அந்தக் குரலை என்தொண்டைக்குள் அடை காக்கும் 
வழியறியா வேதனையில் கொழுந்து விட்டெரியும் 
மெய்மையின் நெருப்பில் வெந்தழிகிறேன்
மடிந்த நீளமான இதழ்களுக்கிடையே 
ஒரு புகையைப் போல கமழ்ந்திடும் அக்குரல் 
பரவும் திசையெலாம் தோகை போல 
ஒயிலாய் நடனமாகி நகரும்
முழுநிலவைக் கவ்வி இழுத்து வருகின்றதோ 
துயர் கனிந்த ஆரஞ்சுப் பழத்தின் சுளைகளை உரித்து 
தின்னச் சொல்லிக் கொடுக்கிறதோ
உதடுகள் சுழித்துச் சுழித்து அவன் பாடுகையில் 
இழக்க விரும்பா உரிமைகளின் வேர்களிலிருந்து 
எழும்பி வரும் சிட்டுக்குருவிகள் எதிர்வெயிலில் மின்னும்
பாடலற்ற இதயப் பாலையின் தீய்ந்த சூரியனைச் 
சுமந்தலையச் சம்மதியான் 
ஒருபொழுதும் என்கின்றனவோ வேர்க்குருவிகள்
குட்டி ரேவதி
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக