நம் குரல்

காவியம்



‘காவியம்’ என்ற தலைப்பில் மூன்று கவிஞர்கள் எழுதிய கவிதைகள்.
வேறுபட்ட அவற்றின் பொருள் நயத்திற்காகவும் உணர்வெழுச்சிக்காகவும்
அவற்றை ஒரே சமயத்தில் சுவைத்துப் பாருங்கள்.




காவியம்

முடிவின்றிச் சென்று கொண்டிருக்கிறது
அரசரின் கட்டைவண்டி
ஒரு கையால் நடக்கும் ஊனமுற்றவன்
ஓட்டிச்செல்கிறான் அதை
வெண் உறை அணிந்திருக்கிறது ஒரு கை
நுகத்தடியைப் பற்றியிருக்கிறது மறு கை
கால்களிரண்டை அவன் இழந்தது வரலாறு
என்றோ நிகழ்ந்துவிட்டது அது
கால்கள் அங்கேயே
உலவிக்கொண்டிருக்கின்றன
வரலாற்றில் தான்
ஒவ்வொரு காலும் அதனதன் போக்கில்
நேருக்கு நேர் அவை சந்திக்கும்போது
ஒன்றையொன்று உதைத்துக்கொள்கின்றன
போர் என்றால் அப்படித்தான்
வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள்.


-பிரெஞ்சுக் கவிஞன் ழாக் ப்ரெவர்
மொழிபெயர்ப்பு வெ.ஸ்ரீராம்






காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

-கவிஞன் பிரமிள்






காவியம்

எட்டுத்திக்குகளும் மதர்த்தெழுந்து கைகட்டி நிற்க
எந்த ஓர் அற்புத விளக்கை
நான் தீண்டி விட்டேன்?

கைகட்டி நிற்கும் இப்பூதத்தை ஏவிக்
காவியமொன்று பெற்றுக்கொள்வதெளிது.
ஆனால் திக்குகளதிரத் தாண்டவமாடும் மூர்த்தி
நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?

-கவிஞன் தேவதேவன்




கருத்துகள் இல்லை: