நம் குரல்

மாற்று சினிமா





(சினிமாவும் சினிமா என்பதும்)

மாற்று சினிமா என்றால் குத்துப்பாட்டு, நடனம் இல்லாத படம் என்ற இலக்கணம் வைத்திருக்கிறோம். அல்லது, படம் மெதுவாக நகரவேண்டும். அல்லது, புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் யாரும் மையப்பாத்திரங்களாக இருக்கக்கூடாது என்ற இது போன்ற தாறுமாறான இலக்கணங்களைக் கட்டமைத்துக்கொண்டு படத்தைப் பற்றிவிமர்சிக்கிறோம்.

சமீபத்தில், ஓர் எழுத்தாளர், ஜான் ஆபிரஹாமின், 'அக்ரஹாரத்தில் கழுதை' படத்தைப் பார்த்துவிட்டு 'இதையெல்லாம் படம் என்று சொல்கிறார்கள்?' என்று வேதனைப்பட்டார். உண்மையில், இது 'புரியும் கவிதை எழுதுங்கள்! படித்துப்பாராட்டுகிறோம்!' என்று கூறும் மனிதவகை தான் என்று நினைக்கிறேன். அல்லது தன் அறியாமையை மறைக்க முயலும் மனித இனம்.

நம் தட்டுக்கு எளிதாக, சூடாக வந்துவிடும் ஃபாஸ் புட் வகை உணவுகளை மட்டுமே உணவு என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலிருந்து வருவது. 'அக்ரஹாரத்தில் கழுதை' படத்தின் கதையும், படிமங்களும் இன்றும் இந்தியாவின் எல்லா விதமான சமூகமனநிலையையும் உள்வாங்கியவை. அத்தகைய ஒரு கதையையோ, கதாபாத்திரங்களையோ இயக்கும் துணிச்சல், நான் அறிந்து நாம் எல்லோரும் புகழும், சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் மற்றும் அடூருக்குக் கூட இருந்தது கிடையாது.

நான் அறிந்து, வெள்ளித்திரையில், முதன் முறையாக இந்திய சாதிமுறையை அங்கதம் செய்த படம், அந்தப்படம் என்று சொல்லவேண்டும். அதுவும், ஒரு பார்ப்பனரைக்கூட மனிதராக அணுகாத சாதிமுறை கொண்டது, இந்துமதம் எனும் அளவிற்கு இந்து மதத்தைத் தோலுரித்து இருப்பார். பார்ப்பதற்கு சரியான ஒரு 'பிரிண்ட்' இருப்பின் இந்த விடயத்தை இன்னும் நேரடியாக நாம் உணரக்கூடும் என்று நினைக்கிறேன்.

இப்படி ஒவ்வொரு படத்திற்கும், 'கோனார் நோட்ஸ்' போட்டு அதன் பின்னணியை விரிவாகச் சொன்னால் ஒருவேளை, நம் நண்பர்கள் படத்தை வியப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு சோம்பேறித்தனத்தின் மீதும் வாழ்வின் கொண்டாட்டங்கள் மீதும் நமக்கு அதிகப்படியான நம்பிக்கையும் அது தான் சரி என்ற மனோபாவமும் உருவாகிவிட்டது.

இன்று இந்தியாவின் மொத்தத்திரைத்துறையும், தமிழ் சினிமாவில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதிலும் வேற்று மொழி மாநிலங்களில் இருந்து கூட தமிழில் திரைப்படம் எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உண்மையில், ஒரு பக்க, தமிழ்சினிமா, பல கோடி வியாபாரநிறுவனமாய்  இருந்தாலும், அதற்கு நேர் எதிர் எளிமையான படங்களும் உருவாகி வருகின்றன. நிறைய இளைஞர்கள், 'தீவிர திரைக்கதை 'வடிவங்களையும் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். வணிக ஊடகமாக இருக்கும் சினிமாவை, தமக்கு ஏற்றவகையில், ஒரு கலை ஊடகமாகவும் மாற்றிய முயற்சிகள் சமீபத்திய படங்களில் பார்க்கமுடிகிறது.

என்றாலும், தற்பொழுதைய அரசியல், சமூகத்தெளிவு ஆற்ற படங்கள் முழுமையும் கலைப்படங்கள் ஆகாது என்பது என் நம்பிக்கை. அதற்காக, அரசியல் படங்கள் தான் எடுக்கவேண்டும் என்று கூறவில்லை.

ஒரு திரை இயக்குநனின் அரசியல் தெளிவும், சமூக அறிவும் அவன் சொல்லும் கதையின் பக்குவத்தில் கண்டிப்பாய் வெளிப்பட்டுவிடும். இல்லையென்றால், படம், திரையரங்கிற்கு வந்த வேகத்தில் போய்விடும். படங்கள் நூறு நாட்கள் ஓடியது போய், ஒரு வாரம் ஓடியதற்கே விழா எடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

'மாற்று'சினிமா என்ற அடையாளத்துடன் உருவான பல படங்கள், தோல்வியடைந்திருக்கின்றன, மக்களைக் கவராமல் போயிருக்கின்றன. முதல் காரணம், அவை முழுமையும் சினிமாவாக இல்லாமல், டாக்குமெண்டரித் தன்மையுடனோ அல்லது கேமராவை வைத்து கதை சொல்லும் அனுபவத்தைத்தராமலோ இருப்பது தான் காரணம்.

பொதுமக்களின் நவீன மனநிலையை, அதன் சிக்கலை, ஊடாகச் சொல்ல விரும்பும் கதைகள், 'மாற்று' பாதையைத் தேர்ந்தெடுக்கின்றன என்று சொல்லலாம்.

இன்றைய சூழ்நிலையில், 'மாற்று' சினிமா என்பது வலிமையான ஒரு விடயம். பெருத்த மரியாதைக்குரியவிடயமும் கூட. சினிமா எனும் கலையை, அறிவுப்பூர்வமாகச் செயல்படுத்தத்தெரியவேண்டும். 

பேசுவதிலோ எழுதுவதிலோ இல்லை. கதையை இயக்குவதில் இருக்கிறது.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: