நம் குரல்

'மாற்று' என்பதும் 'மெயின் ஸ்ட்ரீம்' என்பதும்!




அடிப்படையில் முற்றிலும், 'மெயின் ஸ்ட்ரீம்' அழகியலுக்கும் ஊடகங்களுக்கும் எதிரான பண்பாட்டையும் இலக்கியத்தையும் தோழமையையும் பின்பற்றி வந்தவள். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக என் எழுத்தும் சிந்தனையும் அதுவாக இருந்திருக்கிறது. இந்த 'மாற்று' என்பதன் மீது முழுமையான ஈர்ப்பும், அக்கறையும் இருந்ததாலேயே என்னால் எழுத்தாளராக இருக்கமுடிகிறது என்றும் நம்புகிறேன்.

தொடர்ந்து கூட்டங்கள், போராட்டங்கள், களப்பணி என்று இயங்கிய போதும், இந்த 'மாற்று' விஷயங்களை ' 'மெயின் ஸ்ட்ரீமு'க்குக் கொண்டு சேர்க்காமல் நம் நோக்கம் நிறைவேறாது என்பதைப் புரிந்து கொண்ட போது, என் நம்பிக்கைகளும் வழிமுறைகளும் இன்று மாறிவிட்டதாகவே நம்புகிறேன்.

என்ன இருந்தாலும், 'கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்', 'மரண தண்டனைக்கு எதிரான போராட்டம்', 'சாதி மறுப்பு வாழ்வியலை ஆதரிக்கும் போராட்டம்' என மாற்றுச்சமூகத்தினர் எப்பொழுதும் போராடிக் கொண்டிருப்பதாகவும், அது பொதுச்சமூகத்தின் அக்கறைக்குள் அடங்காததாகவும் இருக்கிறது.

பல சமயங்களில், 'மாற்று' என்பதன் நீரோட்டத்தில் இருப்பவர்கள் கூட மன இறுக்கங்களுடனும், அவதூறு அரசியல் போக்குகளுடனும், தற்பெருமையின் அடையாளங்களுடனும் இயங்கிக்கொண்டிருப்பது, 'மாற்று' என்பதன் வீர்யம்  'மெயின் ஸ்ட்ரீம்' சேரமுடியாமல் தடுத்திருக்கிறது. மக்கள் திரளாக ஆகாமல், 'மாற்றுக் கருத்தியலாளர்கள்', தனித்தனி மனிதர்களாகக் குறுகிப்போயினர்.

'மாற்று'க் கருத்தியலை,  'மெயின் ஸ்ட்ரீ'முக்குக் கொண்டு சென்று, பொதுச்சமூகத்தினர் இக்கருத்துகளை உள்வாங்கவைப்பதும், அவர்களையும் இவ்வியக்கங்களில் பங்குபெறவைப்பதும் இக்காலக்கட்டதின் அவசியமாகிறது.

ஆக, 'மாற்று' என்பதன் அவசியம் குறையாமல், நம் சமூகவெளிச்சத்தை 'மெயின் ஸ்ட்ரீ'முக்கு எடுத்துச்செல்லும் பொறுப்புணர்வும், அழகியலும், போராட்ட மனப்பான்மையும் கொண்டவர்கள் தாம் இன்று சமூகத்திற்குத் தேவைப்படுகின்றனர்.  'மெயின் ஸ்ட்ரீம்'  மாயையிலும் ஆர்ப்பாட்டத்திலும் மறைந்து விடாமல் இருப்பவர்கள் தாம் சமூகத்திற்கு அவசியம். 

இனி, 'மாற்று' என்பதே,  'மெயின் ஸ்ட்ரீம்' !





குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: