நம் குரல்

அரசு பேருந்துப்பயணம்!

அரசுப்பேருந்தில் பயணிக்கும்பொழுது கிடைக்கும் அனுபவம் வேறெதிலும் கிடைப்பதில்லை. ஒரு நீளமான, யூக்கிக்கமுடியாத திரைப்படம் தான் அது.

விட்டேத்தியான ஒரு பயணமும் கூட. எப்பொழுது கிளம்பும் என்று தெரியாது. சொன்ன நேரத்திற்குச் சென்று சேரும் என்றும் சொல்லமுடியாது.

மிகவும் நிதானமான, நீளமான, முடிவற்ற பயணம் போல் இருக்கும். மற்றெல்லா வாகனங்களும் முந்திச்செல்ல அனுமதித்து தன்பாட்டுக்கு ஓடும்.

நாமும் கொஞ்சம் கொஞ்சமாக, பயண எல்லை குறித்தப் பதட்டம் இழந்து, ஒரு நிதானத்திற்கு வந்திருப்போம்.

பயணக்கட்டணமும் சொற்பமே.

இரவுப்பாடல்களின் காட்டுக்கத்தல் ஸ்பீக்கர் இல்லை.

அருகில் இருப்பவரும் பயணத்தின் ஏதோ ஒரு கணத்தில் நமக்கு அன்னியோன்யமாகிவிடுவார்.

நிலவின் ஒளியில் காயும் வானத்தை உங்கள் கண்களும் முயற்சியும் எட்டும் வரை பார்க்கலாம். அத்தகைய இரவு வானம் மனதிற்கு அளிக்கும் விடுதலை உணர்வு இவ்வளவு என்று சொல்லிமாளாது.

தூங்கலாம், தூங்காமல் கற்பனை செய்யலாம், கற்பனையின் கயிற்றை எங்கேனும் அறுத்தெறிந்துவிட்டு யதார்த்தத்திற்கும் இறங்கலாம்.

மெதுவான, மிக மெதுவான பயணங்கள் தரும் இளைப்பாறுதலும், அவை தரும் அனுபவங்களும் எல்லோருக்கும் தேவைப்படும் காலம் இது.




குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: