும்  மடக்குக் கத்திகளைப் போல மடிக்குள் செருகிக் கொண்டே அலைகின்றனர்.


சட்டென்று கத்தியை உருவி முகத்திற்கு நேராக நீட்டி பூச்சாண்டி காட்டி மிரட்டுவதற்கு வசதியாக இருக்கும்.


இவர்களின் 'writer' என்ற முத்திரை, சமூகத்தில் எந்த இடத்திலும் இன்னாருக்கு இன்னது வேண்டும் என்று கேட்டு வாங்கும் முத்திரை ஓலையாகக் கூட பயன்படாது.

அல்லது தனக்கே எதையும் பெற்றுத்தரும் எந்த செல்வாக்கும் கூட இல்லாதது.


இவர்கள் குடும்பத்திலே கூட ஒரு பல்துலக்கும் குச்சிக்கு இருக்கும் பயனும் இல்லாதது. 


இத்தகைய 'சூன்யமான' சமூகச்சூழல்!


ஆனால், ஒண்ணு யோசிச்சீங்களா?  ஒருத்தர் மேல ஓர் ஈர்க்குக்குச்சி குத்தினா கூட பதறி ஒரு காக்காக் கூட்டமே பறந்து வந்து சேரும். 


அப்பத்தான் தெரியும், 


அது வரை பேசின தலித்தியம், பெண்ணியம், தமிழியம், சுதந்திர இயம் எல்லாமே ஒரு இண்டெலக்சுவல் விளம்பர பேனருக்காக என்று! 


கூடுற கூட்டம் எல்லாம் கத்தி சத்தம் போடத்தெரிஞ்ச 'லெளட் ஸ்பீக்கர்' ஆதிக்க இரத்தக் கூட்டமா இருக்கும்! 


மடக்குக் கத்திய மடிக்குள் செருகிக்கிட்டே சுதந்திரம், கருத்துச்சுதந்திரம், தனிமனித சுதந்திரம் எல்லாம் பேசுறவங்கங்கிறதும்!


வழியில பயம், மடியில கத்தின்னு வச்சுக்கலாமா?



குட்டி ரேவதி



பேயோனின் 'நடிப்புச் சூரியன்' கவிதை






பணத்தையும் அறத்தையும் பத்தின குழப்பத்துல நீதி எங்கேயோ இருட்டுக்குள்ள போனதா கவலைப்படுற நட்பு வட்டத்துக்கு..

எப்பவுமே அப்படித் தான அது இருந்துருக்கு? பணமும் அறமும் எதிரெதிரா...!

நாய் வித்தப்பணம் குரைக்குமா? கருவாடு வித்தப்பணம் நாறுமா?

அதே போல அறத்தையும் நீதியையும் வித்தப்பணத்துல அறத்தோட வாசனை வீசுமா?

நீதியோட துடிப்பு தெரியுமா?


சமரசத்துக்கப்புறம் சாக்கடைத்தண்ணீ என்ன? நன்னீர் என்ன? 


பருகினேன் பருகினேன்
என்ற அள்ளிக்குடித்த பாவனை போதாதா?

போயோனின் நடிப்புச்சூரியன் கவிதை மேலே குறிப்பிட்ட விஷயத்தைத் துல்லியமாக சொல்லுது.

கடினமான விஷயத்தை எளிதாகச் சொல்லிவிட்டுப் போகிறார்.

எனக்குத்தான் சீரணிக்காமல் தொண்டைக்குள்ளேயே இன்னும் நிற்கிறது.






சரி! பேயோன், ஆணா பெண்ணா? பேயோள் என்றால் நெருங்கிப்பார்க்கலாம்.

ஆண் விகுதிகள்  கொஞ்சம் அலர்ஜியில்லையா, எனக்கு?







குட்டி ரேவதி

பில்ட் - அப்






எப்பவும் பில்ட்- அப் பண்ணிக்கிட்டே இருந்தா கட்டிடத்த எப்ப கட்டி 
முடிக்கிறது? 

போய் வேலைய பாருங்க, பாஸு!

!…..ஒங்க வேலையே பில்ட்- அப் கொடுக்குறது தானா?

சாரி! தெரியாமப் போச்சு!

எப்பவும் ஏதோ பில்டிங் கட்டப்போற மேனிக்கே பேசிக்கிட்டு இருக்கீங்களா?

அதாம் இந்த கன்ஃப்யூசன்!




குட்டி ரேவதி
பின் குறிப்பு: இது யாரையும் குறிப்பிடுவது அன்று. முழுக்க முழுக்கக் கற்பனையே!

காலிப் பெருங்காய டப்பா




காலிப் பெருங்காய டப்பாவை ஏன் முகர்ந்து முகர்ந்து பார்க்கிறீர்கள்? 

வேறு என்ன இருக்கப் போகிறது? 


கடந்த கால வாசனையும், சில முன் முடிவுகளும், நான் இதுவாக்கும் அதுவாக்கும் என்ற அதே பெருங்காய மமதைகளும் தாம்!


இன்று தன்னிடம் எதுவுமே இல்லையென்றாலும், முன்பு தான் கொண்டிருந்த பெருங்காய வாசனையை மட்டும் விடப் போவதே இல்லை!


முன்பொரு காலத்தில் அதில் ஏதோ இருந்ததே என்ற ஞாபகத்தில் இன்னும் ஏன் அதை முகர்ந்து முகர்ந்து பார்க்கிறீர்கள்? 


இப்பொழுது அது ஒரு காலிப் பெருங்காய டப்பா தானே?




குட்டி ரேவதி

கொம்புகள்








தலைக்கு மேலே கொம்புகள் முளைக்கும் வரை தான்  ஒருவருடன் ஒருவர் முட்டிக்கொள்ள வேண்டும். அதற்குப் பின் தன்னுடைய கொம்புகளை குறிப்பிட்ட இடைவெளியில் நன்றாகச் சீவி விட்டுக் கொண்டால் போதுமானது. 

எல்லோரின் நகைச்சுவை உணர்வும் தீர்ந்தே  போய்விட்டது என்பதற்கு சாட்சியாக எல்லோரின் நிலைத்தகவலும் சுழன்று சுழன்று என்னிடமே வருகிறது. 

குப்பையையெல்லாம் பகடி என்கிறார்கள். பிழைப்பை நேர்மை என்கிறீர்கள். சீரியஸ் மட்டும் உயிர் போகக் கதறிக் கொண்டிருக்கிறது.

அப்பாடா, உடையில் ஒட்டிய ஆடையொட்டிகளை உதறிவிடுவதே வேலையாக இருந்த காலம் போயே போய்விட்டது.  அஜீரணத்தால், எல்லோரின் ஜீரண உறுப்புகளும் பழுதாகிக் கொண்டு வருவதை மட்டும் தான் இன்று உணரமுடிகிறது.

எல்லோரும் உறங்கும் மதிய வேளையில் ஸ்பீக்கர் தலைக்கு மேலே அலறிக் கொண்டிருக்கிறது. இரவுகளின் தலைக்கு மேலேயும் கதறிக்கொண்டிருக்கிறது.


குட்டி ரேவதி