சமீபத்தில் The Snow white & the huntsman என்ற படம் பார்த்தேன். இது அடிப்படையில் ஒரு ஜெர்மானிய தேவதைக்கதையை அடிப்படையாக வைத்து எடுத்தது. இக்கதையை, பல இயக்குநர்கள், பல்வேறு வடிவில் வெவ்வேறு காலகட்டங்களில் படமாக்கியுள்ளனர்.
வீட்டில், பாட்டி பேரக்குழந்தைகளுக்குச் சொல்லும் ஒரு கதைச்சரடைத் தளமாக வைத்து அதன் அடுக்கடுக்கான கதைகளை வைத்து ஒரு பிரமாண்டமான படமாக ஆக்கியிருக்கிறார்கள்.
Frozen படமும் இந்த ஸ்னோ ஒயிட் கதையினை ஒட்டியே எடுக்கப்பட்ட படம் என்பதை இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும். 'உண்மையான அன்பு' எத்தகைய வலிமை வாய்ந்தது என்பதை நோக்கியே இரு கதைகளும் அலையும்.
The Snow white & the huntsman படத்தில் வியக்கத்தக்க அளவில் அனிமேஷன் மற்றும் கற்பனை விடயங்களை நுட்பமான அழகியல் வெளிப்பாட்டுடன் எடுத்திருப்பார்கள். Frozen படத்தில் அக்கா தங்கைக்கு இடையே இருக்கும் உண்மையான அன்பு, உயிர் காக்கும் வல்லமை உடையது என்பதைக் கூறியிருப்பார்கள். பொதுவாகவே, 'தேவதைக் கதைகள்' சொல்லும் நீதி, வாழ்வின் அளவை விடப் பெரியதாக இருக்கும். அப்படித்தான் இரண்டு படங்களிலுமே.
இந்த இரு படங்களைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பிற்கிடையே, தமிழில் 'கொலைக்களங்களின் வாக்குமூலம்' என்ற நூலையும் வாசிக்கநேர்ந்தது. நந்தன், காத்தவராயன், மதுரைவீரன், முத்துப்பட்டன் ஆகிய பஞ்சம வரலாறுகள் குறித்து களஆய்வு செய்யப்பட்ட நூல். புனைவைப் போன்றே ருசிகரமாக இருக்கிறது. அருணன் எழுதியிருக்கிறார்.
ஒவ்வொரு வீரனின் கதைப்பின்னணியும், அதில் நிறைந்திருக்கும் சாதியத்திற்கு எதிரான, தீண்டாமைக்கு எதிரான உண்மையான போராட்டங்களும் கதைப்படங்களுக்கு சாத்தியம் அமைக்கக் கூடியன. குறிப்பாக, முத்துப்பட்டன் கதையில், 'பொம்மக்கா, திம்மக்கா' என்ற சக்கிலியச்சகோதரிகளைப் பார்ப்பனன் மணந்து கொள்ள மேற்கொள்ளும் போராட்டமும், காதலியரின் தந்தை அவனுக்கு விடுக்கும் சவால்களும் இன்றைய சாதியச்சிந்தனை வரை எல்லா படைப்பு சார்ந்த முன்முடிவுகளையும் கேள்விக்கு உள்ளாக்குவன.
என் நோக்கம் இது தான். ஏன் இங்கு இருக்கும் இம்மாதிரியான துடிதெய்வங்கள் மற்றும் வீரர்களின் கதைகள் படமாக்கப்படாமல் இருக்கின்றன. காலந்தோறும் வடிவம் கொடுக்கப்படாமல் முடக்கப்படுகின்றன. கதையில் சுவாரசியத்திற்கும், வீரத்திற்கும், திருப்புமுனைகளுக்கும் பஞ்சமில்லை. அதேசமுயம், வணிக ரீதியான போக்கையும் கதைகள் கொண்டிருக்கின்றன. ஆனால், நம்மவர்கள் கதை தேடி அலைகளையில் வெளிப்படும் வறட்சி விந்தையாக இருக்கிறது.
உண்மையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை புராணக்கதைகள் என்பதற்காக, அதேமாதிரி புராணத்தன்மையுடன் எடுக்கவேண்டியதில்லை. இராமாயணம், மகாபாரதம் போன்ற அடிமைமுறை, மனித சூழ்ச்சிகள் நிறைந்த கதைகளையே மீண்டும் மீண்டும் சொல்லி வளர்ப்பதற்குப் பதிலாக ஏன், இம்மாதிரியான நேர்மையான, பிரமாண்டம் உணர்த்தும் கதைகளை நம்மவர்கள் நம் குழந்தைகளுக்கு, நம் மக்களுக்குப் படமாக்குவதில்லை. The Snow white & the huntsman படத்தை அயல்நாட்டவர்கள் அத்தனை புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி நவீன வடிவம் கொடுத்து, இன்றைய கதையாக்கி விடுகிறார்கள்.
நம் படைப்பாளிகள் மனதில் மறைந்திருக்கும் அடிமை முறை, இதுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. சுவாரசியம் தேடும் நோக்கில் செயற்கையாகக் கதைகளைத் தயாரிக்கிறோம். அவை மனதில் ஒட்டாமல், படைப்புகளையும் மக்களையும் பிரித்து வைத்திருக்கின்றன.
நமக்கு யாரையேனும் அடிமைப்படுத்தி வாழவேண்டும். அல்லது, யாருக்கேனும் அடிமையாகி வாழவேண்டும். இந்தவெளிகளுக்குள்ளேயே நம் கற்பனைகளைக் குறுக்கிக் கொள்ள விரும்புகிறோம். நம்மிடம் மண்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களின், கதைக்களங்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை.
குட்டி ரேவதி
"யரலவழள"திரைக்கட்டுரை தொகுப்பிற்காக
.jpg)