நம் குரல்

கதை தான் எல்லாமும்!



ஒரு சினிமாவை எவரும் பார்த்து எப்படியும் விமர்சிக்கலாம் என்ற காலகட்டத்திற்கு வந்துவிட்டோம். சினிமா அத்தகைய சனநாயக ஊடக வடிவமாகிவிட்டது.
பிராந்திய அளவில், சினிமாவின் சுயாட்சியும் நவீனமும் தான், அதை எல்லோரையும் வசீகரிக்கும் கலை வடிவமாக்கி வைத்திருக்கிறது.

ஒரு படத்தின் கதையில் தான் எல்லாம் இருக்கிறது.

சினிமாவைப்பொறுத்தவரை, என்ன தான் தொழில் நுட்பம் வளர்ந்தாலும், வியாபாரத்தளம் விரிந்தாலும் சொல்லப்படும் கதையின் தரம் அல்லது கதையின் வழியாக, மனித விழுமியம் எந்த அளவுக்கு சவாலுக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தான் சினிமா என்னும் ஊடகம் வளர்ந்திருப்பதாகச்சொல்லப்படுகிறது.

காலந்தோறும் ஒரே கதை தான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரே கதை வெவ்வேறு முறையில் அல்லது வெவ்வேறு இடைவெளியில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு கதை அல்லது ஒரு கதையின் துணுக்கு அல்லது கதை நோக்கிய ஒரு தருணம் அல்லது ஒரு கதையைச் சொல்லப்போவதற்கான முனைப்பு கூட போதும், ஒரு சினிமாவின் கதைக்களத்தை உருவாக்குவதற்கு!
முழு நீள, தொடக்கம், நடு, முடிவு என்ற கதைக்கயிறு தேவையில்லை.

பல்வேறு அரசியல், சமூகச்சிக்கல்களுக்கு இடையிலும், மனித விழுமியங்களை நோக்கி, ஒரு கதை எவ்வளவுக்கு தலைவணங்கியிருக்கிறதோ, அந்த அளவிற்கு அதன் 'கலை தரம்' உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய இயக்குநர்கள், தம் சிந்தனை நோக்கி, மனித விடுதலை நோக்கி மக்கள் கூட்டத்தை இணங்கச் செய்திருக்கிறார்கள். உ.ம். குரோசாவா, தாஸ்தாயேவ்ஸ்கி, பராஜனோவ், அப்பாஸ் கியோராஸ்டமி...

ஆனால், தமிழ் சினிமாவில் மாற்று சினிமா என்று சொல்வது எல்லாம் இதுவரை ஒரு மிகையான கட்டுமானமாகத்தான் இருந்திருக்கிறது. அப்படி 'மாற்று சினிமா' என்று சொல்பவர்கள் எல்லாம் தம் தலையை மோதிக்கொண்டது வெகுசன சினிமா அல்லது வியாபார சினிமாவுடன் தான். உண்மையில், 'மாற்று சினிமா' அல்லது 'மக்கள் சினிமா' அல்லது 'கலை சினிமா' என்று கவலைப்படுபவர்கள், வியாபாரசினிமாவைப்பொருட்படுத்தவேண்டியதில்லை. தன் பாட்டுக்குத் தன் சினிமாவை உருவாக்கவும் பேசவும் வேண்டியது தான். இது குறித்து இன்னொரு சமயம் விரிவாக எழுதலாம்.

தமிழ்சினிமாவின் கதைக்கு வருவோம். பாரதிராஜாவின் 'அன்னக்கொடி' என்ற படத்தின் கதையை, படம் பார்த்தது முதல் பல கதைக்கயிறுகளுன் ஒப்பிட்டு அசைபோட்டுக்கொண்டிருந்தேன். இயக்குநர் பாரதிராஜா அளவிற்கு, தமிழ்ச்சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் வன்முறைப்பண்பாட்டை, கலைப்பண்பாடாக மாற்றிய இயக்குநர் இல்லை. முற்போக்கை நோக்கி தான் செல்வது போன்ற தொனி ஒலித்தாலும், சுயசாதிப்பண்பாட்டுப்படிமங்கள், இன்று தொன்மங்களாகிப் போகும் அளவிற்குக் கூர்மையாகப் பதிவு செய்தார். அவர் சினிமா வழியாகச் செய்த விபரீதங்கள் சொல்லி மாளாது. அங்கிருந்து விலகி வர, அவருக்கு, அவருடைய முழுதொழில் காலமும் பிடித்தது போலும். 'அன்னக்கொடி' கதை முழுதும் அவருடைய வழக்கமான கதைப்பாதைக்குத் தலைகீழானது. அவர் இது வரை நிகழ்த்தி வந்த குரூரமான, சுயசாதி மோகச்சினிமாலிருந்து விலகி, சமூகநேர்மையை ஏதோ ஒரு புள்ளியில், படம் பிடிக்க விழைந்திருந்தார்.

அந்தப்படம் வியாபாரரீதியில், படு தோல்வியடைந்தது. வெற்றியடையாத படங்களின், அடிப்படையான நல்ல நோக்கங்களையும் கருத்தில் கொள்வது தான் கலைச்செயல்பாட்டுக்கான முன்னெடுப்பாகும். பார்த்தவர்கள் எல்லோரும், 'அன்னக்கொடி' கேவலமான படம் என்று கூறினார்கள். திரைக்கதையின் தொய்வுகள், கதையில் ஆங்காங்கே கண்ட பொத்தல்கள் மீறி, கதையின் நவீனமும், அவர் சொல்ல விழைந்த தற்கால பாலியல் மொழியும் எனக்குப் பிடித்திருந்தன.

கதை தான் எல்லாமும்!



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: