நம் குரல்

இரண்டடுக்குச் சிந்தனை - 3

உடலெங்கும் இறகுகள் நிரப்பப்பட்டதாகி விடுகிறது காதலெனும் உறவில். அதனால் தான் நேர தூரங்களை எளிதாகக் கடக்க முடிகிறது.

பெரும்பாலும் வீட்டின் கூரைகளைத் தவிர்த்த கூரைகளின் கீழேயே உறங்க நேர்வதால் வீட்டிலேயே விழித்தாலும் கூரையின் முகம் வேறாய்த் தெரிகிறது.

கடலின் விளிம்பைப் போல் தனிமையில் கொண்டு சேர்க்கிறது, மீண்டும் மீண்டும் ஒரே பதிலையே அளிக்க தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் ஒற்றைக் கேள்வி.

பண்டிகை நாட்களின் மதியத்தில் தூக்கம் வழியும் கண்களின் முன்னே கொடியில் காய்ந்து கொண்டிருக்கிறது வெயில்.

இரைந்து கொண்டேயிருக்கும் இதயத்துடன் இருந்த அந்தப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணீர்த் துளிகளாகி உருண்டோடி கடலின் மறு எல்லை சேர்ந்தன.

பியர் நிறைந்த கோப்பையில் நுரைத்திருக்கும் கசப்பினுடன் தான் ஆண்களின் உறவில் ஈர்ப்பும்.

நரகத்தின் எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொரிப்பதைப் போல இருக்கிறது வாழ்க்கை என்கிறாள் தோழி. வேறெங்கே நரகம் இருக்குமென்று நம்புகிறாள் அவள்?

அடிக்கடி தனக்குத் தானே அன்பளிப்பு கொடுத்துக் கொள்பவர்களாய் மாற வேண்டும் தோழிகள். அதில் முதலாவது காதல்.

அந்தக் கவிஞனின் வரிகளில் மறு உலகங்கள் பிறக்கின்றன. அப்படித் தானே இன்னோர் உலகுக்குள் நுழைய முடியும்.

நீண்ட இடைவெளி கழித்து இன்று அவரைக் காண நேர்ந்தது எனைக் கடந்து சென்ற போது. வாய்ப்பிருந்தால் தொடக்கத்திலிருந்தே உறவைத் தொடங்கலாம்.

பாலைவன வெளியில் இரு புறமும் திறந்து கொள்ளும் ஒற்றைக் கதவைப் போல அர்த்தமற்றது திருமணம் எனப்படுகிறது.

அடர்ந்த புல்வெளியையும் நதியோடும் வண்டல் கரையையும் உன் கண்ணோரம் கண்ட பின் எப்படி அதன் வழியே நடவாமல் தவிர்ப்பது?

மனிதர்களுடன் பேசமுடியாத தூரங்களில் இறுகிப் போயிருக்கும் மலைகளை வருடுவதற்கே இருக்கின்றன மேகங்கள்.

ஒரே மின்னஞ்சலில் ஓர் இனப்படுகொலைக்கான வார்த்தைகளைப் பொதிந்து அனுப்ப முடிவதான காலகட்டத்திற்கு நாம் எப்படி வந்து சேர்ந்தோம்?

குட்டி ரேவதி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மனிதர்களுடன் பேசமுடியாத தூரங்களில் இறுகிப் போயிருக்கும் மலைகளை வருடுவதற்கே இருக்கின்றன மேகங்கள்.


appadiyaa....azhagana varunanai...