நம் குரல்

கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விடுதலை யான் .... கவிஞர் குட்டிரேவதி

(என் முதல் ஐந்து கவிதை நூல்களுக்கு மதிப்புரை செய்திருக்கிறார் தோழர் பெரியார் குமார். சரியான கவிதைகள் வழியாக என் நோக்கத்தைத் தொட்டிருக்கிறார். நன்றிகள்.)



 மரபை மீறும் பயணத்தின் போது அகத்தே தன்னை கடந்து செல்லும் எதுவும், புறத்தே நின்று கவனிப்பதைஅறிந்தே இப்படி தொடங்குகிறார் கவிஞர் குட்டிரேவதி  “கூவிக் கூவிப் பெண்ணுடல் விற்கப்படும்தேசத்திலிருந்து வந்தவள் நான்என்று.

      யானுமிட்ட தீ
      உடலின் கதவு
      முலைகள்
      பூனையைப் போல அலையும் வெளிச்சம்
      தனிமையின் ஆயிரம் இறக்கைகள்

 என ஆய்ந்து கவிதை தொகுப்பின் வழி கட்டமைக்கப்பட்டுள்ள ஆண் மையப்புனைவை உடைத்துச்சிதைத்து சிறகசைத்துப்  பறக்கிறார் கவிஞர் குட்டிரேவதி.

  “பெண்கள் பிள்ளை பெரும் எந்திரங்களல்ல என்றார் தந்தை பெரியார். இயற்கையில் கர்ப்பப்பையேவலையாகி பெண்ணுடலை சிறைபிடித்திருப்பதை ஆய்ந்துணர்ந்த தந்தை பெரியார் பெண்ணுடலைவிடுவிக்க  கர்ப்பப்பையையே வெட்டி எறியச் சொன்னார்.

  ”ஆணைப் பெற்றது பெண்சரி / பெண்ணைப் பெற்றதும் பெண்ணா? / என்ன அநியாயம்”. என்றுஇயற்கையே பெண்களுக்கு எதிராக இருப்பதை கேள்வியாக்குகிறார் குஞ்ஞிண்ணி.

துடைத்தகற்ற முடியாத / இரண்டு கண்ணீர் துளிகள் / முலைகள்,”  என்று குட்டிரேவதியும் இவர்கள்வழியில் இயற்கையிலேயே பெண்ணுடல் வஞ்சிக்கப்பட்டுள்ளதை கண்டடைகிறார்.

 மனிதர்கள் வர்ணாஸ்ரமப் பாகுபாட்டின் ஜதிகளாகப்பகுக்கப்பட்டு, அதிலும் தெருகூட்ட, மலம் அள்ள,அழுக்கை வெளுக்க என்று தனத்தனி ஜாதிகள் உருவாக்கி, அந்த வேலைகளை செய்வர்களை இழிவானவர்களாக ஆக்கி அவர்கள் ஒடுக்கப்பட்டு கிடப்பதை நாம் அறிவோம்.

  இப்படி ஒடுக்கப்பட்ட ஜாதிகளின் வேலைப் பிரிவினையாக கருதப்படும் கூட்டுவது, மலமள்ளுவது,அழுக்கை வெளுப்பது போன்ற அனைத்து வேலைகளையும் குடுப்பத்தின் பெயரால்  பெண்ணுடல் மீதுதிணிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்..? இப்படி சொல்லலாம் ஒடுக்குதலின் ஒட்டு மொத்த வடிவத்தின்பெயர்பெண்என்று....

  இந்த மண்ணின் எற்கனவே நிருவப்பட்டுள்ள ஜாதி, சமய, குடும்ப,பண்பாட்டு அமைப்புகளை கெளரவம்குறையாமல் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் செல்லும் தொடர் சங்கிலியாகவே இங்கேபெண்ணுடல் பிரசவிக்கப்படுகிறது.

  இந்த சூழலில் பிரசவிக்க மறுத்து இயற்கையாகவும், வலிந்து கட்டமைக்கப்படும் பெண்மையின் குரலாகபெருங்குரலெடுத்து

     ”இந்த மண்ணுக்காக அல்ல எனதுடல்
     எனது உடலுக்காகத்தான் இந்த மண்

 என்று அறிவித்து விடுதலைப் பறவையாகப் பறக்கிறார் குட்டிரேவதி.

எவற்றையும் மறக்க முடியாது ஊமையாகிப் போன பெண்ணின் உள்தனிமையை இப்படிகவிதையாக்குகிறார்.

      “ தனிமையில் மட்டும்
       கசியும் உள் தனிமை
       பெருங்கடலாய் உருவெடுத்து
       அலையெழுப்பும்
       வேறு மனித வாசனை வீச
       ஒரு துளியாய் திரண்டு விழி நிரப்பும்”.
      கோள நீர்ப்பரப்பில்
      காட்சியாகும் உள்தனிமை
      காலச்சரிவில் உருண்டுடோடிப்
      பழுத்தப் பாறைகளைப் போல
      பாரமாய் விடும் கண்ணீர்த்துளிகளை
    ஏந்த வழுவுண்டா உன் கைகளுக்கு”?

தனிமையில் சுரக்கும் எண்ணங்களின் ஒரு துளியும். அது தன்னுள் சுரந்தாலும், பெருங்கடலெனபல்லாயிரம் ஆண்டுகளாக பிறமனிதவாசனையே நிறைந்த  கிடப்பதை கண்டு, அந்தத் துளியை ஆணாதிக்கம் இருகிக் கிடக்கும்  பெரு மலையாக உதிர்த்து விட்டு, இதை தாங்க இங்கே எவனுக்கடாசக்தி உண்டு? என்று கேட்கும் பதில்கள் அனேகமாக மெளனமாய்த் தானே இருக்க முடியும்.

 எவ்வளவு கனமான துளுகளை கண்ணிராக உதித்தாலும் கவலையின்றி பெண்ணுடலை தனதாக்க  இந்தசமூகம் செய்து வைத்துருக்கும் அத்தனை மயாவித்தைகளையும் கண்டுணர்ந்த குட்டிரேவதி, எதிர்மந்திரக் காரியாகிதன் எரி சக்தி கவிதையில்.

எரி சக்தி
வலிகளை உச்சரிக்கத் தெரியாத
வழிகளைத் தேடியலையாத
புடைவை ஒதுக்கி நடக்கும்
பெண்களைத்தான் உனக்கு பிடிக்கும்
அனால் உணர்வுகளின் குவியல் நான்     
ஒளி தேசத்தில் வாழவிரும்பும்
விடுதலைப்பறவை.....
ஒரே பிறப்பில் 
அழவும், சிரிக்கவும்,ரசிக்கவும்
பொழியவும் எரிக்கவும் மகிழவும்
அழியவும் ஜனிக்கவும் பூத்தவள்...
மண் வாசனையும் மலைத்திமிரும்
நதியேட்டமும்
என்னுள் கிளர்ந்தெழுவதைக்
கட்டுப்படுத்த இயலவில்லை
நவதுவாரங்களின் வழியாகவும்
கனவுகள் பீறிடுகின்றன
ஜனங்கள் திரளும் நிஜக்காட்டில்
வேட்கை பெருகப் பெருக
வேட்டையாட அலைகின்றேன்
கன்னத்தில் உருண்டு உதிரும்
கண்ணீர்த்துளிகளைச் சாட்சியாக்கி
உன்னிடம் கருணை சம்பாதிப்பதில்
எனக்கு பெருமை யேதுமில்லை
                                  பூ..வெளிச்சம்

என்றுதன்னுடல் தனக்கேஅல்லதுபெண்ணுடல் பெண்ணுக்கேஉரிமைப் போர் முழங்குகிறார்.

  ஆசைகள், கனவுகள், கோபம், நேசம், துயரம், சிறகுகள், விடுதலை என அனைத்தும் ஊறி நிற்கும்உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாகிய உடலே சிறையாக்கி, சிறையே உடலாகி இடம்பெயரமுடியாத மரமாய்கிடப்பதை தனதுஅரசமரம்கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.

"ஆணியால் அறையப்பட்ட
பட்டாம் பூச்சிகளாய்ப்
பதறுகின்றனவா அதன் இழைகள்?
வெளிச்சச் செதில்களோடு
கிளைத்துக்
காற்றின் வெளியில்
நிந்தத்  துடிக்கிறதா அதன் உடல்?"
                                         பூ..வெ.29(பக்)
         
தனே நிர்வாணமாய்க் கிடந்து கருவாக்கி பிரசிவித்த ஆண்மை தன்னையெடுக்க விரட்டி வரும் பாதையில்நேருக்கு நேர் நின்று, இனி நாங்கள் ஓடுவதில்லை அன அறிவித்து, சூரியனின் தோல்களில் கை கோர்த்துவாருங்கள் தோழர்களே என எரித்து சாம்பலாக்க அழைக்கின்றார்.

                  யானுமிட்ட தீ -2

  அவளை அப்படியே விட்டிருக்கலாம் நீங்கள்
முட்டும் இரவைக் கானகத்தின் முதுகென்றும்
மெல்லத்திரளும் உதிரப்பெருக்கை கடலென்றும்
கனலும் காமத்தைக் காயும் நிலவென்றும்
உங்களுக்கான பிரபஞ்சா நீள்வலையைப் பயணத்தை
  மறுக்கிறாள்
மெளனிக்கிறாளென்பதைக் கூரிக்கொள்கிறேன்
உடலெங்கிலும் அயுதம் புதைத்த வனமாகியவள்
என்னறியாமல் அம்பெய்திய உங்கள் கைகள்
வழியெங்கும் சமிக்ஞைகளால்
அவள் எம்பிய வேட்டை அம்புகளால்
கிடங்குகளுக்குள் சேகரப்படுத்திய
வெடி மருந்துருண்டைகளால்
உம்முடல் வெடித்துச் சிதறலாம்
எதிர்பாராத காலையில்
தொடைகளுக்கு இடையில் விரியும் கானகப்பாதை
பால் வெளியாக நீளும் என்று
அவள் வானம் வரைந்தாலும்
உருண்டுருண்டு ஒடும் கோள்களின் கன்னி வலையில்
எந்நெரமும் சிக்கிக் கொள்ளலாம்
உமது குறிகள் என்றாலும்
நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் தோழர்களே
இரை கண்ட
காட்டு மிருக மொன்றின் பாய்ச்சலாய்
திமிறிக் கொண்டிருக்கிறது
யோனியைக் பதுக்கி வைத்திருப்பவள்
மரங்கள்முற்றா முகிழ்  முலைகளாகிப் 
பூத்துக் கொட்டும் பிரதேசமொன்றை
நிர்வாண உடலுமாக்கியவள்
யானுமிட்ட தீ ஈதன்று சூரியனைச் சுட்டும் போது
நம்பித்தான் ஆக வெண்டும் தோழர்களே!

யா.தீ. பக் 75

மூடுண்டை பெண்ணுடலை காம்ம் வழியாக குதற பயிற்சி பெற்ற விழிகளுக்கு தன்னுடலை நிர்வாணமாக்கிநின்று காட்டி அதிச்சியூட்டுகிறார். வெறும் சதைப்பிண்டமாக இல்லாமல் முலைகள் தன்னை வீழ்த்தும்எதிரியாக, காதலாக,தாய்மையாக, நேசமாக, தோழனாக தன்னோடு தொடர்வதை தன் 'முலைகள்'கவிதையில்
 " முலைகள் 
சதுப்பு நிலக் குமிழிகள் 
பருவத்தின் வரப்புகளில்
மெள்ள அலை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்
எவரோடும் ஏதும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை
மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை
தவத்தின் 
திமிறிய பாவனையும் 
காமச் சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும் 
சிசுகண்ட அதிர்வின்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன
ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
      இரு கண்ணீர்த்துளிகளாய்
      தேங்கித் தளுப்புகின்றன

         முலைகள்பக் 15

    என்று குட்டிரேவதி  விவரிக்கும் போது பெண்ணுடலை கமப்பசியாற்றும் சதையாக, வெற்றுடலாகபார்த்து வந்த நமது பார்வைகள் இயல்பாகவே மறுபரிசீலனையாகின்றன
.

    பெண்மை தன்னைத் தானே கையாள்வதற்குத்தான் எத்தனை தடைகள், மெளனமாக கண்ணீர்உருத்துக்கொண்டிருக்காமல் தன்னைத்தானே அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்திற்கு எதிராக, கற்களல்லநாங்கள் தேவதைகள். இனி உங்கள் வார்த்தைகளுக்குள் அடங்கிக் கிடக்கப்போவதில்லை எனவரங்களை தனதாக்குகிறார் தன் 'கற்கள்' கவிதையில்.

கத்தி கத்தி என் செவி திருப்பமுடியாமல்
வாயடங்கிக் கூடைகளில் பழங்களைப் போல்
கனிந்த மெளனத்துடன்
நினைவுகளால் பயனென்ன
தேவதையின் கனத்த தனங்கள்
அழுகிக் கொண்டிருக்கின்றன
வதங்கிய பூவிதல்போல் யோனி
புன்னைகை உதிர்த்து ஆவியாகிறது
என்றாலும்
தேவதைகள் அழக்கூடாது
      உடலின் கதவுபக் 113

காலனியாதிகம், ஏகாதிபத்தியம், இன, மொழி ஒடுகுதலுக்கும் எதிரான விடுதலைப் போராட்டங்களை,விடுதலை வீர காவியங்களை போற்றுகின்ற சமூகம், அதே சுதந்திரத்தை பெண் தனக்காக கோரி நிற்கும்போது கோரமாகி பழமை சமூகம் காட்டுவதைவார்த்தையின் அரசியல்கவிதையில்அம்பலப்படுத்தி,அஞ்சாமல் சுதந்திரத்தின் தோள் பற்றி பயணிக்கிறார் கவிஞர் குட்டிரேவதி.

நான் அந்த வார்த்தையை தேர்ந்தெடுத்த போதுதான்
அதை அணிருந்த அரசியலெல்லாம்
தீப்பிடித்துக் கொண்டன.
கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உடல்
சல்லடையாகித்
துவாரங்கள் வழியாகப் பீரங்கிகள் நீள்கின்றன.
எழுந்து நடக்கும் போது
கண்காணிக்கும் கேமராக்கள்
அங்கும் இங்கும் அசைந்து இல்லாத ஒன்றைப்
பதிவு செய்ய பறக்கின்றன
அந்த வார்த்தை தனது கருத்து புடைத்த தோல்
நோக்கும் இரு விழிகள்
வெண்மையான பாதங்களுடன்
கனத்த புத்தகத்திலிருந்து துள்ளி யொழுந்து
புதைத்துக் கறுத்த இதழ்கள்
வக்கிரங்கள் தோய்ந்த முலைகள்
இரவை மதியாத இதயங்கள்
சாவித்துளை வழியாகக்
கண்களை நீட்டும் பொய்கள்
வழியாக வெல்லம் பயளித்துக்
தீயைப் பரப்பியது"..
அந்த வார்த்தையை
அவர்கள் அணியாமல் இருந்திருக்கலாம்
தீப்பிடித்துக் கொண்டன
போர்களையோ தற்கொலை களையோ
கிஞ்சித்தும் பொருட்படுத்தாத அந்த வார்த்தை
தன் மீது பறந்த வந்து வீழ்ந்த சாம்பலை
உதறிவிட்டுத்
தன் பயனத்தின் மீது ஏறியது

தனிமையின் ஆயிரம் இரவுகள் – 11


    தன்னை ஒரு சக உயிரியாக மதிக்கக் கோரி ஆண் மையத்தை நெருக்கி நெருக்கி உறவாடமுயற்சிக்கிற பெண்மையை, ஆண்மையம் தொடர்ந்து விளிப்பு நிலைக்குத் தள்ளுவதை உணர்ந்துகொண்ட குட்டிரேவதி இப்படி எழுதுகிறார்.

குகைக்குள் நுழைந்த பறவை
இருளின் பாறையுடலில் மோதி
சிற கொடிந்தது 
கணக்கிலா முறைகள்.
ஒளியைத் தருவிக்க விரும்பாது
எதிர்திசையில் வெளியேறியது.”

  என்று தீர்க்கமான முடிவோடும், தன் கவிதைச் சிறகுகளோடும் ஆண்மையத்தின் நேர் எதிர்திசையில்பயணிப்பதை வாசகர்கள் அவரது தொகுப்புகளை வாசித்து உணரலாம்.

 தமிழ்க் கவிதையுலகம் பயன்படுத்தத் தயங்கும் வார்த்தைகளை, பேசத்தயங்கும்  பொருட்களைதிணிச்சலாகப் பேசுகிறார் கவிஞர் குட்டிரேவதி. தமிழ் இலக்கிய உலகில் காத்திரமான இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களாலேயே கவிஞர் குட்டிரேவதியைஜீரணிக்க முடியவில்லை என்பது நாம் அறிந்ததே.

  அனைத்தையும் தாண்டி பெண்ணிய அறிவுச் சூழலில் கவிஞர் குட்டிரேவதியின் கவிதைகள் மிகமுக்கியமாக விளைவுகளை ஏற்படுத்தித்தான் தீரும் என்பது திண்ணம்.

இந்த உரையை கவிஞர் குட்டிரேவதியின் வரிகளிலேயே முடிக்கலாம் என நினைக்கிறேன்.

   ”இம்மண் எனது. உனது என்பதும் எனது. மண்ணில் வேர்களுன்றி நின்று கைகள் மலர்ந்தும் தாவரமும்நான். மண்ணுக்கு மழை வேண்டும். மழையின் கூதிரில் குடைவிரித்து நிற்கும் வானம் நான். மண்ணுக்குச்சூரியன் வேண்டும். ஓயாத அலையென்ற எனதுடலால் உரக்கப்பாடும் விடுதலை யான்.”
        யா.தீ – 78

         நன்றி


பெரியார்குமார்
53 .கே.டி.ஆர் காய்கறி மார்கெட்
இராசபாளையம்

செல். 9976904384

இன்னும் சில கவிதைகள் - இம்மாத உயிர் எழுத்து இதழில்!


1. தேன் கூடு


இலட்சம் அறைகளாய் பெருக்கம் பெற்றிருக்கிற
தேனீக்களின் கூட்டில் இனிமையின் ரசம் பேருருக் கொண்டு
அடையாய்க் கூடாய் அந்தரக் கிளையில் தொங்குகிறது
கீழே அதை மாந்து நிற்பவனின் நெஞ்சில் 
எட்டாத உயரத்தின் ஓர் ஆசையாய் ஊசலாடுகிறது
இத்தேன் கூட்டைச் சுமந்து அலையும் 
என் பேருவகையை ருசிக்க வந்தவனையும் 
கூட்டில் ஓர் அறையாக்கி அணைத்துக் கொள்கிறது
அவன் மகரந்தத்தையும் தேனாக்கித் தின்கிறது 
அவன் வியர்வையையும் நாநுனியில் இனிப்பாக்கிக் களிக்கிறது
உயிரைக் கோதும் இலட்சம் ஈக்களின் எண்ண மூட்டத்தில்
கூட்டின் அறைகள் பெருகிக் கொண்டே இருக்க
எலும்புகளுக்கு இடையே புகைச்சுருள்களாய்
அவனுக்கான பாடல் கூவலுடன் எழும்புகிறது
உயிரின் இனிய வேதனை சொட்டுச் சொட்டாய்
காலத்தின்  பாறைகளில் துளிர்க்கிறது
அதன் அனுபவத்தை கையேந்திப் பருகிட
அருகில் வந்தவனுக்கு கையில் அள்ளித் தருகிறது
ஒவ்வொரு அறையையும் நிமிண்டும் சுவையின் குறுகுறுப்பில் 
கசியும் தேனை சேகரமாக்கும் கனவுகளின் பேரீசல்கள்
சுழன்று சுழன்று பறக்கும் நினைவின் பெருவண்டுகள்




2. ஆடை



பரந்த நிலவெளியை நீரில் நனைந்த உடையென 
வாரிச் சுருட்டி எழுந்த இவ்வுடலின்
நீல வண்ணப்பட்டாடை அவன் பார்வை விரித்த வானம்
எனைத் தன்னிரு கரங்களால் சுழற்றி இழுத்த விசையில்
எம்முடல்கள் நிலமொன்று விரித்து 
கொத்துக் கொத்தாய்க் கொன்றைப் பூக்கள் முளைத்தெழும்
பூ உதிர்ந்த வெளியில் காற்று சரசரத்துப் போகும்
உயிரைக் கவர்ந்து தந்த முத்தத்தில் 
பாறைகள் மீதாய்ச் சீறியேறி பெருமுழக்கத்துடன் வீழும்
பேரருவி பெருநிலவெளிகளில் பெருக்கெடுத்தோடும்
இடையறா முயக்கங்கள் இடையனின் கிடையோட்டிய
மேய்ச்சல் வெளிகளில் பசும்புற்களைப் பரப்பும்
மழை பெய்த நிலத்தை உழுதுழுது நடந்த
பயிர்க்கால்கள் போல யாக்கையெங்கும் வேரோடிய
ரோமங்கள் அவனைத் தேடித் தேடி அழைக்கும்
நிலவொளி வீசும் வானத்தை 
உடையாக்கித் தரும் ஈர அணைப்புகளில் 
உடலின் உயிர்ப்பிராணிகள்
கர்ச்சித்தெழும் கானகமாகும் கனவுகள் பெருகும்




3. உப்புக்கண்ணீர்



அந்தக் கடலாகி நிற்கும் அவள் கண்ணீரில்
எத்தனை ஆயிரம் அலைகளாய் எழும்பி நிற்கின்றன
அவளின் வேட்கைகளும் கேவல்களும் 
என்று அவள் அறியவே இல்லை
உப்பு நீரிலும் மடியா தாவரங்களை விளைவிக்கிறாள்
சப்தங்கள் அடங்கிய அவள் உலகத்தில்
புற வெளி அறியாத உயிர்களை உலவ விடுகிறாள்
பாறைகளை மோதி அறையும் அவள் கைகள்
கரையேறத் துடிக்கும் அவளின் மதலைகளை
கடலுக்குள் இழுத்து ஆழம் விளையாட அனுப்புகின்றன
தன் எல்லா பொக்கிஷங்களின் வண்ணங்களையும் மறுத்து
தன்னிடம் ஏதுமில்லை ஏதுமில்லை என கைவிரிக்கிறாள்
அவள் உறங்காமல் இயங்கிக் கொண்டே இருக்கிறாள்
உப்பாகிக் கரிக்கும் அவளை
இரத்தமாக்கி புரவிகளாக்கி எட்டுத்திக்குகளாக்கி
எழும் சூரியனை
தினம் தினம் பிரசவிக்கிறாள்



4. வீட்டிற்குள் வளரும் மரம்


அகத்தின் சுவர்களில் இதயத்தின் தரையில்
சுயவரலாற்றுப் புத்தகம் ஒன்று 
நூலாம்படை பூத்து வேர்களோடி கிடக்கிறது
அதை விரித்துப் பார்க்கும் துணிவில் 
வேர்களைப் பிய்த்தெடுக்கும் வன்முறை இல்லை
புத்தகம் தன்  இலட்சம் கைகளை விரித்துக் கொண்டு
நிமிர்ந்தெழுந்து நிற்கிறது கூரையை முட்டி மோதி
கைவிரித்த கிளைகளில் நான் கையூன்றி நகர்ந்த சம்பவங்கள்
சில குறிப்புகள் துளிர்த்து இலைகளாகி சில சருகுகளாகி
அந்தகாரத்தில் மிதந்தலைகின்றன
காற்று ஒரு பொழுதும் அதைத் தூக்கிச்செல்லாது
அதன் ஒரு கனியையும் எந்த அம்பும் வீழ்த்தாது
கூரை இடிந்து போகும் வரை மரம் வளரட்டும்





5. உப்புநீர்ச் சமுத்திரம்



அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களை அது நீந்தி விட்டதாம்
இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத் 
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்
வேடனின் அம்புகள் வரைந்த ஆகாய அகழிகளை
லாகவாய்ப் பாய்ந்து கடந்து
சிரிப்பு கொப்புளிக்க திசை திரும்பியிருக்கிறதாம்
கதவுகளற்ற அதன் அரண்மனையில்
சூரியனின் கூச்சம் கூட தரை வீழ்வதில்லை
தன் ஒற்றை இறக்கையால் வானின் கூரைபிடித்து சுழற்றி 
அதை ஓர் நீர்க் குட்டையில் எறிந்துவிடவும் முடியும்
இப்பொழுதைய அதன் தாகமெல்லாம்
உப்புநீர்ச்சமுத்திரத்தை அப்படியே குடித்துவிடுவது
நீண்ட நேரமாக கடலின் மேலே 
நின்ற இடத்திலேயே சிறகை விரித்து நின்று
தலைகுப்புறப் பாய தயாராய் இருக்கிறது என்றாலும் 
கடல் ஒன்றும் அதன் மீது கோபித்துக் கொள்வதில்லை





6. நீர்நிலை


கரைவிரிந்த அந்த நீர்நிலை எப்பொழுதோ 
தன்னை ஒரு கண்ணாடிப் பாளமாக்கிக்  கொண்டது
தேக்கத்தையும் குழப்பத்தையும் துறந்த
நிசப்தமான ஓர் ஆடையை அணிந்து கொண்டது
அகண்ட வானத்தை அதன் சிறகு விரிக்கும் மேகங்களை 
நட்சத்திர விழிகளை ஏன் காயும் நிலவைக் கூட
தன்னில் பிரதிபலித்தது தண்ணீராய் நிறைந்தது
ஒரு பருந்து அதன் மேலே பறந்து செல்கையில்
தன் வழியாகப் பறக்க இன்னொரு வானம் தந்தது
சூரியன் முன் தன் பொற்காசுகளை வெளிப்படுத்தினாலும்
எவராலும் களவு கொள்ள முடியாத பொற்கலமென
அது தன்னை ஆழம் ஆக்கிக் கொண்டது
அதன் மீது நீளும் மரங்களின் கிளைகளில் 
ஊஞ்சல் ஆடும் பறவைகள் கால் நனைத்துக்கொள்கையிலும்
ஒரு கற்பனையான மீனை நகங்கொத்திப் போகையிலும்
சிரிப்பின் சிற்றலைகளால் நீர்நிலையை நிறைத்துக் கொள்கிறது
தன் அழகையே தான் பார்த்துக் கொள்ள
தன் அத்தனைக் கைகளாலும் தாமரைகளை உயரே நீட்டுகிறது
அக அழுக்குகளை இரையென தின்னும் மீன்களால்
அதன் அந்தரங்கம் நீரின் அரண்மனையாகிறது
தன் கரை வந்து சுமைகளை இறக்கி வைத்து
ஒரு சிரங்கை நீரள்ளிப் பருகப் போகும் பயணிக்காகத்
தன்னை எதனாலும் பழுது படுத்திக் கொள்ளாமல் காத்திருக்கிறது.









குட்டி ரேவதி



நன்றி: பஷீர், சுதீர் செந்தில்

அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப்பூக்கள்







அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்




என் அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்
வேலியின் முட்கம்பிகளுக்கு இடையே 
அதன் கிளைகள் சிக்கிக் கொண்டிருக்கவில்லை
அரைப்பாவாடை முழுக்க செம்பருத்திப் பூக்களை 
நீர் ஓவியங்களாய் வரைந்திருக்கிறேன்
உடல் வளர வளர அரைப்பாவாடையில் பூக்களும் 
அதிகமாக முகிழ்க்கின்றன
என்னுடல் ஆணாய் இருப்பதும்
நீங்கள் என்னை பெட்டை என்று அழைப்பதும்
பூக்களற்ற உடையாக்குகின்றன என் அரைப்பாவாடையை
நீங்கள் இருந்து விட்டுப் போங்கள்
ஆண் உடலில் அறையப்பட்டதால் ஆணாகவும்
பெண் உடலில் புகுத்தப்பட்டதால் பெண்ணாகவும்
என் அரைப்பாவாடை முழுக்க செம்பருத்திப் பூக்கள்
சுழன்றாடுகையில் பாவாடை காற்றில் மிதக்க
செம்பருத்திப் பூக்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கின்றன.
ரகசியங்கள் சருகுகளாய் சரசரக்கின்றன
உடலின் எல்லைகளை பெயர்களால் வரையாதீர்கள்
அல்லது குறிகளால் குறிக்காதீர்கள்
உடல் முழுக்க போதையுடன் இச்சையுடன் எழுந்து 
பறக்கிறது செம்பருத்திப் பூக்கள் பூத்த அரைப்பாவாடை
அவ்வுலகத்தின் மையமாகிச் சுழல்கிறேன் நான்







மாயக்குதிரை



நண்பனுக்கு உடல் என்பது காட்சிப்பொருள்
தொடரும் ஒரு புதிர், தங்கைக்கு
அம்மாவுக்கு அது நிரந்தரப் புனிதம், கடவுளின் அழுக்கு
அப்பாவுக்கு பாதுகாத்து சேமிக்க வேண்டிய நாணயம்
ஊர்க்குளத்தில் உடலைக் கொத்தும் மீன்களிடம்
சிக்கிக் கொண்டபோது திறந்து கொண்டது என் உடல்
உறுப்பை அவை திருடிச் சென்று தாமரையின் இலைகளில்
உருட்டி உருட்டி விளையாடின வைரக்குமிழ் என்றன
பாட்டி சொல்லியிருக்கிறாள் உடல் அவளுக்கு அணிகலன்
புலிக்கு அதன் உடலே கானகம்
என்னுடைய மழலைக்கு அது ஓர் அணையாத சூரியன்
காதலனுக்கு தாமரைகள் பூக்கும் தடாகம்
எனக்கோ என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
எந்த உறுப்பிலும் என் சுயம் இறுக்கிப் பூட்டப்படாமல்
நிதம் தோன்றும் உணர்வுப் புரவியேறி விடுதலை காணும்
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பறந்து போன உறுப்புகளை பறந்து கொணர
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பெண்ணுமில்லை ஆணுமில்லை பெண்ணிலுமில்லை
ஆணிலுமில்லை நான் வளர்க்கும் மாயக்குதிரை






உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?


ஒவ்வொரு நாளும் அவன் 
ஒரு பெண்ணாக மாறிக்கொண்டே இருந்தான்
பெண்ணின் அடையாளங்களை முதலில்
புற உடலில் வரைந்து கொண்டான்
உடலின் வரைபடத்தில் நீர் ஓவியத்தைப்போல
காமத்தின் எழுச்சிகளும் வரையப்பட்டிருந்தன
கண்குழியில் ஆழக்கடலின் ரகசியங்களை
பொதிந்து கொண்டான்
உணர்ச்சியின் நீரோட்டங்களை
ஆறாகப் பெருக விட்டான் உடல் சமவெளியில்
விறைத்த குறியை அதன் ஆண்மைய முட்களை
அறுத்தெறிந்து சமனப்படுத்திக் கொண்டான்
இப்பொழுதிருந்து அவனை அவள் என்றே
அழைக்கலாம் என்று அறிவித்துக் கொண்டாள்

நம்பிக்கையின் தாரகைகள் முளைத்து
உடல் ஒரு வானமாக எழுந்தது
அதன் உயரத்திற்கு சிறகுகள் விரித்து
பறந்து கொண்டேயிருக்கும் அனுபவத்தைப்
பேசி பேசியே தன் குஞ்சுகளையும் வளர்க்கிறாள்
இப்பொழுதும் அவள் என்னைக் கண்டால் கேட்பது
என்னிடம் போல் உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?




குட்டி ரேவதி



இக்கவிதைகள், 'ஸ்மைலி' என்கிற லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு....


361 டிகிரி இதழில் வெளியான என் கவிதைகள்



பொருள் ஊடகக் கவிதைகள்

1.  துப்பாக்கியின் இரும்புக்கால்கள்

அவர்கள் தம் துப்பாக்கியின் இரும்புக்கால்களால்
என் மீதங்களை எட்டி உதைத்து
இன்னும் என்னுயிர் மிஞ்சியிருக்கிறதோ
எனப் பரிசோதித்தப் பின்னும்
என் செவிகளில் அவர்கள் சொற்கள்
எதிரொலிக்கக் கேட்டேன்
கிணற்றில் விழுந்த கல் போல்
எங்கோ இருட்டுக்குள் துலங்கிக் கிடந்தது
ஏற்கெனவே மூளையைத் தாக்கியிருந்த ரவை
ஆமாம், சொற்களுக்கு வருவோம்!
எறிகற்கள் பூமி அதிர விழுந்தது போல
என் நனவிலியை உலுக்கி அடங்கின
அச்சொற்களின் திரட்சி
அவர்கள் இன்னுமொரு முறை
இரும்புக்குறிகளின் விசையழுத்தினால்
பீறிடும் ரவைகளைத்தாம் ஒத்திருந்தது
அகராதியின் அத்தனைச் சொற்களும்
அந்த இறுதிக்கணங்களில்தாம் உருவாகின்றன
என்றறிந்தேன்
அவை என் அற்புதமான உயிர் உறுப்புகளின் மீது
கவணெழுந்த கற்கள் போல் மோதி
அவை உயிர்தாங்கிக் கடந்து வந்த
எண்ணாயிரம் யோனிகளையும் அவை முகிழ்த்த
முலைகளையும்  நினைவுபடுத்தின
இன்னும் இப்பொழுதும் விழித்திருக்கும் நனவிலியை
அணைப்பதற்கு இன்னொரு ரவை அனுப்புங்கள்
என்று குரலெழுப்ப இயலாதபடிக்கு
எப்பொழுதோ என் உயிர் அடங்கியிருந்தது
தோழர்களே!
 




















2. பொத்தான்கள்

காதுகளின் துளைக்குள் பொருந்திய பொத்தான்கள்
ஒளி தெறிக்க மின்னுகின்றன
நீந்திய நிலையில் வடிவில் உறைந்து போன தங்கமீன்
சிகரெட்டுகளின் முன்முனைகளைப் போல கனல்கின்றன
எப்பொழுதில் பொத்தான் என்று அவன் கிள்ளி விளையாடும்
என்னுணர்ச்சி முலைக்காம்பாய் துருத்தியெழுகிறது
என்பதும் கண்டறியப்படாத அரசியல் பகடி
ஏதோ டிஸைனர் கணவான் பெண்ணின் முலைக்குமிழ்களை
ஆண் சட்டையின் மார்பில் பொத்தானாக்கி
அவளையே அணியச் செய்தான்
சட்டையின் பின்னே பூக்கத் தயாராயிருக்கும்
முலையின் மொக்குகளோ கூசிக்குறுகி
போலிமையின் வடுவாகிப் பொத்தான்களாயின
மது பகிரும் வேளையில் நீலத்தீயுடைய
அப்பெண்ணின் கண்கள் விலையுயர்ந்த வைரப்பொத்தான்களாய்
மங்கிய மின்சார ஒளி பரவிய அறையில் துலங்கின
சமையலறைப் பெண்கள் தம் பொத்தான்களை
கேஸ் ஸ்டவ் எரிய வைக்கும்
திருகுப்பொத்தான்களாக்கி  வைத்திருக்கின்றனர்
பஸ்ஸில்  ஏறிப்  பலவேலைக்குப் போகும் பெண்கள்
ஆயத்தப் பொத்தான்களை
ஆங்காங்கே மறைத்து வைத்திருக்கின்றனர்
உயிரோடு உயிர் இணைக்கும் கொப்பூழ் பொத்தானை உருவாக்க
தாயின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டவளின் பொத்தான்
கிளைட்டோரிஸ் = பெண்முளையாகி இருக்கிறது
எவனொருவன் ஏது செய்தலுக்கும் வாகாய்
நான் என் பொத்தானை எங்கு வைத்திருக்கிறேன்
அவன் கண்டறிந்து சொன்னபோது
உடலின் துருத்தல்கள் எல்லாம் பொத்தான்களாய் எழுந்து நின்றன.












3. இசையடங்கிய ஏரி

செங்குருதி கசிந்து நதியாகா நாட்களில்
உடலுக்குள் விரிகிறது
இரத்தத்தின் ஏரி
உணர்ச்சிகளை பெருங்கயிற்றால் இறுகக்கட்டியதைப் போல
இரத்த நாளங்களில்  அதன் பேரிசைக்கோர்வை
அடங்கிப் போயிருக்கிறது
கூச்சல்கள் எனக்குமட்டுமாய்
மூலை முடுக்குகளில்  எலும்புகளின் கணுக்களில்
கடைக்கண்களில் வளைவு சுருண்ட இடுக்குகளில்
அலையடிக்காத கடலைப்போல முனகுகின்றன
சூன்யம் கவ்விய ஆகாயத்தை உடுத்திய
வேட்கையுற்ற மிருகமாய் அது
மூச்சடக்கிக் காத்திருக்கிறது 
திறந்து விடுகிறேன்  உடலை
செங்குதியின் பேராற்றை
சிறிய சிட்டுக்குருவிகள் பேராயிரம்
உடலைக் கிழித்துக்கொண்டு
பறந்து செல்கின்றன.
முழக்கத்தின் பேரதிர்வை கேட்டிலையோ எவரும்?
















  

4. கருப்பையின் சிறகுகள்

இரு புறமும் நீள விரிந்த இறக்கைகளுடன்
பூக்களை அலகில் ஏந்திப்பறந்த நிலையில் 
என் தாழிக்குள் வளர்ந்து வரும் அப்பறவை
உடலின் வீதியில்
சிறகடித்து உயரே எழுப்பும் பணி எனதானது
எழுந்து பறக்கையில்
கைகால்கள் விடைத்து நிற்க
வர்ணங்களின் புழுதியை எழுப்பும்
உடலெங்கும்
அதன் மண்டலம் எனைச் சூழ்ந்திருக்க
வானத்தைத் தன் நெடுஞ்சாலையாக்கி
விசையுற்ற அம்பைப் போல எனை இயக்கும்
மரங்களின் உச்சிகளில் அதன் சினைகளை
இறக்கும் போது நிலவு பிறந்து சிரிக்கும்
தேசங்களின் கனவுத் திரட்சிகளைக் கருக்கொண்ட
அதன் கூவல் நித்தம் நித்தம்
என் பருவகாலங்களை அலங்கரிக்கும்
நீலம் சூழ்ந்த அதன் கண்கள்
ஒரு மீனுக்குக் கடலைத் தந்தது.
 






குட்டி ரேவதி

நன்றி: 361 டிகிரி 

'முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ நூலுக்கு எழுதிய முன்னுரை

சிறிய அவகாசம் எடுத்துக்கொள்கிறேன்...



கனலும் உண்மையின் மீது போர்த்தியிருக்கும் சாம்பலை ஊதிப்பறக்கச் செய்யும் பணி கவிஞனுடையது. அரசியல்வாதியைப் போல நிலைப்பாடு எடுப்பது அன்று. உண்மைக்குச் சார்பான நிலைப்பாடே கூட உண்மையிலிருந்து வெகு தொலைவில் நிற்பது என்பது கவிஞனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல. ஆகவே அவன் கவிதைகள் எழுதவந்தான். நேர்மையான உணர்ச்சிகளை எந்த வித சமரசத்திற்கும் அச்சத்திற்கும் அதிகார விருப்பத்திற்கும் ஆதிக்க எழுச்சிக்கும் ஆளாகாமல் இருக்கும்பொழுது கவிதை முளைக்கிறது. இந்தத் தர்க்கத்தின் அடிப்படையிலேயே இத்தொகுப்பும் உருவாகியிருக்கிறது.



முள்ளிவாய்க்காலில் இறுதி வரை நின்று சண்டையிட்ட இருதரப்பு போராளிகளின் பார்வைகளாகவோ அங்கு கடைசிக்கணம் வரை உயிருடன் சாட்சியாக நின்று களத்தில் மனித அவலங்களை கண்ணுற நேர்ந்த மக்களின் ஓலங்களாகவோ காலம், இடம் என்ற அங்குற்ற வெளிகளுக்கு அப்பால் இருந்து ஊகித்தும் கணந்தோறும் உறவுற்றும் சொற்களாகி நின்ற கவிஞர்களின் கவிதைகளாகவோ இந்தத்தொகுப்பு ஆகி நிற்கலாம். பல சமயங்களில் கவிதைகள் நீதிமன்றங்களின் விசாரணைகளாக இருக்கின்றன. அல்லது உயிர்பிரியும் நேரத்திலான வாக்குமூலங்களாக. அல்லது நாட்குறிப்பின் ரகசிய குறியீடுகளாக. அதை வாசிக்கும் எவரும் நேரடியான பொருளைப் புரிந்து கொள்ள முடியாத படிக்கு சொற்களின் மறைமுக அர்த்தங்கள் துலங்கும் படியான உளவு நோக்குவதற்கு ஏதுவான படிமங்களாக. வகுப்புகளில் சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு மாணவியின் ஒப்புவித்தலாக. பெருங்காற்றுக்கு முஷ்டிமடக்கும் போராளியாக. அடர்ந்த இருண்டவெளிக்குச் சென்று உயிர்த்தோழியின் சடலத்தை மீட்டு வரும் எத்தனமாக. இப்படி எண்ணிலாத குரல்களைக் கொண்டுவரும் முயற்சியே, ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ எனும் இக்கவிதைத் தொகுப்பு. இதுவரையிலான போர்பற்றிய அத்தனை மனித அறிவும் நினைவுகளும் இக்கவிதைகளில் புரள்கின்றன.



மனித நினைவுகளில் வன்முறை பதிந்திருக்கும் வடிவங்களைச் சொற்களாக்க முயலும் போதெல்லாம் கவிதை பிறப்பதாக நான் எண்ணுவதுண்டு. கிணற்றின் தாரையைப் போல நினைவின் ஆழ்துளையின் உட்சுவர்களிலிருந்து சுரந்து வழியும் சொற்களே கவிதை வடிவாகின்றன. மீண்டும் மீண்டும் கவிதைகள் எழுதப்படுவதால் வன்முறையை அழிக்க முயலும் என்ற எனது நம்பிக்கைத் தீர்மானம் தான் இக்கவிதைத் தொகுப்பின் உருவாக்கத்திற்கான அடித்தளமும் கூட. மேலும் இது ஒரு வகையில் மறைமுகமான ரணசிகிச்சை என்பதைப் பலருடைய கவிதை வரிகள் உணர்த்துகின்றன.



ஊழ் என்பது சிலப்பதிகாரத்தில் மனித மனங்களின் தற்செயலான முடிவுகளாலும் தான்தோன்றித்தனமான போக்குகளாலும் தாம் தீர்மானிக்கப்படுவதாக சித்திரிக்கப்படுகிறது. மனித மனம் தன் இயல்பு மீறிய திட்டங்களின் சாத்திய அசாத்தியங்களை அறியாமல் இப்படி வெறுமனே உணர்ச்சிகளின் கால்களுக்கிடையே அலைவுறும் போது ஏற்படும் நசுக்கல்களே ஊழுக்கான தொடக்கமாக இருக்கிறது. மனித மனத்திற்கு சமாதானம் என்ற ஒருவார்த்தை இருக்க முடியாது. அது தேவனால் கொடுக்கப்பட்ட சொல்லாக இருக்கலாம். ஊக்கம் பெற்ற மனிதன் எதையாவது தனக்குத் தானே சாதகமாகவோ எதிராகவோ செய்து கொண்டுதான் இருப்பான். அவ்வாறு அவன் தொடர் இயக்கத்திற்கான வாழ்க்கைக்குள் புகும்பொழுது இதன் எல்லைகளையும் முடிவுகளையும் கற்பனைசெய்து பார்த்து அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்க்கும் அவசியம் இல்லை. மாறாக தற்காலிகமான ஓர் எழுச்சி என்ற மனிதனுக்கான அடிப்படை அறிவுவெளியால் அவன் எதையேனும் செய்துவிட நினைக்கிறான். அதில் போர் என்பதும் ஒடுக்குமுறை என்பதும் இன்னொருவர் மீது ஏவும் வன்முறை என்பதும் முதன்மையானதாக மாறி அவன் பின் ஒருபொழுதும் தான் தொடக்கப்புள்ளிக்கு மீண்டு வர முடியாத நிலைக்கு தன்னைத்தானே இழுத்துச் செல்கிறான். முன்னை வினை சூழ் காலம் என்ற சாக்கு எல்லாவற்றிற்குப் பின்னும் ஆறுதலாக இருக்கிறது.



ஈழத்தைப் பொறுத்தவரை இரண்டு தரப்பினராகவே பிரிந்திருக்கிறது அரசியல் நிலைப்பாடு. விடுதலைப் புலிகளை முன்வைத்து எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுக்கும் இவர்கள் ஈழத்தை முதன்மையாக வைத்துப் போரிட்ட பிரபாகரனுக்கு எதிரானவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பின்பு அந்தக் கோரிக்கைக்காக வாதாட நேர்ந்தது. அதற்கு ஆதரவாக இருப்பவர்களோ அதற்கான உள்ளீடுகளையும் நுண்ணிரசியலையும் பேசாது வெறுமனே உணர்ச்சிவயப்பட்டவராய் இருந்து ஈழத்தை ஒரு கருத்துநிலமாகவே முன்மொழிந்தனர். இந்நிலையில் இதன் பின்புலத்தில் சாதியம் என்பது மிகத் தீவிரமான தந்திரங்களைக் கையாண்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. இந்தியாவில் அதிகாரச்சாதி அடையாளத்தைக் கொண்ட எவருக்கும் ஈழம் என்ற பேச்சே வேப்பங்காய் தான். இதனால் தான் சாதியம் இந்திய தேசியம் தமிழ்த்தேசியம் எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்து அதன் நுட்பமான கோணங்களை எல்லாம் விரித்துப் பேச வேண்டியிருக்கிறது. தமிழினப் பெருமிதம் தன்மானம் கொண்ட இந்தியர்கள் சாதி வெறியை ஒரு வன்முறையாக நோக்குவதே இல்லை. இந்தியாவைத் தன் நாடு என்று முழங்கும் ஆதிக்க வர்க்கம் மற்றும் சாதியைச் சேர்ந்த நாட்டுப்பற்றாளர்கள் எவரும் தமிழ்ப் பெருமை என்பதைப் பேசினாலே அது தமிழகம் சம்பந்தப்பட்டதாக இருக்கட்டும் அல்லது ஈழம் சம்பந்தப்பட்டதாக இருக்கட்டும் இரண்டு விஷயத்திலுமே தமது நாட்டைத் துண்டாட தமிழர்கள் முனைவதாய் அவசர அவசரமாய்ப் பறைசாற்றிக்கொண்டு நிராகரிப்பார்கள். இரண்டுமே தமது நாட்டை இழப்பதற்கான அச்சங்கள் இல்லை, தாம் தலைமுறை தலைமுறையாகச் சம்பாதித்து வந்த சாதிப் பெருமித்தையும் அதிகாரத்தையும் இழந்துவிடக்கூடுமே என்ற அச்சம் தான். மேலும் ‘இந்தியா’ என்று நாட்டின் பெயரைச் சொல்லித் தான் அவர்கள் மனித இரத்தத்தைப் பருக முடியும் என்று ஏற்கெனவே அறிந்திருந்த படியால் பார்ப்பனீய இந்தியாவைப் பொறுத்த வரை தமிழ்த் தேசியமும் சரி, ஈழத் தமிழ்த் தேசியமும் சரி செல்லாது.



ஏதோ ஒரு வகையில் தமிழ்த்தேசியத்தின் தலைமை அவ்வாறு இல்லையென்றாலும் அதன் கருத்தியலையும் நிலைப்பாட்டையும் தம் முழக்கமாகக் கொண்டிருக்கும் எந்த ஒரு நபரிடமும் சாதியம் பற்றிய புரிந்துணர்வும் அதற்கான முனைப்பும் இல்லாததை மிகுந்த கவலையுடன் இங்கு பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள முரட்டுத்தனமாக மறுக்கும் பாமரத்தனமும் பரம்பரையாக ஆண்டுவந்ததன் பழக்கம் செறிந்த ஆண்டைக்கான குருட்டுத்தனமும் இவ்வினப்படுகொலையில் என்ன பங்கு எடுத்துள்ளன என்பது பேசப்படாமலேயே காலம் நழுவிச்செல்கிறது.


கவிதைகளுக்கு வருவோம்.

விடுதலைக் கனியின்/ மரபணு விதைக்குள்/வீரியம் கலந்த/ஓர்மமும் கொடூரமும்

சமன்பாடற்று/ஓங்கியே வளர்ந்ததால்/அவர்கள் உச்சரித்த/ஒற்றைச் சொல்லின்/சாயல் படிந்ததை/தவிர்த்திருந்தோமா? எனும் கி.பி.அரவிந்தனின் கவிதையுடன் தொடங்குகிறது இத்தொகுப்பு. நாங்கள் மறுத்தொரு சொல்லும் சொல்லோம்/துப்பாக்கிச் சன்னங்கள்/ வாய்க்குள் பிரவேசித்து/ பிடரிவழியாக வெளியேறுவதை /நீங்களும் விரும்பமாட்டீர்கள் தானே…? என்ற கேள்வியே பதிலாய் விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம் கவிதையில், தமிழ்நதி. இரு கேள்விகளும் தனித்து நின்று நம்மைச் சுட்டியும் தமிழ்நதியின் கேள்வியே பதிலாய்த் தொக்கி நிற்பதுமென ஓர் மனித அவலம் தன் முடிவுறாத் தன்மையை பறைசாற்றுகின்றது.


மெழுகுவர்த்திகளில் ஏற்றப்பட்டும்/ ஊதுபத்தியில் புகையவிடப்பட்டும்/ அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை தான் நான், என ’வெளியேற்றம்’ கவிதையில் அனார் கூறுவதைப் போலவே எல்லோரையும் தானாக நோக்கும் தன்மையால் கவி வாதம் பொதுநிலையை அடைகிறது. புணர்ந்து புணர்ந்து சக்கையாகிய/ பெண்ணுடலின் யோனிக்குல் /குண்டு வைத்து தகர்த்துப் போகிறான்/ ஒருவன்பிணங்களோடே வாழ்தல்’ என்ற கவிதையில் ,இளைய அப்துல்லாஹ் பெண்ணுடலின் யோனி என்பதை நிலத்தின் ஒரு பகுதியாக உள்வாங்கி அதன் எதிர்த்தன்மையை சித்திரிக்கிறார். அவர்கள தான் வருகிறார்களாக்கும் வெள்ளை வானில்/ மனைவி முத்தமிடும்போதும் காது வெளியில் தான் நீட்டிக்கொண்டிருக்கிறது... உயிர் கவிதையில் இளைய அப்துல்லாஹ் அகவெளியையும் புற விளைவையும் ஒன்று சேர்க்கிறார்.


முள் குத்தாமல் கம்பியை/ லாவகமாகப் பிடித்தபடி/மணிக்கணக்காக முகம் காட்டப்/

பழகி விட்டிருந்தனர்/மக்கள் – இரண்டாம் காலனித்துவத்தின் சில காட்சிகள், கனகலதா நேரடியான ஒரு பத்திரிகைப் புகைப்படத்தின் காட்சியைப் போல கவிதைக்குள் துயரைச் செருகுகிறார் புத்தராய் பிறந்த கிருஷ்ணர்/பிசாசாய்ப் போனார்/வெட்டுண்ட கடைசிக் கரங்களையும்


புதைக்கப்பட்ட மீதி உயிர்களையும்/தின்று கொன்றே/அவர் கீதையைக் கேட்ட/ தேவதைகள்/ஊர் பிடிக்கத் தொடங்கின. – குருஷேத்திரம் எனும் கனகலதாவின் கவிதை மிகச் சரியாக புராணத்தை அங்கதம் செய்கின்றது. துக்கம் அமரும் கையில் இனி தும்பியும் அமரா/ துப்பாக்கியும் அமரா என்று மாதுமையின் கவிதை போரின் வன்முறையால் பறிக்கப்பட்ட பால்யத்தையும் நினைவுறுத்துகிறது.



அந்த நெருப்பு நம் காலடியில் / தணல் பூத்துக்கிடக்கிறது/ உள்ளே சுவாலை கொள்ளத் துடித்தவாறு – இரண்டாம் காலம் எனும் கவிதையும், சுற்றி வளைக்கப்பட்ட நிலையிலிருந்தும் / கைதியான சொற்களை/ தண்டனைக் காலத்தின்/ வலியுடைய சொற்களை குற்றம் சாட்டப்பட்டவனின் தணிந்த குரலுடைய சொற்களை / மறைத்து வைக்க முடியவில்லை அவற்றின் பெருகும் ஒளியை கட்டுப்படுத்தி

வழியற்றவனின் சொற்கள் கவிதையும் கருணாகரன் வசந்தியின் இக்கவிதைகள் எழுத நேர்ந்த அவசியத்தை வலியுறுத்துகின்றன.


சிந்திக்கத் தெரிந்த மனித உடற்கூறுகளை, மூளையின் நரம்புகளை/சிதைப்பதன் மூலம்
அழிக்க வைக்கப்படும் தந்திரத்தை அவர்கள் வரலாறு முழுவதும்/தந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்பது சிமோந்தியின் இறுதிக்கணங்களாலான கவிதை. சட்டம் உடைந்த கண்ணாடியை / காவித் திரிகிறேன் பிரதிபலிப்புகளுக்குள் / மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறது / அழகிய தருணங்கள் -
சித்தாந்தனின் இக்கவிதை வரிகள் மெய்மையான தருணங்கள் வெறுமனே பிம்பங்களாகிவிட்டதைச் சொல்கின்றன.


சுல்பிகா வரையும் வைரமூக்குத்தி பற்றிய கவிதைச்சிறுகதை கவிதை எனும் இலக்கிய வடிவையும் நேர்த்தியையும் சிதைத்துப் போட்டு மீண்டும் அடுக்கும் கவிதை. ஒவ்வொரு அகதியும் முதுமையடைந்து கொண்டிருக்கிறோம்இது சுலோசனா தேவராஜா. இந்தக் காணி நிலத்தில் என்னுடைய கதை பிறந்தது/ அங்கு கடல் கொண்ட /பெருமரங்களின் /வேரடிமண் இப்பொது வெளித் தெரிகிறது, என்ற வரிகளும் நீரற்றது கடல் / நிலமற்றது தமிழ் /பேரற்றது உறவு என்ற வரிகளும் சேரனுடையவை. தேசியச்சிந்தனையின் முத்தாய்ப்போ என்று எண்ண வைக்கும் அதே சமயம் ஒரு பெருமரத்தின் வேரடிமண் என்ற குறியீடாகவும் பார்ப்பது அச்சிந்தனைக்கான முழுமையை எய்துகிறது.



திருமாவளவனின் முறையீட்டுக்கவிதைகள், தீபச்செல்வனின் தொடர்நிகழ்வுக் கவிதைகள், சபிக்கும் குரல்களுடன் முனகும் தேவ அபிராவின் கவிதைகள் என ஊழியை வேறு வேறு மனித சஞ்சாரங்களுடன் அணுகும் கவிதை வெளி உருப்பெறுகிறது. காருண்யனின் தீராப்பதுங்குகுழி விசாரம் ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது. ஆகவே பல குரல்கள் கேட்கின்றன.



குருவியை உறங்க வைத்திட முடியாமல் /கிளைகளினூடே /பதுங்கிப் பதுங்கி அசைந்து கொண்டிருந்தது /இருண்ட இரவு என்ற ஃபஹீமா ஜஹானின் உயிர்வேலி கவிதை ஒரு துன்பியல் உணர்ச்சிகர நாடகத்தின் உச்சக்கட்ட காட்சியை அதன் நடுக்கத்துடனும் என்ன நிகழுமோ என்பதற்கான குறியீட்டு உணர்ச்சியையும் கொண்டிருக்கிறது. ஜெயந்தி தளையசிங்கத்தின், இங்கு நாம் இருளை விரும்பினோம் / நாங்கள் அம்மணமாய் இருந்தோம் என்ற வரிகள் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ள இயலாத இயலாமையின் மூர்க்கமான பதிவு என்று சொல்லலாம்.


மு. புஷ்பராஜின் கனவில் வந்தவன் கவிதை சித்திரிக்கும் கற்பனை யதார்த்தத்தையே கற்பனையாக்குவது போல. பலியாடுகளாய்ப் போன நாட்களை நினைத்துருகல் மலர்ச்செல்வனின் கவிதை. இனப் பேரினவாதம் பலியாடுகளுக்காய்ப் பாடும் பாடல் எதுவாக இருக்கும் என்று நோக்குகிறார். நிறைவேறாக் கனவு முடிவுறல் தகாதென / மூடாத கண்கள் - இவை விநோதினியின் வரிகள். நிகழ்வின் சித்திரங்களிலிருந்து ஆறுதல் படிமங்களை எழுதுகிறார். அன்று புறப்பட்ட காற்று ஊர் திரும்பவேயில்லை என முடியும் விஜயலெட்சுமியின் கவிதையை வாசிக்கையில் காற்றின் பாதையைப் போலவே வாழ்வின் கோரம் முடிவுறாததாய் நீளுவதை உணர்த்துகிறது. எதிரெதிர் முகங்களிடையே / காற்று / ஒரு பயணியைப்போலலைகிறது ‘விடுபட்ட காலத்தின் வார்த்தைகள்’ கவிதையில், சித்தாந்தன் ஒரு நிசப்தமான தருணத்தை இயக்குகிறார்

வறுமையை எழுதுகிறது. வெலிகம ரிம்ஸா முஹம்மத்தின் கவிதை. இருக்கட்டும்/ புத்தர் உறங்கும் விகாரைக்கு நீ/வெண்ணலறிப் பூக்களொடி என்கிறது. எம். ரிஷான் ஷெரீபின் ஈழம் எனும் கவிதையும் வாழ்வின் உடனடி யதார்த்தங்களைப் பேசுகின்றன.


தப்பிச்செல்வது இயலாததல்ல/ செலவிடப் பணமும் செல்வாக்கும்/ இருந்தால் ஒரு வழி, இல்லாவிட்டால் இன்னொரு வழி/ ஒன்று மண் வழி/ மற்றது விண்வழி – சி. சிவசேகரத்தின் முட்கம்பித்தீவு கவிதையும் சொல்வதையே போர் தேவையில்லை / இனி/ உதவி என்ற பெயரால் கொலைகள் தொடரும் என முடியும் றஞ்சினியின் கொல்வதற்குப் பல வழிகள் கவிதையும் படுகொலையைச் சித்திரவதையிலிருந்து தப்பித்தல் வழியாக நோக்குகின்றன.


நீள விரிந்து வேம்பு / முற்றம் சருகுதிர்க்க /நெஞ்சில் குடைவிரித்த /வேர் கொண்ட வாழ்வு என்ற செழியனின் நெஞ்சில் குடை விரித்த வாழ்வு காட்டும் நம்பிக்கையும் என் மண்ணிலும் முறிந்த வேம்புகள்/ மலர்கின்றன என்ற வ.ஐ.ச.ஜெயபாலன் முதல் வசந்த பாடல் கவிதையும் இத்தொகுப்பெங்கும் வசந்தத்தின் நம்பிக்கையின் வேம்பு மனம் கமழச்செய்கின்றன.



ஈழ இனப்படுகொலை எனும் நிகழ்வை எந்தக்கோணத்தில் பார்ப்பது என எல்லோரும் சுவரை முட்டிக்கொண்டு யோசிக்கும் போது அந்தக்காட்சியையே அழித்தொழிக்கும் தோரணையையே இந்தத்தொகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறது. காட்சி ஊடகத்தின் ஆட்சியும் ஆதிக்கமும் எவ்வளவுக்கெவ்வளவு மெய்மையாக ஒரு போர்க்களத்தையும் ஓர் இனப்படுகொலையையும் நமது கண்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கமுடியும் என்பதை இந்தத்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் உணர்ந்திருக்கமுடியும் என்றே நம்புகிறேன். இணையத்திலோ தொலைக்காட்சிகளிலோ அவ்வாறான காட்சிகள் இடம்பெறும்போதெல்லாம் நான் அவற்றைக் காணுறுவதைத் தவிர்த்திருக்கிறேன். அவை நினைவவயங்களில் ஏற்படுத்தும் வன்மங்களைக் களையவோ அல்லது அவ்வாறான காட்சிப்பதிவுகளையே நான் கண்ணுறப் போவதில்லை என்ற எனது சத்தியப்பிரமாணமாயிருக்கலாம். ஆனால் நான் நிச்சயம் கோழை தான். நம்மக்கள் கொல்லப்பட்ட உடலுடன் சிதைக்கப்பட்ட மரியாதைகளுடன் கிடப்பதைக் காணும் சக்தி எனக்குமில்லை தான். எனில் இந்நூல் அதற்கான சிகிச்சை முறை. உலகெங்கிலும் விரவிக்கிடக்கும் கோடானகோடி தமிழர்கள் மற்றும் கொல்லப்பட்டோரின் பக்கம் நின்று இது சரியா, எது தவறு என்று கேள்விகளில் குழம்பிப்போயிருக்கும் எல்லோருக்குமான பதிலாக இத்தொகுப்பை நான் முன்வைக்கிறேன். மனிதன் தன் அறிவின் உச்சத்தில் அரசியல் பேசும்போதெல்லாம் அவனுடைய நேர்த்தியான உணர்வுகளின் அடித்தளம் அவனிடமே இரைந்து கெஞ்சிக்கேட்டுக்கொண்டிருப்பதை அவன் செவிமடுக்காமல் போகிறான். மூளையின் தரையில் மண்டிக்கிடக்கும் உணர்வுகளை இக்கவிஞர்கள் எல்லோரும் சொற்களாக்க முயன்றிருக்கின்றனர். இதில் அரசியல் பேச என்ன இருக்கிறது? இராணுவக்களத்தில் நிகழும் வன்முறைகள் படுக்கையறை வரை நமது அனுமதியின்றி வந்து சேரும்பொழுது படுக்கையறையின் வன்முறைகளும் நியாயப்படுத்தப்படுவதாகவே தோன்றுகிறது.



எல்லா அரசியலின் அறிவார்ந்த கேள்விகளையும் கேட்டுணர்ந்தவாறே அவற்றைப் புறம் தள்ளி முன்னோக்கிப் போகும் அக எழுச்சியுடன் இருப்பவன் தான் கவிஞன். வாழ்வதற்கான வேட்கையை நிறைந்த கருணையுடன் எல்லோர் முன்னும் தனிமனிதனாய் எழுந்து நின்று ஊட்டுபவன். சேரனின் கவிதைகளை வாசிக்கும் பொழுது நான் உணர்வதுண்டு. சொற்கள் மனிதனின் எலும்புக்கூட்டைப் போல எழுந்து நின்று ஆவேசமாய் ஒரு மாயவெளியில் அமானுஷ்யமான அசைவுகளுடன் இயங்குவதை. பின்பு ஈழத்திலிருந்தும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெண் கவிஞர்களின் படைப்புகளையும் நான் விரும்பிச் சுவைத்துப் படித்தேன். அவர்கல் தம் மனவெளியில் வெளிப்படுத்த முடியாமல் சுடுண்டுகிடந்த உக்கிரங்கள், சொற்களாய் குமைந்து கிடந்து கவிதைகளாய்ப் பூத்துக்குலுங்கியதைக் கண்டேன். சங்கத் தமிழ்க்கவிதையின் அகம் புறம் என்ற இருமை நிலைகளைப் போலவே நவீன தமிழ்க்கவிதையில் இன்னொரு திரையை விரிக்கின்றன ஈழத்தமிழ்க்கவிதைகள். இதனால் தான் இன்றைய நவீன தமிழ்க்கவிதை பட்டொளி வீசிப்பறக்கிறது என்று சொன்னாலும் மிகையன்று.



இக்கவிதைகளைத் தொகுப்பதில் நானொருத்தியே ஈடுபட்டிருந்தாலும் இதில் தங்களின் தூய இருப்பின் மூர்க்கத்துடன் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஏராளம் குறிப்பாக ஃபஹீமா ஜஹானும் சேரனும் இனியொரு யோகன் அசோகனும் யமுனா ராஜேந்திரனும் செளமீதரனும். தொடர்ந்து தாங்கள் அறிந்திருந்த எல்லா தொடர்பு மின்னஞ்சல்களையும் அனுப்பியும் தங்கள் படைப்பாளி நண்பர்களையும் அறிமுகப்படுத்தியும் உதவினர். தொடர்ந்து தொகுப்பு எப்படி வளர்ந்து வருகிறது என்று அக்கறையுடன் ஈடுபட்டனர். இல்லையென்றால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிதறுண்ட தமிழ்ப்படைப்பாளிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவு அசாதாரணமான வேலை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். இதில் தங்கள் கவிதைகள் இடம்பெறுவதற்கான சமாதானத்தையும் ஒப்புரவையும் தனக்குத்தானே வழங்கிக்கொண்ட ஒவ்வொரு கவிஞருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். நீங்கள் தாம் இத்தொகுப்பின் குரல்களாக பதிவாகியிள்ளீர்கள். ஆழி செந்தில்நாதன் இத்தொகுப்பிற்கான ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரன்றி இந்நூல் உங்கள் முன்னே சாத்தியமே இல்லை.



வழக்கமாகத் தொகுப்புகளைத் தொகுப்பதைப் போல இவற்றில் எது சிறந்த கவிதை என்று தேர்ந்தெடுக்கும் பணியை நான் மேற்கொள்ளவில்லை. வேதனைக்குரிய ஒரு நிகழ்வை ஒட்டி கவிஞர்களின் அகக்குரல்பதிவுகளைப் பதிவு செய்வதே என் எண்ணமாக இருந்தது. நிறைய கவிதைகள் அனுப்பிய பொழுது மட்டும் சமத்துவம் கருதி நான் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது. இப்பணியினூடே கவிதையின் பயன்பாடு பற்றிய கேள்வி மட்டும் ஓயாததாக சமூகத்திடம் புரண்டு கொண்டே இருந்தது. எனக்கு அதற்கான பதில்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தாலும் கவிதைக்கான தேவையும் பயன்பாடும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அதிவேகக் காலத்தில் கால் பதித்த மனிதனுக்கு கவிதையின் சொற்கள் மருந்துக்கும் சிகிச்சைக்கும் நிகரானதொரு பணியை ஆற்றுகின்றன. அது சொல்லித் தீராதது என்பதை இக்கவிதைகள் நமக்கு வழங்கும் நீளமான மெளனத்திலிருந்து உணரலாம்.



தற்காலச் சமூகத்துடன் உணவிற்காகவும் அற உணர்வின் பொருட்டும் ஒரு கவிஞன் அன்றாடம் மோதவேண்டியிருப்பதால் அவன் தன் ஆளுமை பற்றியும் அக்கறை கொள்ளவேண்டியிருக்கிறது என்பதை நான் மிகுந்த தயவுடன் கூறிக்கொள்கிறேன். அது தான் கவிதைகளின் கொடியை அவற்றின் மானுடக்குரலை தேசங்கள் தாண்டியும் அசைத்துக்காட்டுகின்றன. தொய்விலாத ஆளுமையை கவிஞன் தன் கவிதைகளுக்கு எலும்புகளாகவும் தசைகளாகவும் உருவாக்கிப்படைக்கிறான் என்பதில் ஐயமில்லை. வாருங்கள் கவி நண்பர்களே! நமது உக்கிரமான ஒப்புயர்வான ஆளுமைகளால் இன்னும் இன்னும் கவிதைகளைப் நெய்திடுவோம். காலந்தோறும் புனைவு தோறும் பழங்கதைகள்தோறும் எரிந்துகொண்டிருக்கும் அந்நிலத்தீயை குளிரும் சொற்களால் அணைத்திடுவோம்.



குட்டி ரேவதி

6.06.2010

சென்னை