நம் குரல்

இலக்கியச் சிற்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியச் சிற்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புறனடை - சீரிய இலக்கிய இதழ்





புறனடை

மேலும் ஒரு இதழ் வருகிறது
என்ன தேவைகள் குறித்து,
நேற்றும் இது வந்ததா,
எந்த இடைவெளிகள் நிரப்ப?
எதன் நகல், நகலின் நகலின்..
அதன் இதன் எதன் சாயல்
வெறும் பெயர் மாற்றமா ?
யாருடைய சொல்லாக அது இருக்கும்.
காலத்தின் மீது என்ன அசைவுகள் கருதி ?
எந்தக் குழு ? என்ன நிலைப்பாடு ?
சாயமிழந்த ஒரு காலத்தின் உற்பத்தி விளைவா
சந்தைச் சூழலின் ஒரு வெற்றுப் பக்கமா
அதன் உள்ளீடு எதனால் நிரம்புகிறது ?
ஒரு சிறு கல்லெறிதலா, விலகலா, ஊடறுப்பா, உப பிரதியா
பிரபஞ்ச இயக்கத்தில் மெல்லிய சலனங்கள் பரவவிடும்                                                          
ஒரு பட்டாம்பூச்சி விளைவா .
வரலாற்றின் இடைவெளிகளில்                                                                                              
எப்போதும் நிரம்பியிருக்கும் மௌனமா..



ஆசிரியர் குழு: பிரவீண், ராஜ், ரவிச்சந்திரன், அருள், ஆர். அபிலாஷ், செல்வம், தேவா

தொடர்பு எண்: 9710014218 /9884772864
மின்னஞ்சல்: puranadai@gmail.com
விலை: ரூ.15/-









361 டிகிரி இலக்கியச்சிற்றிதழ் வெளியீட்டு விழா





கணையாழி, கல்குதிரை போன்ற இதழ்களின் புத்துருவாக்கத்தைத் தொடர்ந்து, 361 டிகிரி இதழ் உருவாக்கம் பெற்றிருக்கிறது. இவ்விதழின்  வெளியீட்டு விழா டிஸ்கவரி பேலஸ் புத்தகக்கடையில், இன்று மாலை நடைபெற்றது. இதழை, நரனும் நிலா ரசிகனும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். உருவாக்கத்திற்கும், வடிவமைப்பிற்கும் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக, கவிதைகளை நெருக்கித்தள்ளிப்போட்டு பக்கங்களை நிரப்பாமல் கவிதைகளுக்கு இடையே சுவாசிப்பதற்கும் இடைவெளிவிட்டிருக்கிறார்கள். நிறைய கவிதை ஆக்கங்கள் இடம்பெற்றிருப்பது இதழின் சிறப்பு. நேர்த்தியும் அழகும் மிக்கதொரு இதழாக வெளிவந்திருக்கிறது. அட்டைப்படங்களை ரோஹிணி மணி வரைந்திருக்கிறார். பார்வையை இழுக்கும் திரட்சியான கரித்துண்டால் வரைந்த ஓவியங்களாய் இருக்கின்றன. அவருடன் சில நிமிடங்கள் உரையாடுவதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. அது அவர் ஓவியங்களின் பின்னிருக்கும் அவரது சிந்தனைகளைத் தெளிவுபடுத்துவதாகவும் இருந்தது.



வெளியீட்டிற்குப் பின்பு கட்டுரைகளாகவும் உரைகளாகவும் கருத்துகள் வழங்கப்பட்டன. உரைகள் பெரும்பாலும் சிற்றிதழ்கள் பற்றியும் பெண் / ஆண் படைப்பாளிகளின் கருப்பொருள் பேதம் பற்றியும் இருந்தன. கவிதா முரளிதரன் தனது கருத்துகளை நிதானமானதொரு தொனியில் எழுதி வந்து வழங்கினார்.  அஜயன் பாலா, நிலவும் அரசியல் நெருக்கடிகளை இலக்கியவாதிகளின் படைப்புகளுடன் தொடர்புபடுத்திப் பேசினார். மற்றும் அய்யப்ப மாதவன்(இதழ் படைப்புகள் குறித்த விமர்சனம்), நேசமித்ரன்(இதழ் குறித்த திறனாய்வு), லக்ஷ்மி சரவணக்குமார் (சிற்றிதழ் பிடிவாதம் மீதான விமர்சனம்) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  







விழாவில் வலைப்பதிவர்களே பெரும்பாலும் கலந்து கொண்டது, சமூக வலைத் தொடர்புவடிவத்தின் தீவிரத்தை உணரத்தியது. இன்றும், சிற்றிதழுக்கான தேவை இருப்பதும், சிற்றிதழ் இயக்கம் இல்லாமல் போகையில் எழுத வருபவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கு வெளி இன்றி தனித்து விடப்படுவதும் குறித்து விழாவின் தொடக்கத்தில் நரன் உரையாற்றியதையும், மேற்குறிப்பிட்ட விஷயத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ளமுடிந்தது.  நிறைய படைப்பாளிகளின் ஆக்கங்களுடன் வருவது தான் இதழின் நோக்கம் என்பதற்கு நரன் அழுத்தம் கொடுத்தார். ”பெண் கவிஞர்” என்ற அடையாள வரம்புகள் அழிந்திருப்பதை இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுகையில் உணர்ந்தேன்.



முழுமையும் இச்சீரிய இதழ்கள், உருவாக்குபவர்களின் கருத்தாக்க வடிவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆக்கங்களுடனேயே உருவெடுக்கும். தொடர்ந்து வெளிவருகையில் அத்தகைய கருத்தாக்கத்தின் திசையை நோக்கியே பயணிக்கும். என்றாலும், 361 டிகிரி போன்ற இதழ்கள், தற்கால அரசியல் வெளியின் நுண்ணிய இடைவெளிகளையும் பேசும் இலக்கிய படைப்புகளுடன் வரவேண்டும் என்பது என் விருப்பம். இன்னும் தற்காலக்கவிதைகள், கவிதையியல் குறித்த தொடர் விவாதங்களுக்கான பக்கங்களையும் திறந்து வைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.  இவ்விதழுக்கு எவரும் படைப்புகளை அனுப்பிவைக்கலாம் என்று 361 டிகிரி இலக்கியச் சிற்றிதழ் குழு கூறுகிறது. தொடர்புக்கு: 361degreelittlemagazine@gmail.com





விழாவின் புகைப்படங்களுக்கு: https://picasaweb.google.com/onthemove31/361Release?authkey=Gv1sRgCOeGvbf6irPdaw#





குட்டி ரேவதி