நம் குரல்

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இவர்களால் ஆடுகளைத்தான் பலியிடமுடியும். சிங்கங்களை அல்ல - கலையும் அரசியலும்!




'எது கலை?' என்பதற்கான பதில், ஊடகங்களில் அதிகாரம் நிறைந்தவர்களாலேயே எப்பொழுதும் நிறுவப்படுகிறது என்பது புதிது அன்று.

அதிலும், குறுகிய அரசியல் பார்வைகளும், அதற்கான சனநாயக ஊடகங்களின் வாய்ப்பும் பெருகிவிட்ட நெருக்கடிக்கிடையில், 'நம் படைப்பு கலையே!' என்பதை வாதிடுவதற்கான வாய்ப்பும் மெளனமாகிவிடுகின்றது.
எங்கெங்கும் சாதியின் வலைகள் பின்னி இறுகிக்கிடக்கின்றன. எல்லோரின் கழுத்துகளையும் நெரிக்கின்றன. பாரபட்சமும், தான் விரும்பியதை முன்மொழிந்து அதையே ஆதரிப்பது என்ற அதிகாரமும் காலங்காலமாய் இருந்து வரும் கடைந்தெடுத்த சாதியமுறைகள்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கான கலைவடிவம் கூர்மையடையும் பொழுதெல்லாம் கலைத்துவிடுவதும் இவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.
எல்லா இயக்கங்களும் பாதைகளும் இறுகி நிறுவனமாகிப் போன பேனர்களாகிவிட்டன.
தனிமனிதர்களைப் பற்றிய முன் அபிப்ராயங்களும் நிறைந்து, அவர் குறித்த வெறுப்பே காய்களை நகர்த்தத்தூண்டுகின்றன.

இந்நிலையில், கலை என்பது அதிகாரம் நிறைந்தவர்களின் கைகளிலும் ஆதிக்கம் நிறைந்தவர்களின் கைகளிலும் தான், தன் இருப்பைப் பத்திரப்படுத்திக்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறது.
கலையின் விளக்கங்கள் உண்மையில் அங்கிருந்து எழுவது இல்லை. ஓரிடத்திலிருந்து நாளுக்கு நாள் நகர்ந்தும், மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளர்ந்தும், புதுக்கொள்கைகளுடன், திறந்த மனதுடன் புத்தாக்கம் செய்து கொள்பவர்களின் கைகளில் இருக்கின்றன.
அன்றாட நாட்களின் கனத்தில், தற்காலிகமான, அதிகார சொகுசுகளுக்கு எல்லாம் இரையாகிப்போகாமல் இருக்கவும், ஒற்றையாக நின்றாலும் நாம் சொல்லவரும் அரசியலின் கலைவடிவத்திற்கு நேர்மையாக இருக்கவும் மிகப்பெரிய துணிச்சலும் பலமும் வேண்டும்.
அம்பேத்கரின் கூற்றை இங்கே வலியுறுத்துகிறேன்: ஆடுகளைத் தான் பலியிடுவார்கள். சிங்கங்களை அல்ல. சிங்கங்களாய் இருப்போம், நண்பர்களே!



குட்டி ரேவதி

ஜாதியை ஒழிக்கும் வழி!


டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் "The Annihilation of Caste" நூல் மீண்டும் விவாதத்திற்கு வருகிறது.
இணை எழுத்தாளர் என்று எழுத்தாளர் அருந்ததிராயின் பெயர் போடப்பட்டு விற்கப்படுகிறது.
காலந்தோறும், ஒடுக்கப்பட்டவர்களின் அறிவாற்றலும் படைப்பாற்றலும் சூறையாடப்படுவதும் சுரண்டப்படுவதும் மறைக்கப்படுவதும் வழக்கம் தான்.
இன்னும் விட்டால், அம்பேத்கரின் போராட்டவரலாறு கூடத் தாங்கள் அறிந்ததே சரி என்று வாதிட்டு எழுதுவார்கள்.
என்றாலும், இந்நூல் விடயத்தில் இவ்வாறு நடக்கக்காரணம், இந்நூலை சமூகத்திற்குத் தேவைப்படும் அளவிற்கு நாம் பரவலாக இதை வழங்கவில்லை என்பது தான்.
அது பள்ளிப்பாடமாக இருக்கவேண்டிய மிகவும் அடிப்படையான சமூகவியல் நூல். சாதிச்சமூகம் என்ன மனநிலையுடன் இயங்கும், அது எப்படி மனிதர்களிடையே பிரிவினைகளை மட்டுமே ஆதரிக்கும் என அதில் அம்பேத்கர் முன் வைத்திருக்கிற தர்க்கமும் ஆய்வு விளக்கமும் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் போய்ச்சேரவேண்டியது.
இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கவேண்டிய நூல்.
கடந்த ஆண்டுகளில், கடந்த காலத்தில் எத்தனை இலக்கிய இயக்கங்கள், அமைப்புகள் இந்நூலை அச்சாக்கி வெளியிட்டு மக்களிடம் பரவலாக்கியுள்ளார்கள். எத்தனை படைப்பாளிகள் இதைப்பற்றிப்பேசி, எழுதியிருக்கிறார்கள். சாதி ஒழிப்பு பேசும் அமைப்புகள் கூட, இந்த நூலை ஒரு கள ஏடாகப் பயன்படுத்தியிருக்க முடியும்.
இந்நூலை அதிகமாக அச்சிட்டு வெளியிட்டது, 'தலித் முரசு' இதழ் மட்டுமே.
இவ்வாறு நமக்கான கருவூலத்தை நாமே செவ்வனே பயன்படுத்தத் தவறும்போது, இப்படியான சமூகத்தவறுகள் நடக்க நாமே வாய்ப்பாகிவிடுகிறோம் என்று தோன்றுகிறது.
நூலுக்கு ஒரு விலையை நிர்ணயிக்க முடியாதபடி, நாமே அந்தூலை சமூகமயப்படுத்தி, பொதுவுடமையாக்கவேண்டும்! இதுவே இம்மாதிரியான சூழ்ச்சிகளை வெல்லும் வழி!



குட்டி ரேவதி