நம் குரல்

'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்' நூல் வெளியீட்டு விழா















'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்' நூல் வெளியீட்டு விழா 6.1.2012 அன்று சென்னையில் சிறப்பாகவும் எளிமையாகவும் நடைபெற்றது. ஆட்களைக் கவர்வதற்கான எந்தத் தந்திரமும் இன்றி, முழுமையும் இலக்கிய விழாவாகவே நடத்திக்காட்டியதற்கு நாதன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அஜயன் பாலாவிற்கும், முழு விழாவையும் ஒருங்கிணைத்திருந்த தமிழ் ஸ்டுடியோ அருணுக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்!

முக்கியமான விஷயம், நிகழ்ச்சியில் பேசிய படைப்பாளிகள் எல்லோரும் நூலை முழுமையாக வாசித்து அதுபற்றிய நுட்பமான தம் கருத்துக்களைநேர்மையாகப் பதிவு செய்தது. அழகிய பெரியவன், யாழன் ஆதி, தமயந்தி, பாலை நிலவன், பிரவீண், அஜயன் பாலா ஆகியோர் அவ்வாறு அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு கட்டுரை வாசித்தும் உரையாற்றியும் நூலுக்கான பரந்த முக்கியத்துவம், அதற்கான சமூகத்தொடர்பு, அரசியலைப் பதிவு செய்தது உண்மையிலேயே உள மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது. திரை ஆளுமைகளையும், அரசியல் ஆளுமைகளையும் அழைத்து இலக்கியங்களை அணுகுவதற்கானமேடை அமைத்துக்கொடுப்பது என்பது எனக்கு எப்பொழுதுமே ஒரு நேர்மையற்ற செயலாக இருந்திருக்கிறது. அதை இந்த விழாவின் வழியாக, இதில் கலந்து கொண்டோர் அனைவர் வழியாகவும் மீறியிருக்கிறோம்! நிகழ்விற்கு வர விருப்பம் இருந்தும் இயலாமல், வெளியிலிருந்து உறுதுணையாக நின்ற நண்பர்கள் அனைவருக்கும் கூட என் நன்றிகள்!

நூலை எழுத்தாளர் அழகிய பெரியவன் வெளியிட, கவிஞர் அனார் பெற்றுக்கொண்டார். எனக்கு ஜீவநாதன் வரைந்தளித்த ஓவியமொன்று பரிசளிக்கப்பட்டது!கவிஞர் தமிழ்நதி முழு நிகழ்வும் கலந்து கொண்டு சிறப்பித்தார்!

'முலைகள்' கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழாவிற்குப் பின் இது தான் நான் எழுதிய நூல் ஒன்றுக்கு நடக்கும் வெளியீட்டு விழா!ஆனால், இதில் கலந்து கொண்டோர் இந்நிகழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட விதமும், அது குறித்த தம் பார்வையைப் பதிவு செய்த அழகும், நேர்மையும்இந்நூலை ஒரு பொதுநூலாக ஆக்கியுள்ளது! இதைத்தான் நான் அதிகமும் எதிர்நோக்கினேன்! எல்லோருக்கும் மிக்க நன்றி!



குட்டி ரேவதி


கருத்துகள் இல்லை: