நம் குரல்

பார்ப்பனீயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ப்பனீயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.





* ஜிஷாவின் வல்லுறவு கொலைக்குப் பின், எங்கெங்கும் பெரும் அரற்றலாய் இருக்கிறது. ஆங்காங்கே, நண்பர்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், "இப்பொழுது இந்தப் பெண்ணியவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?" என்று கேட்கின்றனர். ஒரு நண்பர் வேடிக்கையாக, 'ஓ, அவர்களா? பெண்ணியவாதிகளே பெண்ணியவாதிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், என்று பதில் இட்டிருந்தார்.

* 'ஜிஷா', தலித் என்பதால் பொதுச்சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே, இந்தியப் பெண்ணியவாதிகளும், ஊடகங்களும் கூட வேடிக்கை பார்ப்பதுடன் கடந்தும் செல்கின்றனர்.
* நிர்பயா விடயத்தில் ஒருங்கிணைந்தது, போல் இதில் பெண் சமூகம் ஒருங்கிணைய சாத்தியமில்லை. அதில் வன்முறையை நிகழ்த்தியவர்கள் ஒடுக்கப்பட்ட ஆண்கள் என்பதால் தண்டனையைப் பெற்றுத்தருவதில், ஒடுக்கப்பட்ட ஆண்கள் மீதான வெறுப்பைச் செயல்படுத்துவதில் பெண்கள் வெற்றி கொண்டார்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

* ஜிஷாவின் படுகொலையில் மட்டுமல்ல, சமீபத்திய சாதிஆணவப்படுகொலையாகட்டும், பள்ளி மாணவிகள் படுகொலையாகட்டும், எல்லா படுகொலைகளிலுமே வன்முறையை நிகழ்த்தும் விதத்தில், கரும்பை நுழைப்பது, முலைகளை அறுப்பது, குடலை உருவுவது என்று 'படுகொலை' ஒரு கேளிக்கையாவதை உணரமுடிகிறது. ஃபேஸ்புக்கில் நாம் எப்படி அவதூறுகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதில் சுவாரசியம் பெறுகிறோமோ அது போலவே.

* ஜிஷாவின் வன்கொலையில் எவ்வளவு காட்டுக்கத்தல் கத்தினாலும் நீதி என்பது ஒரு பிஸ்கெட் துண்டுக்குத் தான் சமானம். நிர்பயாவின் விடயத்தில் இல்லாத, பெரும் அமைதி நிலவும் இந்த நேரத்திலேனும் பெண்ணியவாதிகள் எல்லாம் பார்ப்பனீயமயமாகிவிட்டதை உண்மையான போராளிச்சமூகம் உணரவேண்டும்.
* பார்ப்பனீய பெண்ணியவாதிகள், காலங்காலமாக பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் 'பெர்சனல்' ஆதாயங்களைக் காரணமாக வைத்து, 'பிரித்துவிடுவது' ஒன்றே அவர்கள் ஆகச்செய்யும் சிறந்த வேலை, கலை. அப்படி பிரித்து வைத்திருந்தால் தான் இவர்களின் பார்ப்பன அடையாளங்களை, அதிகாரங்களை, அங்கீகாரங்களை இழக்காமல் இருக்கமுடியும். இது தான் அவர்கள் முன்வைக்கும் 'பெண்ணியம்'.

*பெண்கள் ஒருங்கிணைந்தால், பார்ப்பனீய பெண்ணியவாதிகள், தங்களின் சாதிய அங்கீகாரத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ( இவை தாண்டி, பார்ப்பனச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களை அப்படி உணராத, தம் அடையாளங்களை தொடர்ந்து மறுக்கும் பெண்கள் யாரேனும் உண்டா, இங்கே)

* அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின், அதாவது சமூகத்தின் சாதிய விழிப்புணர்வின் மறு தூண்டலுக்குப்பின், இந்தியாவின் எந்த மூலையிலுமே பெண்கள் இயக்கத்தைக் கட்டைமைக்க முடியவில்லை. இது ஆய்வுப்பூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது. எங்கெங்கு பெண்கள் இயக்கம் தோன்றினாலும், அங்கே சாதி அதிகாரப் பெண்கள் நுழைந்து சாதிமறுப்பு அமைப்புகளை 'ப்ளேட்' போட்டு கத்தரிக்கவே செய்திருக்கிறார்கள்.
* 'தலித்' என்றால், சாதிப்படிநிலைகளில் சேராது. ஒடுக்கப்பட்டவர்கள் என்றே பொருள். ஆனால், சமீபத்தில், பார்ப்பனீயச் சிந்தனைச் சாய்வால், மெல்ல, மெல்ல 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது.

* இந்த சாதிமயப்போக்கால், ஏற்கெனவே, 'தலித்' சமூகத்தின் மீதான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதி ஆதிக்க சமூகம், 'தலித் சாதிப்' பிரச்சனைகளை, வன்முறைகளை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவே தூண்டும்.
* 'சாதி ஒழிப்பு' நூலில், அம்பேத்கர் இரண்டு முக்கியமான விடயங்களை முன் வைக்கிறார். ஒன்று: அகமணமுறையிலிருந்து விடுபடுதல். இரண்டாவது: இந்த நாட்டின் நீதிமுறை என்பது பார்ப்பனீய நீதிமுறை என்பதை உணர்ந்து அதை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடருதல்.

* “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - என்று கதறுகிறார், ஜிஷாவின் தாய். இந்திய நீதிமுறை ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதியை ஒரு பொழுதும் வழங்கியதில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
* இப்பொழுது, 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது. சாதியத்தின் ஸ்பெஷல் தன்மை என்னவென்றால், நம் வீட்டில் வன்முறைகள் நிகழாத வரை, எல்லாமே நமக்கு வேடிக்கை என்ற குணாதிசயம் தான். யாரும் 'மூச்' விடமாட்டார்கள்.


குட்டி ரேவதி

கர்ணன்: பார்ப்பனீய சூழ்ச்சிகளின் அம்புகளைத் தன் மார்பில் தாங்கியவன்




ஒரு பேருந்துப்பயணம். பொழுதைக்கழிக்க பேருந்து வீடியோவில் எந்தப்படத்தைப் பார்க்கலாம் என்ற பலரின் பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு கர்ணனைப் பார்க்கலாம் என்ற ஒரு மனதான முடிவுக்கு வந்தோம். புதிய வண்ணங்கள் ஏறிய கர்ணன் திரைப்படம். 1964 - ல்  வெளிவந்த திரைப்படம். சிவாஜி கணேசன், சாவித்திரி, தேவிகா, என்.டி.ராமாராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 


மிகவும் முக்கியமான விடயம், முழுப்படமும், கர்ணன் என்ற முழு குணச்சித்திரமும் பார்ப்பனர்களுக்கு எதிராக, எந்தவிதத் தயக்கமுமின்றி சொல்லப்பட்டிருப்பது தான்! பார்ப்பனீய மனம் எத்தகைய தந்திரமான சூழ்ச்சியான அமைப்புகளைக் கொண்டு இயங்கும் என்பதைத் தெளிவாகவும், நேர்த்தியான திரைக்கதை அமைப்பாலும் சித்திரித்திருக்கின்றார், படத்தின் இயக்குநர், பி. ஆர். பந்துலு. சமீபத்தில் அந்த படம் மீண்டும் திரைக்கு ஏறி, நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது! இவ்வெற்றிக்கு நிறைய காரணங்களைப் படத்தில் காணமுடிகிறது.


கர்ணன் என்னும் கொடையாளன், என்பவன் இம்மண்ணின், மக்களின் குறியீடாக இருக்கிறான். செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் நன்றியுணர்வு, இல்லையெனாது கொடுத்தல், மான உணர்வு, துன்பம் தாங்குதல், மதிநுட்பம், வெளிப்படையான குணங்கள் என கர்ணன் உயர்ந்து கொண்டே போகிறான். சிவாஜி கணேசன் தன் அசாதாரண நடிப்பால் கர்ணன் எனும் ஒற்றை மனிதனுக்கு சற்றும் சளைக்காமல்  பேருருவம் கொடுக்கிறார்.


ஒரு தேரோட்டியின் மகனாக வளரும் கர்ணன், இயல்பில் சூரியனின் மகன். அவனுக்கு இயல்பாக அமைந்த தீரங்கள் எப்படி அவனிடமிருந்து பொய்வேடங்களாலும், சுயநலத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படுகின்றன என்பதும், தான் பிறந்த குலத்தைக் காரணம் காட்டித் தனக்கு மறுக்கப்பட்ட கலைகளையும் வீரங்களையும் அவன் வேட்கையுடன், சிரமங்களுடன் எப்படி அவன் கற்றுக் கொண்டான் என்பதும், அவையெல்லாம்  அவனுக்கு உபயோகப்படாமல் போகுமாறு பார்ப்பனீய உலகம் எப்படி அவனிடமிருந்து சூறையாடியதும் என்பதும் தான் கர்ணன் என்ற காவிய கதாபாத்திரம்.


சாதியின் துல்லியமான ஒடுக்குமுறை வெளிப்படையாகப் புலனாகிறது. கர்ணன் உயிருக்குப் போராடும் நிலையிலும் அவனுடய உயிரையும் தானதர்மங்களால் உண்டான களிப்பையும் கூட விட்டுவைக்காமல் அந்தணவேடம் ஒன்று வந்து வாங்கிச் செல்கிறது.


ஒவ்வொரு நிலையிலும் கர்ணனிடமிருந்து வஞ்சகத்தால் சத்தியத்தின் மேல் சத்தியங்கள் பெறப்பட்டு, அவன் உடைமைகள் எல்லாம் அபகரிக்கப்படுகின்றன. இந்த சூழ்ச்சிகளையும் வஞ்சகங்களையும் அறிந்திருந்தும் கர்ணன் தன் நல்ல குணங்களை இழக்காமல் இருப்பதும், தன் துணிவின் மீது நம்பிக்கை கொள்வதும் கர்ணனைத் தொடர்ந்து கொண்டிருக்கும்  நம்மை அவனுடன் இரண்டறப் பிணைக்கிறது.


பஞ்சபாண்டவர்களும் கெளரவர்களும் ஏன் கிருஷ்ணனும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி தம்மை மாற்றி மாற்றிப் பேசிச் சமாளிக்கும் போது, கர்ணன் தன் வெற்றுக் கைகளுடன் சந்தர்ப்பத்தின் கைதியாகி நிற்கிறான். போர்க்களத்தில் கையாளப்படும் வியூகங்கள் போல கர்ணன் என்னும் சூரியனின் மகன் மீது, தேரோட்டியின் வளர்ப்பு மகன் மீது, இயல்பிலேயே கொடையுள்ளம் கொண்டவன் மீது, சொன்ன சொல் தவறாதவன் மீது  எல்லா வியூகங்களும் கையாளப்படுவது எந்தச் சிரமமும் இல்லாமல் அற்புதமான வசனங்களால் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் திரைக்கதை அமைப்பு, பார்ப்பனீய அமைப்பைத் தெளிவுபடுத்துவதையே முழு நோக்கமாகக் கொண்டு அமைந்திருக்கிறது.


ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையும் பாடலும் இசையும் எழும்பி, 'கர்ணன்' எனும் மனிதக் குறியீட்டைப் புரிய வைக்க உதவுகின்றன. பாடல்களில் வரும் ஒவ்வொரு சொல்லின் ஆழத்திலும் சாதியை மறுக்கும் நுட்பம் பொதிந்திருக்கிறது. இத்தனைக்கும் வணிகத் தளத்தில் இயங்கி வசூலை அள்ளிய படம்!  சமயம் வாய்த்தால் மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்!


குட்டி ரேவதி