நம் குரல்

புனைவு

முன்பு போல் நீயும் நானுமினி வாழ இயலாது என்றுன்
உதடுகளும் விரல்களும் ஒரு சேர பகன்ற சமயம்
வலிகளை கொதிக்கும் தேநீர் இலைகளென்றெண்ணி
இனி ஒரு போதும் பருகப் போவதில்லை என்றும்
கண்ணாடி தாக்குண்டு உடைந்து சிதறிக் கிடந்ததான
ஓர் அவலம் பற்றிய வெளியிலிருந்து
வேறு வேறு கதவுகளைத் திறந்து பிரிந்தோம்
வேறு வேறு புனைவுகளின் எலும்புக் கூடுகள் வழியே
இருமையான காலங்களைத் திறந்தோம்
கதைகளின் பக்கங்கள் நீரலைகளால் ஆனவை போல
கண்ணீருக்கும் தாகத்துக்கும் இடையே நம் இரவுகள் புரண்டன
நல்ல வேளையாகக் கனவுகளுக்குள் புனைவுகள் நுழைய விதியில்லை
பாறை மிகுந்த வெளியில் கண்ணீர்க் கிணறுகள் திறப்பதை
நானும் ஒப்பவில்லை நீயும் விரும்பவில்லை
நெடுகத் திறந்த புனைவுகளில் மனித ஆவிகளைச் சுமந்து
மரங்களின் கபால உச்சிகள் அங்குமிங்கும் அலைந்தன
அவற்றின் மீது சிந்திக் கொண்டிருந்த நிலவின் ஒளி
புனைவுக்கான விதைகளைப் பருவமெய்தச் செய்தது
இருவரும் வேறு வேறு கதவுகள் திறக்க ஓரிடம் வந்து
எதிரெதிர் கண்டோம் நம்மை நாம் இறுகப் பிணைய






குட்டி ரேவதி


1 கருத்து:

விஜய் சொன்னது…

வார்த்தை பிரயோகங்கள் அழகு

வாழ்த்துக்கள்

விஜய்