நம் குரல்

'பண்பாட்டு அதிர்ச்சி'யைத் தந்த நீயா நானா!!






அன்புள்ள நண்பர்களே! நேற்று நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு நிறைய தோழியர் தொலைபேசியில் அழைத்தார்கள், அது என்ன மாதிரியான நிகழ்ச்சி என்று ஆத்திரத்தில் கேட்டு! ஆண் இளைஞர்கள் எப்படி பெண்களை வர்ணிக்கிறார்கள் என்றும், பெண்களைப் பற்றிய அவர்களின் பார்வை என்னவாக இருக்கிறது என்றும் ஒரு விளக்கமான அலசல். நிறைய பேர் அந்த நிகழ்ச்சியால் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது. அந்த உரையாடலில், எல்லோரும் பண்பாட்டு அதிர்ச்சிக்கு ஆளானதை உணரமுடிந்தது. 

நான் அந்த நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்டபோது மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது உரையாடிய இளைஞர்களின் மனநிலை வழியாக சமூகத்தின் குறுக்குவெட்டுத்தோற்றத்தைக் கண்டறிய முடிந்தது.

இளைஞர்களை இப்படி உரையாட அனுமதிக்காத சமூகம் தான் காதல் என்ற பெயரில் தற்கொலையையும் ஆசிட்வீச்சையும் கொலைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் என்பது என் கருத்து. 

அந்த நிகழ்ச்சி பற்றி எனக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. இதே முறையில் 'பெண்கள்' உரையாடும் படியான நிகழ்ச்சியாகஎன் ஏன் இல்லை அது என்பது என் கேள்வியாகவே இருந்தது. பெண்கள் பாவைகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். மேலும், எழுப்பப்பட்ட கேள்விகளை இளைஞர்கள் புரிந்துகொள்வதற்கே சமயம் எடுத்தது. நிகழ்ச்சியை நடத்துபவருக்கும், பங்குபெறுபவருக்கும் இடையே ஒரு பொதுமொழியைத் தேடவேண்டியிருந்தது.

வீட்டின் மைய அறையில் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியை வைத்திருக்கிறோம். அதில் 'ஆணும் பெண்ணும்' உறவாடும்படியான என்னென்னவோ காட்சிகள் வந்து போவதைக் கண்டும் காணாமலும் இருக்கிறோம். தவிர்க்கிறோம். காட்சியிலிருந்து நாம் முகத்தை எடுத்துக்கொண்டால், குழந்தைகள் கவனிக்கமாட்டார்களா என்ன? நம் குழந்தைகள் அந்தக்காட்சிகளை எப்படிப் புரிந்து கொள்வது என்று அறியாமல் வெறித்து வெறித்துப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் புறக்கணித்துக் கொண்டிருக்கிறோம். என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்காமல் அடுத்த நிமிடமே வசதியாக மறந்துவிட்டுப்போகிறோம்.

இதற்கான உரையாடல் அற்ற சமூகத்திற்கும், சினிமாவில் நாம் காணும் அபத்தமான, காதலற்ற, ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் மதிப்பீடுகளற்ற பாலியல் காட்சிகளுக்கும் இடையே இடைவெளியில் நிறைய போலியான பண்பாட்டுப் புரிதல்களும், பாலியல் சங்கடங்களும் இருக்கின்றன என்பதை நாம் உணராமல் இருக்கிறோம். தர்மசங்கடத்தை பரிதவிப்புடன், எரிச்சலுடன் கடந்துவிடத்துடிக்கிறோம்.

இம்மாதிரியான உரையாடல்களின் தொடக்கத்தில் நாம் இப்பொழுது உணரும் சங்கடங்களை, தயக்கங்களை எல்லாம் நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். அப்படியான சமூக இறுக்கத்தில்  தான் இருக்கிறோம். இதை உணராமல், அதிர்ச்சி அடைவதில் எந்த அர்த்தமும் இல்லை.


உரையாடலை, ஏதோ ஓர் இடத்தில் தொடங்குவது நல்லது. தொடருமா என்று தெரியவில்லை. 





குட்டி ரேவதி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

உண்மையான விடயம்