நம் குரல்

ஹைவே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைவே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"ஹைவே"யும் பெண் விடுதலைப்படங்களும்!





வேலைப்பளு மிகுந்த ஒரு நாளுக்குப் பின் ஓடிவந்து விமானத்தில் ஏறியது போல் இருந்தது. இரவு என்பதால் நீள் தூக்கம். பின் விழித்தால், விமானம் தரையிறங்க, இரண்டு மணி நேரமே மிச்சம் இருந்தது. இது போன்ற பொழுதுகளில், திரையரங்கில் காணத்தவறவிட்ட படங்களைப் பார்த்துவிடுவதுண்டு. படங்களின் பெரிய பட்டியலில், 'ஹைவே' படத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து முடித்தேன்.

மிகவும் வசதியான குடும்பத்தில் இருந்து, அது மூச்சுமுட்டும் தருணத்தில் வெளியேறும் பெண் கடத்திச்செல்லப்படுகிறாள். அவள் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும்பொழுது,  இந்தியாவின் பிற நகர் வெளிகளில் கிடைக்கும் அனுபவம் அவளுக்குப் புது உற்சாகத்தைத் தருகின்றது. கடத்தப்பட்டவனின் மீதே காதல் கொள்கிறாள். 

கடத்தப்பட்டவனின் மீதே காதல் கொள்ளும் கதை, பழையது தான் என்றாலும், ஒரு பெண்ணின் அனுபவத்தை விடுதலையாகப்பார்க்கும் விதத்தில் இந்தப்படம் மாறுபடுகிறது. அவர்களுக்கு இடையேயான காதலும் மென்னயம் குறையாமல் ஒரு காவியப்பண்பை அடையும்படியாக, நுட்பமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

சமீபத்தில், நிறைய இளம் இயக்குநர்கள், பெண் கதாநாயகிகளை மையமாக வைத்த கதைகளைக் கைவசம் வைத்திருக்கின்றனர். ஒரு முக்கியமான காரணம், கதாநாயகர்களை வைத்து முதல் படத்தை இயக்குவது, இளம் இயக்குநர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. இரண்டாவது காரணம், நவீனப் பெண்களின் ஆளுமையைத் திரையில் காணுவது, புத்துயிர்ப்பான அனுபவமாக இருப்பதாகவும் இயக்குநர்கள் சொல்கிறார்கள்.

இரண்டு காரணங்களுமே முக்கியமான காரணங்கள் தான். ஆண்களை கதையின் நாயகர்களாக வைத்துச்சொல்லும் போது வலிந்து திணிக்கப்படும் கதாநாயகத்தன்மை, போலி உணர்வுகளும் வெளிப்பாடுகளும் கலந்த கதை வெளி என்று வீணே அலட்டிக்கொண்டு, தன் விரலைச்சுட்டுக்கொள்ளவேண்டியதில்லை.

பெண்களை மையமாக வைத்துச் சொல்லப்படும்போது, இயல்பாகவே யதார்த்தத்தை விட்டு விலக முடியாத திரைக்கதையை அது கோருகிறது. வலிமையும் புத்திக்கூர்மையும் கொண்ட பெண்களைத்தான் உண்மையாகவே ஆண்கள் விரும்புகிறார்கள் என்பதை இனியும் திரைத்துறையிலிருந்து புறக்கணிக்கமுடியாது. 

சமீபத்தில், இந்தியாவின் எல்லா மொழிகளிலும் கையாளப்படும் பெண் கதாபாத்திரங்கள் வெகுவாகவே மாறியுள்ளன.

இதற்கு அப்பால், நான் சொல்ல விரும்பும் விடயம்: இப்படத்தில் பணக்காரப்பெண்ணின் விடுதலையாகக் காட்டப்படும் விடயங்கள் எல்லாமே, இன்று நடுத்தரவர்க்க மற்றும் அடித்தட்டுப்பெண்கள் இயல்பாகவே அனுபவிக்கும் விடுதலை வாய்ப்புகள் தாம்.
எனில், நடுத்தரவர்க்க மற்றும் அடித்தட்டுப்பெண்களுக்கான விடுதலை என்பது என்னவாக இருக்கும் என்பதை ஏன் திரை இயக்குநர்களால் ஏன் கையாளமுடிவதில்லை?  

எனக்குத் தோன்றும் ஒரே காரணம்: இயக்குநர்கள், சமூகத்தின் மேட்டிமை குணங்களுடன் தாம் தம்மையும் இணைத்துப்பொருத்திப் பார்த்துக்கொள்கின்றனர் என்று தோன்றுகிறது. 
சமூக இயக்கங்களுடன் வெளிப்பாடுகளை, 'கிரியேட்டிவ்வாக' திரையில் கையாள, பரந்து பட்ட அனுபவமும் பக்குவமும் தேவைப்படுகிறது.

'வழக்கு எண்' படம் போன்ற படத்தை இங்கு கவனத்தில் இருத்தவிரும்புகிறேன்.


குட்டி ரேவதி