நம் குரல்
மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி - 2
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வடிவில் மதம் என்பது பெரும் ஆயுத வடிவமாகவும் அரசியல் வெளிப்பாடாகவும் இருந்துள்ளது. ஏன் பெரிய போர்களுக்குக் கூட காரணமாக இருந்திருக்கிறது. இந்தப் பத்திகள் வழியாக இலங்கையைப் பொறுத்தவரை எப்படி மதம் அரசியல் ஆதிக்கம் மிக்கதாக உள்ளது என்பதை ஒரு பகுத்தாய்வு செய்ய விரும்புகிறேன். இன்று ஈழப்போராட்டம் அடைந்துள்ள நிலைக்கான காரணங்களை அறிவதற்கான ஒரு சிறிய மீளாய்வு இது. இதுபோலவே மொழிப்போர், தொன்ம ஆதாரங்கள், தமிழக அரசியல், இந்திய அரசின் நிலைப்பாடு, சிங்கள அரசின் தந்திர நடவடிக்கைகள் என பல திசைகளிலிருந்து இவ்வினவொழிப்பு நடந்தேறியதற்கான ஆய்வையேனும் நாம் செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். வெறுமனே உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இப்பிரச்சனையை அணுகிவிட முடியுமென்றோ, சிங்கள அரசு மற்றும் அதற்கு உதவியாக இருக்கும் நாடுகளின் சூழ்ச்சித்திறன்களை வெல்ல முடியுமென்றோ நான் நினைக்கவில்லை. ஈழத்திற்கு ஆதரவாக இனவாதத்திற்கு எதிராக உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் உண்மையில் நடந்து கொண்டிருப்பது என்ன என்பதை ஒரு சிலரேனும் கருத்தியல் ரீதியாகப் பகுத்தாய வேண்டியிருக்கிறது.
மதம் என்பது தனிமனிதனுக்கானது; அரசியலுக்கானது அன்று. அரசியலும் மக்களுக்கானதே அன்றி மதத்தின் ஆதாயத்துக்கானது அன்று. ஆனால், இலங்கையில் சிங்கள-பெளத்த பிணைப்பு என்பது 1972ம் ஆண்டிலிருந்தே இலங்கையின் அரசியல் சட்ட அமைப்பில் சிறப்பான மரியாதைகளைப் பெற்றுவந்துள்ளது. இதனால் தாம் இலங்கையின் எல்லா பெளத்தமத சங்கங்களும் அரசியல் சட்ட அமைப்பினூடாகவே அரசியல் செயற்பாடு மேற்கொள்வதற்கு ஏதுவானது. 1986-ம் ஆண்டு, இருபதுக்கும் மேலான பெளத்த அமைப்புகள் இணைந்து ”தாய்நாட்டுப் பாதுகாப்புப் படை” என்பதை உருவாக்கின. இந்த அமைப்பின் பெயரிலேயே அது என்ன நோக்கத்திற்கானது என்பது புலனாகும். அந்த நாடு, அவர்களுக்கான தாய்நாடு என்பதான அர்த்தம் கொள்கிறது. இவர்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துச் செல்வதற்கான ஒரு பெருவழியாக இந்த அமைப்பு இருந்தது. இவர்கள் எல்லோரும் ஓர் அமைப்பாக ஒன்றிணைந்தது இனரீதியான மாகாண சபைத்தீர்வினை எதிர்ப்பதற்காகவே.
இந்த அமைப்பு 1986-ல் வெளியிட்ட அறிக்கை இவர்களின் உள்நோக்கங்களையும் அந்த அறிக்கையில் அவர்கள் பிரயோகித்த வார்த்தைகள் அடிப்படையான அவர்களின் எதிர்ப்புணர்வையும் பட்டவர்த்தனமாக்குகின்றன. சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் தலையீட்டையும் சமாதானப் பேச்சுவார்த்தையையும் ’நமது தாய்நாட்டைப் பிரிப்பதற்கான சூழ்ச்சி’ என்று முறையிட்டனர். அதுமட்டுமல்லாது இந்த மாகாண சபைத்தீர்வு கூட ’நாட்டைத்துண்டாடும்’ சதி என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டனர். அவர்கள் ஈழ இனவாதத்தையும் ’ஈழக் கொலைகார வாதம்’ என்றே குறிப்பிடுகின்றனர். அம்மண்ணின் அடிப்படையான உரிமைகள் சம அளவில் கொடுக்கப்படாதிருந்த நிலையில், மேற்குறிப்பிட்ட, ’ஈழக் கொலைகார வாதம்’ என்ற சுட்டுதலுடன் அந்நாட்டின் எல்லா வளங்களும் சமமாக ஏற்கெனவே பிரித்தளிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடுவதும் நகைப்புக்குரியது. மேலும் அந்த அறிக்கையில் தமிழர்களின் நிலையினை குறிப்பிடும் எந்தக் கருத்து வாதமும் இல்லை.
மாகாண சபைத்தீர்வை அவர்கள் எதிர்ப்பதற்காகக் கூறிய காரணங்கள் இரண்டு: ஒன்று, அது ஒரு தேசத்துரோக நடவடிக்கை. மற்றொன்று, அது ஓர் ஈழக் கொலைகார வாதம். மேலும் தாய்நாட்டுப் பாதுகாப்புப் படை, தங்கள் இலட்சியங்களாக வலியுறுத்தும் இறையாண்மை என்பதும் ஒற்றுமை என்பதும் அதற்கான இலச்சினைகளும் அர்த்தப்படுத்துவது, பெளத்தத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்று பட்டிருக்க வேண்டும் என்பதே. அவர்களின் இறையாண்மை என்பது கூட முழு அதிகாரமும் பெளத்தத் தலைமையை மையமாக்கியதாக இருக்கவேண்டும் என்பதே. இந்தக் கட்டத்திலிருந்தே தொடர்ந்து அத்தாய்நாட்டுப் பாதுகாப்புப் படைக்கு ஆதரவான பிரச்சாரங்களையும் போரட்டங்களையும் ஓர் இராணுவம் போலவே பெளத்த சங்கத்தினர் செயல்படுத்தி வந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சிங்கள அரசே கூட இந்த பெளத்த அமைப்பின் ஆதரவைக் கோரிப்பெற வேண்டிய தேவை இருந்துவந்துள்ளது.
தா.பா.ப-வின் இரண்டாவது அறிக்கை அவ்வியக்கத்தினை நிர்வகிக்கும் முறையைக் குறித்ததாக இருக்கிறது. மூன்றாவது அறிக்கையின் வழியாக அவர்கள் சிங்கள அரசு, தமிழீழ வாதிகளுடன் பேச்சு வார்த்தைக்குச் செல்வதையே கூட கண்டித்தனர். ஏக சத்தா, அதாவது; ஒரு குடையின் கீழ்’ என்ற சிங்கள–பெளத்த மேலாதிக்கத்தீன் கீழ் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறியது மூன்றாவது அறிக்கை. ஆனால் இந்த ’ஒற்றுமை’ என்பதும் ‘இறையாண்மை’ என்பதும் ஒரு மாய வாதத்தைப் பேச்சளவில் குறிப்பிடும் சொற்களே. அல்லது அவற்றிற்கான அர்த்தங்கள், ’எங்களின் கீழ் நின்று செயல்படுங்கள் என்பதே’. மேலும், மரபார்ந்த ஒற்றுமை, இறையாண்மை போன்றவற்றை வேண்டும் தேசத்தின் கொடியும் பாடப்படும் தேசிய கீதமும் சிங்கள இனத்தினை மட்டுமே நாட்டோடு இணைத்துப்பார்ப்பதாக இருந்தது. (இது இன்னொரு விவாதத்திற்கானது.) ஆக, கருத்தியல் அளவில், உடல், பொருள் அல்லது எல்லா இருப்பு சார்ந்த அளவிலும் இனவாதத்தை மக்களிடம் தொடர்ந்து திணித்துக் கொண்டே இருந்தனர். 1980-களில் நிகழ்ந்த இவை தாம் இன்று இனவாதம் இத்தகைய பேருரு எடுப்பதற்கு பெரிய அளவில் அடிப்படையாகவும் அரசியல் காரணியாகவும் இருந்து வந்துள்ளன.
பெளத்தமத சங்கங்களின் இத்தகைய அரசியல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருப்பது அவர்களின் அதிகார விழைவும் அதிகாரத்தின் மீது இருக்கும் பேராசையுமே. ஏற்கெனவே அவர்களின் சங்கங்களுக்குள்ளேயே இம்மாதிரியான, அதிகார கட்டமைப்பிற்கான நடவடிக்கைகளுக்குப் பெருத்த முக்கியத்துவம் இருந்து வந்திருக்கின்றது. அவற்றில் சொத்துக்களைச் சேகரிப்பதும், உடைமைகள் தலைமுறைகளூடே வழிவழியாகச் சென்று சேர்வதைக் கண்காணிப்பதும் முதன்மையானவையாகும். மண்ணின் மீதான அதிகார ஈர்ப்பை அவர்கள் பெளத்த சங்கங்களிலிருந்தே உருவாக்கிக்கொள்கின்றனர். சொல்லப்போனால் பெளத்த குருமார்களே அந்நாட்டை ஆள்கின்றனர். என்றென்றும் ஆள விரும்புகின்றனர். உண்மையில் பெளத்தம் சொல்லும் அறத் தத்துவங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வகையான பொருத்தப்பாடும் இல்லை.
குட்டி ரேவதி
ஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி
இலங்கையில் மதம் என்பது தொடர்ந்து ஓர் அரசியல் அமைப்பாக வலியுறுத்தப்பட்டு வந்தமை குறித்து இத்தருணத்தில் பேசுவது இன்றைய அரசியலுக்கு எவ்வாறு தொடர்புடையதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்கும் என்பது தெளிவாகும். ஓர் அரசு ஏன் மதத்தைத் தன் துணையாக எடுத்துக்கொண்டு இயங்குகிறது என்பது இலங்கையின் அரசியலைமைப்பில் பெளத்தத்திற்கு என்ன மாதிரியான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து அறியலாம். எல்லா மதங்களையும் அங்கீகரிக்கும் அதே வேளை புத்த சாசனம் என்பதை முதன்மையாகக் கொள்வதும் அதைக் காப்பாற்றி வளர்ப்பதும் அரசின் கடமை என்பதை 1978-ல் அரசியல் அமைப்பில் உள்ளடக்கியதும் உறுதி செய்ததும் சாதாரண அர்த்தத்தில் அல்ல. மேலும் மேலும் மதத்தின் கட்டமைப்பை அரசின் வல்லமைக்கு ஆதரனவானதாக மாற்றுவது என்ற அர்த்தத்தில் தான். அதற்கு ஏதுவாக அரசியல் வரலாறு முழுமையும் புத்த மதகுருக்களும் தொடர்ந்து அரசியல் குறுக்கீடுகளைச் செய்துள்ளனர்.
அயல்நாட்டு அரசுகள் குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற நாடுகள் ஈழத் தமிழர்களுக்காக ஆதரவு செலுத்திய போது மிகப்பெரிய கண்டனக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். அரசின் குரலாக மதகுருமார்கள் முன்னின்று நடத்திய இக்கண்டனக் கூட்டத்தில் அவர்கள் கூறியது, ’மற்ற நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிடக்கூடாது; இது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை. இதை நாங்களே தீர்த்துக் கொள்வோம்’, என்பது தான். இவ்விடத்தில் அரசு அளித்த பாதுகாப்பு உணர்வே, பெளத்த குருமார்களை அரசியல்வாதிகளாக இயங்கச் செய்தது. ஆக தொடக்கத்திலிருந்தே அரசு பேணிவந்த மத ஆதிக்க ஆட்சியின் விளைவால், இந்த மத குருமார்கள் மக்களுக்காக நிற்காமல் அரசிற்காக நிற்கத் தலைப்பட்டனர். சர்வதேச அளவில் யாரும் தலையிட முடியாத அளவிற்கு மதத்தால் இறுகிப்போன அரசு, இலங்கை அரசு. வரலாற்றிலேயே மதத்தைப் பயன்படுத்தி ஒரு மனிதக்கூட்டத்தை அழித்தொழித்த நிகழ்வுக்கு இலங்கை அரசும் அங்கு நிலவும் பெளத்தமுமே என்றென்றும் உதாரணமாயிருக்கும். கடந்து சென்ற அரசியல் பாதையில் இந்த மதகுருமார்கள் தமிழர்களுக்கு அடிப்படைகளைப் பெற்றுத் தருவதற்கான அரசியலமைப்புச் சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இதே காரணத்திற்காக 2000-ல் ஒரு பெளத்த மதகுரு இறக்கும் வரையிலான உண்ணாவிரதத்தைக்கூட மேற்கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு துறவியோ, குறிப்பாக பெளத்தத்தை உள்வாங்கிய ஒருவரோ செய்யக்கூடிய காரியமாக இது இல்லை. இனவாத உணர்வை பலப்படுத்தும் பரப்பும், செயல்களின் தொடர்ச்சி தாம் இவையெல்லாம். வேறுவேறு வடிவில் காலந்தோறும் தமிழர்களுக்கெதிரான போரை முடுக்குவிட்டவர்களின் இப்பெளத்த குருக்கள் கடுமையான அதிகாரங்களைப் பிரையோகித்துள்ளனர்.
அதற்குப்பின்பு, 2002 – லும் அரசியலமைப்பில் எந்த மாற்றம் செய்தாலும் அது மகா சங்கத்துடன் விவாதிக்கப்பட்டு செய்யப்படவேண்டும் என்றும் சிங்கள அரசின் விழைவைக் கருத்தில் கொண்டும் செய்யப்பட வேண்டும் என்றும், சிங்கள மக்களுக்கு மட்டுமே இந்த தேசத்துடன் அடிப்படையான உறவு உண்டு என்றும் இம்மத வாதிகளால் வலியுறுத்தப்பட்டது. மேலும் தேசிய அடையாளங்களும் பெளத்த குறியீடுகளால் மட்டுமே ஆனவையாக இருக்கவேண்டும் என வற்புறுத்தப்பட்டது. சமாதானக்குழுவில் இருந்த நார்வே தூதுவரை வெளியேற்ற மதத்தலைவர்கள் கையொப்பமிட்டு பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமிய கிராமங்களில் கூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. ஆழிப்பேரலை அழிவுக்குப்பின்பு புனரமைப்புப் பணியில் ஈழத்தமிழர்களுக்கு எந்த அளவிலும் பங்களிக்கப்படக்கூடாது என்பதற்காக புத்த மத வாதிகளால் போராட்டம் நிகழ்த்திக் கட்டுப்படுத்தப்பட்டது.
அரசு மதகுருமார்களுக்கு இத்தகைய அரசியல் முக்கியத்துவம் அந்த அரசால் தரப்பட வில்லையெனில், அவர்களுக்கு இத்தகைய மேலோங்கிய சமூக முக்கியத்துவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அரசும் இந்த மதவாதிகளை ஒரு நிறுவனமாக்கி தனது இனவாதத்துக்குப் பயன்படுத்தவில்லையெனில் இத்தகைய ஓர் இனவாதப்போரை அவர்களால் நிகழ்த்தியிருக்க முடியாது. எப்போதுமே இலங்கை வாழ் தமிழர்களுக்கு பண்பாட்டு ரீதியாக தங்களை தமிழகத் தமிழர்களோடு அடையாளப் படுத்திக்கொள்வதற்கான தேவை இருந்ததால் இந்த மத ரீதியான சூழ்ச்சியும் நடவடிக்கைகளும் தோற்கடிக்க முடியாதனவாக வளர்ந்துவிட்டன. இன்று இலங்கை அரசினை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது புத்த சாசனங்களும் அம்மதவாதிகளும் தாம். மேலும் ஒட்டுமொத்தமாக நடந்து முடிந்த இன அழிதொழிப்புக்கு அதுர்லியே ரதானாதான் நாம் அறிந்த எல்லா சிங்கள அரசியல்வாதிகளையும் விட முக்கியமான காரணம். இவரது பிரச்சாரத்தால் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கு மேலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தால் இணைந்தனர், தமிழர்களைக் கொன்று குவிக்க. அதுமட்டுமின்றி சமாதான நீரோட்டத்தைச் சேறாக்குவதில் இவரது பங்கு ராஜபக்க்ஷேக்களைவிட மேலதிகமானது. அவரது அடிப்படையான நோக்கம் மண்ணின் ஆதிக்கத்தை மதம் என்னும் பெயரில் தன் கையில் கொள்வது தான்.
இந்த அபாயத்தை தமிழ்ச் சூழலிலிருந்தே நான் புரிந்து கொள்கிறேன். தமிழகத்தில் சாதி எனும் அமைப்பை எதிர்க்க வேண்டியை, கட்டுடைக்க வேண்டிய ஒன்றாக ஒத்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் ஆன்மீகம் என்பதை இந்து மதத்தோடு மட்டுமே இணைத்துப் பார்ப்பதைப் போன்றது இது. அவர்கள் தேசியவாதிகளாகவும் மதவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் ஏன் அரசியல்வாதிகளாகவுமே தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர் என்பதே இதன் அர்த்தம். இந்தியச் சமூகத்தில் மதம் ஒடுக்குமுறையை நிகழ்த்தும் ஒரு வல்லரசாக எவ்வாறு உருக்கொண்டிருக்கிறது என்பதை இங்குள்ள சாதிய அரசியலை புரிந்து கொள்வதன் மூலம் தெளியலாம். அவ்வாறே இலங்கையிலும் மதம் என்பது ஓர் ஆயுதமாக, ஒரு வன்முறை வடிவமாக வார்க்கப்பட்டு அரசியல் ஆதாயத்துக்காக, இனவாதத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் எந்தத் திசையிலிருந்து வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரியும். தீவிரமான மதவாதம் ஒரு துப்பாக்கியை இயக்குதலைவிட வன்முறைப் பூர்வமானது.
குட்டி ரேவதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)