நம் குரல்

பனிக்குடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனிக்குடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பனிக்குடம் பதிப்பகமும் நூறு பெண்ணியநூல்களும்!





தமிழ்நவீன இலக்கியத்தின், தொடக்கக்காலத்தில் பெண் எழுத்திற்கு இருந்த எதிர்ப்பும் காழ்ப்பும் கடுமையானது. இன்றும் நிலைமை முற்றிலும் மாறவில்லை என்றாலும், முன்பு இருந்த அளவிற்கு மோசமாக இல்லை.

தமிழகத்தின் சமூக, அரசியல் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு பெண்ணியத்தையும், பெண்ணுரிமையையும் அணுக ஒரு பதிப்பகமும், நூறு பெண்ணிய நூல்களும் என்ற திட்டத்தை முன்னெடுப்பது அவசியம் என்று உணர்ந்தபொழுது தான் பனிக்குடம் பதிப்பகம் உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற மிதிலாவும் நந்தமிழ் நங்கையும் இணைந்து செயல்பட்டனர்.

பதிப்பகத்தின் முக்கியமான படைப்புகளாக உருவானவை, தமிழ்நதியின் சூரியன் தனித்தலையும் பகல் என்ற கவிதைத்தொகுப்பு மற்றும் பஹீமா ஜஹான் மற்றும் அனார் போன்ற பெண் ஆளுமைகளின் கவிதைத்தொகுப்புகளும் தொடர்ந்து அவர்களின் படைப்புச்செயல்பாடுகளும். இவர்கள் தம் மொழியாலும் கவிதையின் வீர்யத்தாலும் மொழிநடையின் போக்கை உண்மையாகவே மாற்றினார்கள். தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். 

எமிலி டிக்கின்சன் கவிதை நூலும் வெளிவந்தது. சாதி, பெண், உடல் மூன்றையும் இணைத்துப் புரிந்துகொள்ளும் கருத்தாகச் சிந்தனை குறித்த 'உடலரசியல்' என்ற நூல் சிவகாமி அவர்களால் எழுதப்பட்டது. 

பட்டியலில் இருந்த பிற நூல்கள்:

சிமோன் தி போவாவின், இரண்டாம் பாலினம் என்ற நூலின் முழு மொழிபெயர்ப்பையும் கொண்டு வருவதாக இருந்தது. மொழிபெயர்ப்பு நிறைவை எய்தி தயாராக இருந்தது.

சில்வியா ப்ளாத்தின் கவிதைகள் மொழி பெயர்ப்பு நூல்.

சர்மிளா ரேகே மற்றும் உமா சக்ரவர்த்தி போன்ற பெண்ணியலாளர்கள் எழுதியுள்ள இந்தியப்பெண்ணியம் குறித்த நூல்கள்.

லாரா முல்வியின் பெண்ணிய திரைக்கருத்தாக்கம் குறித்த நூல்.

பெண்களின் நாட்டுப்புறப்படைப்பாற்றல் குறித்த நூல்.

சாவித்ரி பாய் பூலேவின் செயல்பணி குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்.

இந்தியப்பெண்களுக்கு சாதி இல்லை, அது ஆண்களால் தரப்பட்டது என்பதை உணர்த்தும் அறிவியல் பூர்வமான முழுமையான ஆய்வு நூல்.

பழங்குடிப்பெண்களிடம் காணப்படும் பெண் உடல் பற்றிய சிந்தனையும், மண்ணுரிமை நம்பிக்கைகளும்.

என்றாலும், 'பனிக்குடம்' பதிப்பகத்தின் திட்டம் என்பது, அடிப்படையில் தொடர்ந்து பெண்ணிய நூல்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பது. 

காலந்தோறும் பரிணாமம் பெறும் கருத்தாக்கச்சிந்தனைகளுக்கு ஏற்ற நூல்களைப் பதிப்பதன் வழி, பெண்ணியச் சிந்தனையை இலக்கியவெளியிலும் சமூக வெளியிலும் கொஞ்சம் கொஞ்சமாக, அதே சமயம் நிலையான தீவிரத்துடன் ஏற்படுத்த முடிவதற்கான நம்பிக்கையை விதைப்பதே. அதே சமயம் நிலையான தீவிரத்துடன் பெண்ணியச்சிந்தனை வெளியை உருவாக்கமுடியும்.

இன்றும் அந்த இடம் வெற்றிடமாகவே உள்ளது. இன்றும் பதிப்பாளர்களுக்கு, பெண் இலக்கியவாதிகளை, படைப்பாளிகளை நல்ல சன்மானம் கொடுத்து படைப்புகளை வாங்கிப் பதிப்பிக்கும் துணிவில்லை என்று தான் சொல்லவேண்டும். இதற்குக் காரணம், ஒருவேளை, சுயபாதுகாப்பின்மை உணர்வோ என்று கூடத் தோன்றும்.

உண்மையிலேயே, பெரியார் தன் நூல்கள் வழியாகச் செய்தது போல பெண்ணியம் தொடர்ந்து எழுதப்படுவதும், பதிப்பிக்கப்படுவதும், பரப்பப்படுவதும் ஒரு பதிப்பகத்தின் தேவையைக் கோரும் அளவிற்குப் பிரமாண்டமானது. 

ஒட்டுமொத்த பெண் எழுத்தாளர்களையும் நல்ல சன்மானம் கொடுத்து அவர்களின் படைப்பாற்றலை சமூகத்திற்குப் பயன்படுத்துக்கொள்ளும் வழியும் இருக்கிறது. மேலை நாடுகள் இவ்விடயத்தில் பெருமளவு முன்னேறியிருக்கிறார்கள்.

ஒரு நல்ல பதிப்பாசிரியர், இதன் பொருள் உணர்ந்த பதிப்பாசிரியர், முதலீடு செய்யக்கூடிய பதிப்பாசிரியர் மிகுந்த தனித்துவமும் வேகமும் கொண்டியங்கக்கூடிய பதிப்பகம் ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்தலாம்.

ஏனெனில், இன்றும் தொடக்க நிலையிலே இருக்கும் பெண்ணியப்பிரச்சனைகள், சாதிய பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் நாளொரு வண்ணத்துடன் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தடுத்து நிறுத்த, விழிப்புணர்வை ஏற்படுத்த 'புற்றீசல்கள் போல' நூல்களே தேவை.

அந்த இடம் வெற்றிடமாகவே உள்ளது.

குட்டி ரேவதி

பனிக்குடம் - நூல் பதிப்பின் வழியாக ஓர் இயக்கச்செயல்பாடு


பனிக்குடம் கடந்த மூன்று வருடங்களாக பெண்ணிய இலக்கியங்களையும் பெண்களின் படைப்பாக்கங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக இத்தகைய பெண்ணிலக்கிய கவனக்குவிப்புச் செயல்பாட்டை படைப்பாக்கச்செயல்பாட்டோடு இணைத்துப்பார்க்கும் பணியில் பனிக்குடம் தீவிரப்பட்டுள்ளது.

தமிழ்ச்சூழலில் பெண்களின் படைப்புகள் பெரிதும் கவனமும் அரசியல் முக்கியத்துவமும் பெற்றுவரும் சூழலில் வெறும் வியாபார முக்கியத்துவத்துடனே மட்டும் அணுகப்படுவதைத் தவிர்க்கவும் பரவலான வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் கொண்டு செல்லவும் பனிக்குடம் முனைந்துள்ளது. பெண்ணியம் என்பது எழுதப்படுவதற்கான தத்துவம் மட்டுமேயன்று. தற்காலத்தொடர்பான இலக்கியங்களையும் பெண்ணியம் தொடர்பான மொழிபெயர்ப்பு மற்றும் மறுபதிப்பு படைப்புகளையும் வெளிக்கொணர இருக்கிறது. மிக அழகாகவும் அர்த்தப்பூர்வமான வடிவிலும் கொண்டுவர இருக்கிறது. பெண்ணிலக்கியங்களையும் பெண்ணியப் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முயற்சியைப் பனிக்குடம் பரந்த அளவில் எடுத்துச்செல்ல இருக்கிறது.

பெண்ணியப் பேச்சை இலக்கியம் அரசியல் உரையாடல் இயக்கம் மூலமே முழுமையானதாகவும் காத்திரமானதாகவும் ஆக்கமுடியும். அதற்கு பெண்ணியத்தளத்தின் வெற்றிடங்களை இனங்கண்டறிந்து அரசியல்படுத்தவும், பெண்ணிய இலக்கியப்பரப்பை விரிவுபடுத்தவும் வேண்டியிருக்கிறது. பெண்ணியத்தளம் பெண்களின் தொடர் ஆக்கங்களான நாவல் கவிதை சிறுகதை கட்டுரைகள் வழியாகத் தீவிரப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இலக்கியத்தளத்தில் ஏற்பட்ட இம்முளைகளை உறுதிப்படுத்தும், விரிவாக்கும், விதமாக பெண்ணியத்தின் ஆழமான உயிரோட்டமான, இதுவரையிலும் கவனிக்கப்படாதிருந்த இலக்கிய வடிவங்களை ’பனிக்குடம்’ மீட்டுக் கொண்டு வரும் செயல்பாட்டில் இறங்கியுள்ளது.

பனிக்குடத்தின் இப்பெண்ணிய இலக்கிய பதிப்பு முயற்சி, வழக்கொழிந்துபோன பெண்ணியப்பாதைகளை மீள்விசாரணை செய்தல், தனித்த சிறப்பான பெண்ணிய முறைமைகள் சார்ந்த கட்டுரைத்தொகுப்புகள், மேலைப் பெண்ணியத்தத்துவங்கள் பற்றிய மொழிபெயர்ப்புகள், பிறமொழி பெண்படைப்பாக்கங்களின் மொழிபெயர்ப்புகள், நவீன வாசிப்புக்குட்படுத்த வேண்டிய மூத்தப் பெண்படைப்பாளிகளின் படைப்புகளின் மறுபதிப்புகள், ஈழப்பெண்களின் புத்துயிர்ப்பு ஆக்கங்கள் என விரியப்பார்த்திருக்கிறது. இதுவரை பனிக்குடம் குட்டி ரேவதியின் பெண்ணீய கவிதை ஆக்கங்ளையும் கு. உமாதேவியின் கவிதை ஆக்கம், ஈழப்புலத்திலிருந்து புத்துயிர்ப்புடன் கவிதை அளிக்கும் தமிழ் நதி, பஹீமா ஜஹான் போன்றோரின் படைப்புகளையும் உருவாக்கித்தந்துள்ளது. ப. சிவகாமியின் உடலரசியல் இந்தியச்சூழலில் இயங்கும் சாதியத்தை மறுக்கும் விசாரணைகளுடன் வந்துள்ளது. குறுகிய காலத்தில் தனது சாத்தியப்பாடுகளை தேர்ந்தெடுத்த படைப்புகளால் நிரூபித்துள்ளது.

மேலும் ’பனிக்குடம்’ என்னும் பெண்ணிய இலக்கியச்சிற்றிதழையும் புதிய பெண்ணிய இலக்கிய வகைக்கான ஊடகமாகவும் உரையாடல் வெளியாகவும் தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறது. இதனால் இளம் பெண்படைப்பாளிகளின் சிந்தனை வெளியாகவும் படைப்பாக்க வெளியாகவும் அது தன்னை மாற்றிக்கொண்டது. பெண்ணியத் தளத்தின் வெற்றிடங்களை இனங்கண்டறிந்து அரசியல்படுத்தவும் பெண்ணிய இலக்கியப்பரப்பை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

2009 முதல் பனிக்குடம், தீவிரமான பதிப்பகமாக இயங்கிவரும் ஆழிப்பதிப்பகத்துடன் கைகோர்த்து இதே பனிக்குடம் என்ற சிறப்புப்பெயர் மற்றும் முத்திரையுடன் வெளிவர இருக்கிறது. பனிக்குடம் பதிப்புகளை ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட இருக்கிறது. பெண்ணியப் பதிப்பாசிரியர்கள் ஒரு குழுவாக இப்புத்தகத்தயாரிப்பில் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்புதிய நூல்களுக்கான வெளியீட்டு விழாக்களும் விவாதக் களங்களும் திறக்கப்பட இருக்கின்றன. இலக்கியம் – இயக்கம் – நிபுணத்துவம் என முப்பரிமாண வடிவில் இப்புத்தகத்தயாரிப்புப் பணியை பரிணமிக்கச் செய்ய இருக்கிறோம். கல்லூரிகள், அமைப்புகள், இயக்கங்கள் என பெண்ணிய முளைகளுக்கான விளைநிலங்களாக இருக்கும் இடங்களிலெல்லாம் இந்நூல்கள் பெண்ணியத்தின் பிரச்சார கருவிகளாக பயன்படுத்தப்பட இருக்கின்றன.

நூல்கள் திறந்து தரும் உலகங்களுக்குள் பயணிக்க வாருங்கள்!




குட்டி ரேவதி