நம் குரல்

நம் இந்தியத்திருநாடு ஏன் அழுக்காக இருக்கிறது?






வெளிநாட்டிற்குப் போய்வருபவர்களும், உள்நாட்டிலேயே அதிகமாய் பயணிப்பவர்களும் கழிவறைகள் தூய்மையாக இல்லாது இருப்பது குறித்து அங்கலாய்ப்பது தினந்தோறும் நம் காதில் ஒலிப்பது தான்.

ஒரே முக்கியமான காரணம், கழிவறைகளைத் தூய்மையாக வைத்திருப்பது நம் வேலையில்லை, அது குறிப்பிட்ட சாதி சார்ந்த மக்களின் வேலையும் பொறுப்பும் என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணுவது தான்.

கையால் மலம் அள்ளுவதை ஓர் ஆன்மீக அனுபவம் என்று ஒரு சாதிவேலையாகத் திணிப்பதும், அத்தகைய சாதி மனநிலையிலிருந்து தான் வருகிறது.

வேலைகளுக்கு இடையே உயர்வு, தாழ்வு பேதம் பாராட்டும் நம் நாட்டில், கடைநிலைத் தொழிலாக கழிவறைகளைத் தூய்மை செய்வதைப் பார்ப்பதுடன், அதை ஒரு சாதியினர் தாம் செய்யவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பொது இடங்களிலும், ஏன் வீட்டிலும் கூட நம் கழிவறைகளைத் தூய்மையாக வைத்திருக்க நாமே முற்படுவதில்லை. நாம் பயன்படுத்திய பின்பு, அதைத் தூய்மை செய்ய இன்னொருவர் வருவார் என்ற எண்ணத்திலேயே அதன் தூய்மைக்கான பொறுப்பைத் தவிர்க்கிறோம்.

வீட்டில் கழிவறை என்பது ஒதுக்கப்பட்ட, நாற்றமெடுக்கும் ஒரு குறுகிய அறை என்பதாகவே வடிவமைக்கப்படுகிறது. உண்மையில், சிறிய நூலகங்கள் வைக்கப்படவேண்டிய அளவிற்கு, நூலகத்திற்கு இணையான இடமாகவே இதை உணர்ந்த மனிதர்களின் வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால், நம்மில் பெரும்பாலோருக்குக் கழிவறைகளை எப்படி பயன்படுத்துவது என்பது கூட உண்மையில் தெரிவது இல்லை.

பெரும்பாலான கிராமங்களுக்கும் உள்ளூர்களுக்கும் போதுமான கழிவறைகள் சென்று சேரவில்லை. அரசுப்பள்ளிகளில் கூட மாணவ, மாணவியர்க்கு கழிவறைகள் அவசியம் என்பதை உணராத அரசும் நிர்வாகமும்.

பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட கழிவறைகள் இருந்தாலும் அவற்றை முகம் சுளிக்காமல் பயன்படுத்துவதற்கான முயற்சியை, பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

ஒரே காரணம், நம் அடிமனதில் காலங்காலமாக நாம் ஏற்றுக்கொண்ட எண்ணம், கழிவறைகளைத்தூய்மை செய்ய அதற்கென ஒரு சாதி மக்கள் இருக்கின்றனர், அவர்கள் பொறுப்பு அது என்பதே. அவர்களை நாம் மனிதர்களாகவோ, ஏன் சக உயிர்களாகவோ கூடப் பார்ப்பதில்லை.

இந்த எண்ணமே, இந்தியத்திருநாட்டை அழுக்காக வைத்திருக்கிறது. இன்னும் இன்னும் அழுக்காக, நாற்றமெடுப்பதாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: