நம் குரல்

அம்பேத்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்பேத்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.





* ஜிஷாவின் வல்லுறவு கொலைக்குப் பின், எங்கெங்கும் பெரும் அரற்றலாய் இருக்கிறது. ஆங்காங்கே, நண்பர்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், "இப்பொழுது இந்தப் பெண்ணியவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?" என்று கேட்கின்றனர். ஒரு நண்பர் வேடிக்கையாக, 'ஓ, அவர்களா? பெண்ணியவாதிகளே பெண்ணியவாதிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், என்று பதில் இட்டிருந்தார்.

* 'ஜிஷா', தலித் என்பதால் பொதுச்சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே, இந்தியப் பெண்ணியவாதிகளும், ஊடகங்களும் கூட வேடிக்கை பார்ப்பதுடன் கடந்தும் செல்கின்றனர்.
* நிர்பயா விடயத்தில் ஒருங்கிணைந்தது, போல் இதில் பெண் சமூகம் ஒருங்கிணைய சாத்தியமில்லை. அதில் வன்முறையை நிகழ்த்தியவர்கள் ஒடுக்கப்பட்ட ஆண்கள் என்பதால் தண்டனையைப் பெற்றுத்தருவதில், ஒடுக்கப்பட்ட ஆண்கள் மீதான வெறுப்பைச் செயல்படுத்துவதில் பெண்கள் வெற்றி கொண்டார்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

* ஜிஷாவின் படுகொலையில் மட்டுமல்ல, சமீபத்திய சாதிஆணவப்படுகொலையாகட்டும், பள்ளி மாணவிகள் படுகொலையாகட்டும், எல்லா படுகொலைகளிலுமே வன்முறையை நிகழ்த்தும் விதத்தில், கரும்பை நுழைப்பது, முலைகளை அறுப்பது, குடலை உருவுவது என்று 'படுகொலை' ஒரு கேளிக்கையாவதை உணரமுடிகிறது. ஃபேஸ்புக்கில் நாம் எப்படி அவதூறுகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதில் சுவாரசியம் பெறுகிறோமோ அது போலவே.

* ஜிஷாவின் வன்கொலையில் எவ்வளவு காட்டுக்கத்தல் கத்தினாலும் நீதி என்பது ஒரு பிஸ்கெட் துண்டுக்குத் தான் சமானம். நிர்பயாவின் விடயத்தில் இல்லாத, பெரும் அமைதி நிலவும் இந்த நேரத்திலேனும் பெண்ணியவாதிகள் எல்லாம் பார்ப்பனீயமயமாகிவிட்டதை உண்மையான போராளிச்சமூகம் உணரவேண்டும்.
* பார்ப்பனீய பெண்ணியவாதிகள், காலங்காலமாக பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் 'பெர்சனல்' ஆதாயங்களைக் காரணமாக வைத்து, 'பிரித்துவிடுவது' ஒன்றே அவர்கள் ஆகச்செய்யும் சிறந்த வேலை, கலை. அப்படி பிரித்து வைத்திருந்தால் தான் இவர்களின் பார்ப்பன அடையாளங்களை, அதிகாரங்களை, அங்கீகாரங்களை இழக்காமல் இருக்கமுடியும். இது தான் அவர்கள் முன்வைக்கும் 'பெண்ணியம்'.

*பெண்கள் ஒருங்கிணைந்தால், பார்ப்பனீய பெண்ணியவாதிகள், தங்களின் சாதிய அங்கீகாரத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ( இவை தாண்டி, பார்ப்பனச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களை அப்படி உணராத, தம் அடையாளங்களை தொடர்ந்து மறுக்கும் பெண்கள் யாரேனும் உண்டா, இங்கே)

* அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின், அதாவது சமூகத்தின் சாதிய விழிப்புணர்வின் மறு தூண்டலுக்குப்பின், இந்தியாவின் எந்த மூலையிலுமே பெண்கள் இயக்கத்தைக் கட்டைமைக்க முடியவில்லை. இது ஆய்வுப்பூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது. எங்கெங்கு பெண்கள் இயக்கம் தோன்றினாலும், அங்கே சாதி அதிகாரப் பெண்கள் நுழைந்து சாதிமறுப்பு அமைப்புகளை 'ப்ளேட்' போட்டு கத்தரிக்கவே செய்திருக்கிறார்கள்.
* 'தலித்' என்றால், சாதிப்படிநிலைகளில் சேராது. ஒடுக்கப்பட்டவர்கள் என்றே பொருள். ஆனால், சமீபத்தில், பார்ப்பனீயச் சிந்தனைச் சாய்வால், மெல்ல, மெல்ல 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது.

* இந்த சாதிமயப்போக்கால், ஏற்கெனவே, 'தலித்' சமூகத்தின் மீதான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதி ஆதிக்க சமூகம், 'தலித் சாதிப்' பிரச்சனைகளை, வன்முறைகளை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவே தூண்டும்.
* 'சாதி ஒழிப்பு' நூலில், அம்பேத்கர் இரண்டு முக்கியமான விடயங்களை முன் வைக்கிறார். ஒன்று: அகமணமுறையிலிருந்து விடுபடுதல். இரண்டாவது: இந்த நாட்டின் நீதிமுறை என்பது பார்ப்பனீய நீதிமுறை என்பதை உணர்ந்து அதை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடருதல்.

* “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - என்று கதறுகிறார், ஜிஷாவின் தாய். இந்திய நீதிமுறை ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதியை ஒரு பொழுதும் வழங்கியதில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
* இப்பொழுது, 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது. சாதியத்தின் ஸ்பெஷல் தன்மை என்னவென்றால், நம் வீட்டில் வன்முறைகள் நிகழாத வரை, எல்லாமே நமக்கு வேடிக்கை என்ற குணாதிசயம் தான். யாரும் 'மூச்' விடமாட்டார்கள்.


குட்டி ரேவதி

இந்தியாவின் 66வது குடியரசு நாள்





இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 66 வருடங்களாகின்றன.
என்றாலும் நாம் அம்பேத்கரின் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நோக்கிக் கொஞ்சமும் நெருங்கவில்லை.


நாட்டுப்பற்று, ஒருமைப்பாட்டினால் உருவாவது. ஒருமைப்பாடு உருவாக, மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகள் அகலவேண்டும். ஏற்றத்தாழ்வுகள், மதம், சாதி, பால் என அதிகார வேறுபாடுகளைக் கட்டாயப்படுத்தும் அமைப்புகளிலிருந்து உருவாகின்றன.

ஏற்றத்தாழ்வுகள் அகல, விடுதலை + சமத்துவம் + சகோதரத்துவம் நிறைந்த உணர்வுகள் குடிமக்களிடையே வலுப்படவேண்டும்.


சென்றவருடம், இந்தியா முழுவதும் தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருக்க, மகாராஷ்ட்ராவில், 'ஜவ்கடே கால்சா' என்ற கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 'சஞ்சய் ஜாதவ்' என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். உடல்கள் பல துண்டங்களாக வெட்டப்பட்டு ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றுக்குள் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
"இச்சம்பவம் குறித்து புகார் வராததால் நாங்கள் விசாரணை நடத்தவில்லை" என்று அங்கிருந்த காவல்துறையினர் கூறினர். இதன் பின்னணியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியினரின் தொடர்பு இருப்பதாலேயே ஆளும் கட்சியும் காவல்துறையும் மெளனமாக இருந்தது.
இந்தியாவும், ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களும் கூட மெளனமாகத்தான் இருந்தோம்.


'"அடிமைகளுக்கும், ஆள்பவர்களுக்கும், சலுகை பெற்ற பிரிவினர்களுக்கும் இடையேயான வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேறு விதமாகச் சொன்னால் இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் கடைந்தெடுத்த சமூக விரோதிகளாக இருந்து வருகின்றனர்", என்ற அம்பேத்கரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
நாட்டின் குடியரசு, நாட்டுப்பற்று, அம்பேத்கரின் அரசியல் அமைப்பு, விடுதலை + சமத்துவம் + சகோதரத்துவம் இவற்றில் இருந்தெல்லாம் வெகுதூரத்தில் இருக்கிறோம்.
வெற்றுப்பெருமிதத்தை மிகையாக வெளிப்படுத்தி அதைக் குடியரசு தினமென்று கொண்டாடிக்கொள்கிறோம்.


குடியரசு என்றால் கொண்டாட்டம் மட்டுமே அன்று. நாட்டுப்பற்று கொண்டோர், விடுதலை + சமத்துவம் + சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படை நம்பிக்கைகளாகவும் நீதிகளாகவும் கொண்ட அரசியலமைப்பை உறுதிசெய்வது தான்.
கீழே காணும், இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாகப்பதிவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். எனக்கும் தான் இதில் விருப்பமில்லை. என்றாலும், இது தான் குடியரசுக்கும் வாழ்நிலைக்கும் இடையே உள்ள தூரம்.
தூரம் அறியாமல் எப்படி கொண்டாட்டத்திற்குப் போய்ச் சேருவது?


குட்டி ரேவதி

அம்பேத்கரும் காந்தியும் அருந்ததிராயும்


அம்பேத்கரும் காந்தியும் எதிரெதிராகச் செயல்பட்டார்கள் என்பது நாடு அறிந்தது.
ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான தேவைகளையும் திட்டங்களையும் அம்பேத்கர் வகுத்தும் செயல்பட்டும் வந்தார்.
காந்தியை மகாத்மா, தேசப்பிதா என்று சொல்லுமிடத்து மட்டுமே இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறார். உண்மையில், அதற்கான எந்தத்தகுதியும் காந்திக்கு இல்லை.
குறிப்பாக, இந்துக்கள் அல்லாத தாழ்த்தப்பட்டவர்கள் குறித்த, பாரபட்சமில்லாத புரிதலை காந்தியால் இறுதிவரை ஏற்கவே முடியவில்லை. அவர்களையும் இந்துமதக் கட்டத்தில் கொண்டுவந்து வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்துவதற்கே போராடினார்.
அம்பேத்கரையும் காந்தியையும் ஒரே கோட்டில் வைத்துப் புரிந்துகொள்வது கூட மிகவும் அபத்தமானது.
இந்திய அறிவுசீவிகள், அல்லது இந்தியா உடைந்துவிடப்போகிறது என்ற போலியான பதட்டத்தைத் தாமே உருவாக்கி அதன் வெப்பத்தில் குளிர்காய்பவர்கள் முதலாயும் இறுதிவரையிலும் தொடர்ந்து செய்வது, அம்பேத்கரையும் காந்தியையும் ஒரே கோட்டில் வைத்து விவாதிப்பதும், அடுத்தடுத்து வைத்துப் பொருள் விளக்கம் கொடுப்பதும்.
அருந்ததிராய் 'சாதி ஒழிப்பு' நூலில் முன்வைத்திருந்த எழுத்திலும், இத்தகைய பதட்டத்தை உணரமுடிந்தது. காந்தியைச் சொல்லாது அம்பேத்கரை விளக்கினால், தான் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோம், தீண்டத்தகாத கருத்தியல்வாதியாகிவிடுவோம் என்ற திருகுமனநிலை அருந்ததிராய்க்கும் இருந்தது.
காந்தியின் திருகுமனநிலைகள், உண்மையில் இந்துத்துவ மதவெறியிலிருந்து உருவாகுபவை. தொடர்ந்து இதற்கு ஆதாரமான விடயங்களை தரவுகளுடன் முன் வைப்பது என்று இருக்கிறேன்.
உண்மையில், இந்தியாவை உடைக்கமுடியாது. இந்தியாவை உடைப்பது என்றால், அதைச் செய்வது இந்துத்துவ சக்திகளாக இருக்கும் அல்லது, செயலிலும் சொல்லிலும் சிந்தனையிலும் இந்துமத வாதத்தை முன்வைப்பவர்களாக இருக்கும்.

குட்டி ரேவதி