நம் குரல்

சாதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நண்பர்களே, நாம் யாராகவும் இருந்துவிட்டுப்போவோம்.







ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ, பணக்காரனாகவோ, ஏழையாகவோ, எழுத்தாளனாகவோ, எழுத்தாளரை வெறுப்பவராகவோ, அரசியல்வாதியாகவோ, அரசியலை எள்ளல்செய்பவராகவோ, நடிகராகவோ அல்லது நடிக்கவராதவராகவோ, கலைஞராகவோ கலைபால் எந்த மரியாதையும் அற்றவராக எவராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போவோம்.

இந்தக்காட்சியும் அவலமும் இனியும் தொடராமல் இருக்க என்னசெய்யவேண்டுமோ அதை நோக்கிச் செயல்படுவோம். 

ஏனெனில், நாம் ஒட்டுமொத்தமாக எல்லோரும் வன்முறையிலிருந்தும் ஒடுக்குமுறையிலும் இருந்து விடுபடும் வரை, தனிமனிதர் எவரும் விடுதலையாக வாழ்வது என்பது அர்த்தம் ஆகவே ஆகாது! அது சாத்தியமும் இல்லை! 

ஒட்டுமொத்த மனித இனம், சாதி வெறியிலிருந்து விடுதலை பெறாதவரை, தனிமனித விடுதலை என்பதும், தனிமனித வாழ்வு என்பதும் போலியானது, மாயையானது!



குட்டி ரேவதி

இயக்குநர் அமீர் அவர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்!


இந்த நிகழ்வை யாரும்தர்மபுரிசம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டாம்.என்று கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து முற்போக்குவாதிகள், இலக்கியவாதிகள், சமூக நலன் விரும்பிகள் யாரும் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
- என்று இயக்குநர் அமீர் சொல்லியிருக்கிறாராம்.



இயக்குநர் அமீர் அவர்களுக்கு,

வணக்கங்கள்.

ஏற்கெனவே இலக்கியவாதிகள், முற்போக்குவாதிகள் எல்லோரும் சமூகம் குறித்த எந்த சுதந்திரமான கருத்தையும் சொல்லமுடியாமல் வாயடைத்துப் போயிருக்கும் நிலையில், உங்களின் இந்தக் கருத்து உண்மையிலேயே சமீபத்திய 'கருப்பு நகைச்சுவை' என்றே சொல்லவேண்டும்.

'முற்போக்குவாதிகள், இலக்கியவாதிகள், சமூக நலன் விரும்பிகள் யாரும் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று தடையும் விதிக்கிறீர்கள். ஒரு படைப்பாளி, சமூகத்தை நோக்கி இப்படி ஒரு வேண்டுகோளை வைப்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் முற்போக்காகச் சிந்திக்காதே என்று சொல்வது போலவும், பிற்போக்காகச் சிந்தியுங்கள் என்று உந்துவது போலவும் உள்ளது.

அதிலும் ஒரு படைப்பாளியாக, கலைஞனாக மேடையிலும், பொது இடத்திலும் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு பெற்ற ஓர் இயக்குநர் இவ்வாறு பேசியிருப்பது வேதனையானது.

சமூகத்தின் சாதி, காதல், பெண், ஆண் என்ற எது குறித்தும் எந்தப் பரவலான முற்போக்குத் தன்மையும், சிந்தனையும் இல்லாமல் சில திரைத்துறையினர்  நடந்து கொள்வது நிகழும் சம்பவத்தையும் தொடர்புடையவர்களையும் கேலியாக நோக்கவைக்கிறது. ஏனெனில், பொதுச்சமூகம் எல்லாவகையிலும் முற்போக்காகச் சிந்திக்கக்கூடியதாகவும், இயன்ற அளவு விளைவுகளைத் தவிர்க்கும் வண்ணம் செயல்படக்கூடியதாகவும் உள்ளது.

எங்கெங்கும் சாதிய வன்கொடுமைகள் பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், தயை கூர்ந்து நீங்கள் இம்மாதிரியாக, சாதியம் சம்பந்தமான மேம்போக்கான கருத்துகளைப் பேச வேண்டாம் என்று  உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். உங்களையெல்லாம் முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு இது போன்ற பேச்சுகளால் தொடர்ந்து பலத்த ஏமாற்றங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். இது சமூகத்திற்கும் நம் கலைவெளிப்பாடுகளுக்கும் நல்லதன்று.

சொந்த விஷயங்களுக்கு இவ்வளவு பதற்றப்படும் உங்களிடம், சமூகப் பொது நிகழ்வுகளைப் பார்க்கும் விதத்திற்கும் நீங்கள் அவற்றை முன் வைக்கும் விதத்திற்கும் இடையே பெருத்த முரண்பாடுகள் இருக்கின்றன என்று நாம் கொள்ளலாமா? இல்லை, நீங்கள் இயக்கிய சினிமாவை வெறுமனே வியாபாரம் தான் என்று கொள்ளலாமா? அல்லது, இந்தக் காதல் பஞ்சாயத்தை ஒரு வியாபாரம் என்று கொள்ளலாமா?

நம்மால் சினிமா, சமூகம் இரண்டையும் தொடர்புப்படுத்த முடியாத பட்சத்தில், இம்மாதிரியான முரணான கருத்துகளையேனும் சொல்லாமல் இருந்துவிட்டுப் போகலாம். ஏனெனில், இம்மாதிரியான தருணங்கள் எல்லா படைப்பாளிகளுக்கும் நிகழ்வதுண்டு.

''இந்த நிகழ்வை யாரும்தர்மபுரிசம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டாம்'' - இது  அல்லாத ஒன்று இந்தச் சமூகத்தில்  இயங்கக்கூடும் என்ற உங்கள் நம்பிக்கையும், வேண்டுகோளும் கூட எங்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது. ஏற்கெனவே நம்மால் ஏதும் செய்ய இயலாத அளவிற்கு சாதிய வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 'தர்மபுரி' சம்பவம் நம் காலக்கட்டத்தின் அழிக்க முடியாத அவலம். இது குறித்த குற்றவுணர்வு, அல்லது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவது  தான் இந்நேரத்தில் ஒரு கலைஞனின் நேர்மையாக இருக்கும்.

ஓர் ஆணைக் காமுகன் என்று அடையாளம் காட்டி ஒடுக்குவற்கும், ஒரு பெண்ணை அவனைக்காதலிக்காதே என்று தடைபோடுவதற்கும் சாதியச் சமூகம் தான் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கு பா.ம.க ராமதாசைப் போலவே நாமும் வெளிப்படையாக சாதி அடையாளங்கள் கூறிப் பேசி, வன்முறையைச் செயல்படுத்திவிட்டுப் போகலாம் இல்லையா?

உண்மையில், காதலிக்கும் ஒரு பெண்ணாக 'தாமினி' இந்தச்சம்பவத்தால் அடையும் மன உளைச்சலையும், அவர் மீது நிகழ்த்தப்படும் மறைமுகமான வன்முறைகளையும் நாம் யாருமே பொருட்படுத்தவில்லை. கவனத்திலும் கருத்திலும் எடுத்துக் கொள்ளவில்லை. சரியான முற்போக்குப் பெண்ணிய இயக்கங்கள் இருக்கும் சமூகமாக இருப்பின் இந்தப் பிரச்சனை இவ்வளவு தூரம் நீண்டிருக்காது என்பது என் நம்பிக்கை. 'திவ்யா - இளவரசன்' சம்பவத்திலும் அப்படியே!

நீங்கள் வேண்டிக்கேட்டுக்கொள்ளும் அளவிற்கு எல்லாம், முற்போக்கு இலக்கியவாதிகள் யாரும் எப்பொழுதும் இம்மாதிரியான நிகழ்விற்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லவே மாட்டார்கள். அதற்கு நான் உத்திரவாதமளிக்கிறேன். இதற்கு முன்பும் எல்லா சாதிய வன்முறைகளின் போதும் எப்படி அமைதி காத்தார்களோ அது போலவே தான் இனியும் இருக்கப்போகிறார்கள்.  அல்லது, சாதிய நிலைப்பாட்டைத் தான் தம் கருத்துகளாக உதிர்ப்பார்கள். நீங்கள் அவர்கள் கருத்து குறித்தெல்லாம் பதற்றப்படவேண்டாம் என்று, ஒரு தோழராக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி,

குட்டி ரேவதி





உயர் ஜாதிக்காரி ஒருத்தி நகத்தோடு என் பறை நகம் மோதி..!






பிரமிளின் 'கலப்பு' எனும் கவிதை


1. கண்கள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என் பறை நகம் மோதி
மனம் அதிர்ந்தது.

கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்

பிறந்தது ஒரு
புதுமின்னல்

ஜாதியின் 
கோடை மேவிப் பொழிந்தது
கருவூர்ப்புயல்.

(1972)


2. புகைகள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என் பறை நகம் மோதி
ஊர் அதிர்ந்தது.

ஐயாயிர வருஷத்து
இரவு சிவந்து 
எரிந்தது என் சேரி -

புகைகள் கலந்து
இருண்டது இன்றென்
உதய நெருப்பு.

(1980)


பிரமிளின் இக்கவிதை சில நாட்களாக மனதில் உருண்டு கொண்டே இருக்கிறது. கவிதையின் முற்பகுதி 1972 -ல் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டாவது பகுதி, 1980 - ல் எழுதப்பட்டிருக்கிறது. 

சாதியின் கொடூரத்தையும் அதன் மீதான தன் எதிர்ப்புணர்வையும் கவித்துவப் பிம்பங்களாக்கும் அவருடைய முயற்சி எழுபதுகளிலேயே நடந்திருக்கிறது.

இக்கவிதை, 'இளவரசன்' வன்படுகொலைக்கு எதிரான எழுச்சியைக் கொண்டுள்ளது. சற்றும் நவீனத்தன்மை குறையாமலும், தற்காலப் பொருத்தப்பாடு கொண்டும் இருக்கிறது.

தொடர்ந்த பிரமிளுடைய கவிதைப் பதிவுகளை வாசித்தவர்களுக்குத் தெரியும்,  இலக்கியத்தளத்தில் எவ்வளவு தீவிரமாக சாதியப்பயிற்சிகள் இருந்திருக்கின்றன என்றும், அதை அவர் எவ்வாறு தொடர்ந்து எதிர்த்திருக்கிறார் என்றும்.

'ஜாதியின் கோடை மேவிப் பொழிந்தது கருவூர்ப்புயல்', 'ஐயாயிர வருஷத்து இரவு சிவந்து எரிந்தது என் சேரி' என்ற வரிகள் நம் சிந்தனைத்தளத்தில் தொடர்ந்து செயல்படக்கூடிய இயங்கியல் தன்மை கொண்டவை.

இலக்கிய வெளியில் இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் தாம் இருக்கின்றன. ஒன்று, சனாதனச்சிந்தனையை வலியுறுத்தி இலக்கியம் என்று அறைகூவல் விடுப்பது. இரண்டு, அதற்கு முற்றிலுமான எதிர்த்திசையில், பிரமிளின் சாதி எதிர்ப்புச் சிந்தனையை ஒட்டி இயங்குவது. 

எவ்வளவு தான் நட்டமும் இழப்பும் என்றாலும் வெகுசிலரே இரண்டாமவதைத் தேர்ந்தெடுக்கும் துணிவைப் பெற்றிருக்கின்றனர். கருத்தியலை, இலக்கியமாக்கும் படைப்பாற்றல் கொண்டிருக்கின்றனர். உதாரணங்கள் வாசித்துத் தெளிந்து கொள்ளக்கூடியவையே.




குட்டி ரேவதி