நம் குரல்

கருச்சிதைவு, ஏன்?


கடந்த சில மாதங்களாக, கருவுற்ற சில பெண் தோழியருக்கு எதிர்பாராமல் கருச்சிதைவு ஏற்பட்டு அவர்கள் துன்புறுவதைத் தொடர்ந்து கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
மூன்று மாதம் முதல் எட்டு மாதம் வரையிலும் கூட, இச்சிதைவு ஏற்படுகிறது.

இதற்கு முக்கியமான காரணம் என்று நான் கருதுவது: நாம் உண்ணும் இராசயன அரிசியும், அதிக மன அழுத்தங்களும் தான்.
இரசாயன அரிசியை உண்ணும்பொழுது, அது, நெல்லில் 'சாவி' என்று சொல்வார்களே. அது போல், உள்ளீடற்ற அரிசிக்கூடாக, நாக்கிற்குச் சுவையற்றதாக இருக்கிறது. 
நம் கோடைப்பருவங்களுக்கு ஒருவேளைக்கு மேல் வைத்திருக்கமுடியாது, வியர்த்து ஊசிப்போய்விடுகிறது.

இந்த அரிசியில், கொஞ்சமும் ஊட்டம் இல்லை. இதில் இருக்கும் அதிகப்படியான இரசாயனம், ஒரு தற்காலிகப் பசியைப் போக்கிய, உயிர்ச்சத்தை வழங்கியதான தோற்றத்தையே கொடுக்கிறது.

இத்தகைய அரிசி, இயல்பாகவே, கருப்பையுடன் சிசுவின் பிணைப்பை மிகவும் மெல்லியதாக, ஒடிசலாக ஆக்குகிறது. அது, சிறிய பளு தூக்கினாலும், அடிவயிற்றிற்கு மிகையான அழுத்தம் கொடுத்து, சிசுவின் பிணைப்பை மிகவும் எளிதாகத் துண்டித்துவிடுகிறது.

மனஅழுத்தம், அதிக வகையான உணர்ச்சிகளின் பரப்புகளுக்குப் பெண்கள் தங்களை ஒப்படைப்பதாலும், அளவுக்கதிகமான சவால்களை எதிர்கொள்வதாலும் உண்டாகிறது.
நம் அன்னையர் பல குடம் நீர் சுமக்கும், மூட்டைகளை சுமக்கும் வலு பெற்றிருந்ததற்கு அவர்கள் உண்ட 'ஊட்டமிக்க அரிசி தானியங்கள்' மிகவும் முக்கியமான காரணம்.
எட்டுமாதச் சிசுவை இழந்த ஒரு பெண்ணுக்கு, தான் ஒரு சிசுவை ஈன்ற உணர்வும் அதை இழந்த உணர்வும் தன்னை விட்டுப்போகாமல் இருப்பதாகவும், கடுமையான மனஉளைச்சலைக் கொடுப்பதாகவும் கூறுகிறாள்.

மனித உடல், மில்லியன் வருடங்களாகத் தொடரும் ஒரு நினைவின் மரபு. உடலுடன் இருந்ததை, உறுப்புகளை, உடலை, சிசுவை, சுவையை ஒரு பொழுதும் மறப்பதே இல்லை.
தயவுசெய்து, எல்லோரும் இயற்கையான அரிசிக்குத் திரும்புங்கள். உயர்விலை என்பதெல்லாம், நாம் அதிகப்படியான கொள்முதல் செய்யாததால் விளைவது.

நம் உடலே இப்படி என்றால், நம் குழந்தைகளுக்கோ மிகவும் பூஞ்சையான, உடல்நலமற்ற, நோய்நிறைந்த உடலையே நாம் 'அன்பளிப்பாக்குகிறோம்' என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இயற்கை அரிசிக்குத் திரும்பிப்பாருங்கள். அதன் சுவையும், பயனும் சொல்லித் தீராதது. இந்த உணவிற்குப் பழகிவிட்டால், மீண்டும் அந்த 'பளிச்' வெள்ளை அரிசிக்குத் திரும்பவே மாட்டோம்.


குட்டி ரேவதி

1 கருத்து:

ezhil சொன்னது…

அரிசி மட்டுமல்ல அனைத்துமே இயற்கை விவசாயமாய் இருந்தால் மிக்க நலம். ஆனால் எல்லோராலும் பயனராகத்தக்க விலையில் இல்லையே என்பதுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது