நம் குரல்

கணினி என்பது முகநூல் திறக்க மட்டுமே அன்று!




கணினி இன்றைய அன்றாட வாழ்வின் முக்கியமான அங்கமாகிவிட்டாலும் அதைப்பயன்படுத்தும் விடயத்தில் நாம் இன்னும் முனைப்போடும், சமூக அவசியங்களை உணர்ந்தும் இயங்கவேண்டும்.

புத்தகங்கள் காகிதத்தில் அச்சிடப்படுவதை அறவே நிறுத்தி, இணையம் வழியாகப் பரவலாக்குவது மிகவும் அவசியமாகும். மின் நூல்கள், இன்றைய சுற்றுச்சூழல் அரசியலுக்கும் நியாயம் சேர்க்கும்.

இன்னும் சொல்லப்போனால், இயக்கங்கள், போராட்டங்கள், களப்பணிகளுக்கும் கூட களப்பணியாளர்களும் போராளிகளும் இதை அதிகமாகப் பயன்படுத்த அறிந்திருக்கவேண்டும்.

அன்றாடப் பயன்பாட்டில் இன்னும் அதிகமாக, கணினியின் பயன்பாடுகள் அறிந்து அதை ஈடுபடுத்தும்போது, விஞ்ஞான ரீதியான நம் புரிதல் பலப்படும்.

குறுகிய மனச்சண்டைகள் எல்லாமே ஒரு விடயத்தின் பரவலான எல்லைகள் மற்றும் ஒரு துறை சார்ந்த விரிந்த அறிவும் இல்லாமையால் உண்டாவதே.

முகநூல் மட்டுமன்றி, புகைப்படங்கள் எடுத்தல், அவற்றை ஆவணப்படுத்தி வைத்தல், இணையத்தில் அவற்றை ஏற்றி அதன் அவசியம் குறித்துப் பதிவு செய்தல் போன்றவை நம் வரலாற்று, அரசியல் விடயங்களுடன் இன்றைய நம் செயல்பாட்டை இணைக்க மிகவும் உதவும்.

கணினி என்பது இனியும் ஓர் அந்நிய உபகரணம் இல்லை. நவீனக்கருவிகளை சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் பயன்படுத்துவதன் வழி, நம் மொழி வழி, சிந்தனை வழி உரையாடல்களை உலகளாவிய உரையாடல்களாக விரிக்க முடியும்.

அழிந்து கொண்டிருக்கும் அல்லது நாம் மறந்து கொண்டிருக்கும் நம் மொழி தொடர்பான துறைகளை இதன் வழியாக புதுப்பிக்கமுடியும்.

கணினியின் பயன்பாட்டு சாத்தியங்கள், தெரியாமலேயே அதை ஒரு மலிவான கருவியாகப் பயன்படுத்துகிறோமோ என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன். 

பலமுனை அறிவுக்கும், செயல்பாட்டிற்கும் இதைப்பயன்படுத்துதலே நம் பழமைவாதச் சிந்தனைகளை உதிர்க்க உதவும்.

உடல் உழைப்பை மட்டுமே சிறந்த உழைப்பாக எண்ணுதல் நம்மைப் பின்னடையச் செய்யும்.

காலங்காலமாக, உண்மைகளும் நியாயங்களும் சென்று சேராமல் இருந்த சமூகம் எழுந்துவர, கைப்பற்றி வெளியுலகிற்கு வர கணினியே நல்லதொரு வழியாக இருக்கும்!





குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: